ஜிஎஸ்எல்வி எப் 10 செயற்கைக்கோள் மீண்டும் வெற்றிகரமாக ஏவப்படும் என்கிற நம்பிக்கை நூறு சதவீதம் உள்ளது. தன்னம்பிக்கையே வெற்றி தரும்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 13 வயது சிறுமி கடிதம்
தேவகோட்டை - ஜிஎஸ்எல்வி எப் 10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் , கடின உழைப்பு, தன்னம்பிக்கை இரண்டும் இருப்பதனால் வெற்றி நிச்சயம் என 13 வயது சிறுமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கைப்பட உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளது சமூகவலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
சமீபத்தில் ஜிஎஸ்எல்வி எப் 10 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படும் என்று அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர். விண்ணில் ஏவப்பட முயற்சிக்கும்போது சில தொழில்நுட்ப கோளாறுகளால் விண்ணை சென்று அடைவது முடியாமல் போய் விட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டது.
கொரனோ காலத்திலும் மக்களுக்கு உதவும் வகையில் இஸ்ரோ தீவிர முயற்சி எடுத்து செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தது. இந்த ராக்கெட்டில் முதன்முறையாக வெப்பத்தில் இருந்து அதிக எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் அதில் உள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது.இஸ்ரோ வரலாற்றில் இது முதல் முயற்சியாகும். ஆனால் விஞ்ஞானிகள் கடுமையான முயற்சி எடுத்தும், இது செயல்படுத்த முடியாமல் ஆகிவிட்டது. இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் கனிகா என்ற 13 வயது சிறுமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . தங்களின் விடாமுயற்சி வெற்றி பாதையில் செல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தலைப்பிட்டு உள்ள இந்த கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : மதிப்பிற்குரிய ஐயா, அவர்களுக்கு வணக்கம். நாங்கள் அனைவரும் தங்களைப் போலவே மிகுந்த ஆவலுடன் ஜிஎஸ்எல்வி எப் 10 விண்ணில் வெற்றிகரமாக செல்வதை பார்க்க ஆவலுடன் இருந்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக இலக்கை அடையவில்லை என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தொடர் வெற்றி மகிழ்ச்சியை தந்தாலும், பின்னடைவுக்கு பிறகு வரும் வெற்றி அதிக மகிழ்ச்சியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வெற்றி சிரித்து வாழ வைக்கும், பின்னடைவு சிந்தித்து வாழ வைக்கும். வைரம் (கரிதுண்டு ) பட்டை தீட்டுவதன் மூலம் தான் பிரகாசமடைகிறது. வாழ்க்கையில் மனிதனும் பல துன்பங்களை எதிர் கொள்ளும்போதுதான் புகழ் பெறுகிறான் . ஆகவே தங்களின் விடாமுயற்சி வெற்றிப் பாதையில் செல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். நன்றி. வணக்கம். இவ்வாறு எழுதியுள்ளார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி கனிகா இஸ்ரோ தலைவர் சிவனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ,ஜிஎஸ்எல்வி எப் 10 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படாதது வருத்தமாக இருந்தபோதிலும், தங்களின் விடாமுயற்சி வெற்றிப் பாதையில் செல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தனது கைப்பட கடிதம் எழுதி அனுப்பி உள்ளார் . இந்த தகவல் ட்விட்டர்,வாட்சப் உள்ளிட்ட பல்வேறு இணைய தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
செயற்கைகோள் தொடர்பாக மாணவி நதியா பேசியுள்ள வீடியோ
https://www.youtube.com/watch?v=t7g12ksEdTo
No comments:
Post a Comment