Saturday 9 May 2020

 ஆளுமைகளுடனான அனுபவம்

ஹாங்காங் நாட்டின் தமிழ்ச் சமூகப் பிரமுகரும், பொறியாளருமான  ராமநாதன் அவர்களுடன் பழகிய அனுபவம்


                                தாய்வழிக்  கல்வியின் சிறப்பைப் பற்றியும் அரசு கல்லூரிகளின்  மேன்மை பற்றியும் ஹாங்காங் வாழ்க்கை பற்றியும் எனது கருத்துக்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். உரையைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளும், நிகழ்ச்சியின் நிறைவாக உரையைப் பற்றிய மாணவர்களின் கருத்துரைகளும் என்னை வியப்பில் ஆழ்த்தின. மாணவர்கள் கலந்துரையாடலில் முழுமையாய் பங்கேற்ற விதம் சிறப்பானது, இவர்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
                             இதைச்  சாதித்து வரும் ஆசிரியர்களுக்கும் குறிப்பாக தலைமையாசிரியர் எல். சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 மு. ராமநாதன்
பொறியாளர்
ஹாங்காங்.





             ஹாங்காங் நாட்டின் தமிழ்ச் சமூகப் பிரமுகரும், பொறியாளருமான  ராமநாதன் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து எழுதிய பாராட்டு வரிகள்தான் மேலே உள்ளது.

கல்லூரி முதல்வர் மூலம் முதல் சந்திப்பு :

                          ஹாங்காங் பொறியாளர் ராமநாதன் அவர்களது எழுத்துக்களை இந்து தமிழ் நாளிதழ்  வழியாக பலமுறை  படித்து ரசித்து உள்ளேன். அதன் பிறகுதான் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் திரு. சந்திரமோகன் அவர்களின் நண்பர்தான் திரு. ராமனாதன் என்பதை அறிந்து கொண்டேன்.திரு. இராமநாதன் அவர்களின்  சொந்த ஊர்  காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி  என்றும் அவர் வந்தால், எனக்கும் ஒரு தொடர்பு தெரிவித்து உதவுமாறு  முதல்வர் அவரிடம் அன்புடன்  கேட்டுக் கொண்டிருந்தேன்.

மாணவர்களுடன் கலந்துரையாடி நிகழ்வு மறக்கமுடியாதது :

                                              இந்நிலையில் ஒருநாள் ராமநாதன்  அவர்கள் கல்லூரியில் மாணவர்களுடன் ஒரு நிகழ்வில் பங்கேற்க வருவதாக தகவல் முதல்வர் மூலமாக அறிந்தேன். எங்கள் பள்ளிக்கும் வருமாறு  சென்று அழைத்து இருந்தேன். அந்த நேரத்தில் பொறியாளர் ராமநாதன் அவர்கள் கல்லூரி நிகழ்வுக்கு   மனைவி மற்றும் மகள் ஆகியோர் உடன் வந்திருந்தார்கள். எங்கள் பள்ளிக்கு வரும்போது பொறியாளர் மு.ராமநாதன் அவர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். மாணவர்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் செய்தார்கள். எங்கள் பள்ளியின் நிகழ்வுகளை பார்த்தார்கள்.மாணவர்கள் ஹாங்காங் தொடர்பாகவும், அந்நாட்டின் கல்வி முறை தொடர்பாகவும், உயர்கல்வி தொடர்பாகவும் , கல்வி படிப்புகள் தொடர்பாகவும் பல சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டார்கள். மாணவர்கள் அன்னாருடன் கலந்துரையாடிய விபரங்களை தொகுத்து அழகாக கூறினார்கள். அப்பொழுது ராமநாதன் அவர்கள் மிகவும் அன்போடு அவர்களை பாராட்டி பேசியதுடன் , இதுபோன்ற பள்ளியை பார்த்தது கிடையாது. மாணவர்கள் மிக அருமையாக உள்வாங்கி தொகுத்துக் கூறுகிறார் என்று வாழ்த்து தெரிவித்தார்கள். 

தொடரும் சந்திப்புகள் :

                     அதன்பிறகு சில முறை ராமநாதன் அவர்களை அரியக்குடியில் அன்னாரது வீட்டில் சந்தித்து உள்ளேன். சந்திப்புகளில் அவரிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அவர்களும் அன்போடு கல்வி குறித்தும், பள்ளி குறித்து பலமுறை என்னிடம் பேசி உள்ளார்கள், இன்றளவும் இந்து  தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. சமுதாயம் தொடர்பாகவும், சமூகம் தொடர்பாக அவருக்கு பல்வேறு நல்ல முற்போக்கு எண்ணங்கள் உள்ளது. 

 புதிய அனுபவத்தை வழங்கிய பள்ளி :

          எங்கள் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு சென்றவுடன் தனது மனைவியிடம் நீங்கள்  அவசியம் அந்த பள்ளிக்கு வந்து இருக்க வேண்டும். மாணவர்கள் அவ்வளவு அருமையாக  பேசுகிறார்கள்,இப்பள்ளிக்கு சென்றது எனக்கு புதிய அனுபவம் என்று பாராட்டி மகிழ்ந்தார்கள் .அதன் பிறகு இந்தியா குறித்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு சூழ்நிலைகள்  குறித்தும் , அவரும், அவரது துணைவியாரும் என்னிடம் பல்வேறு நிகழ்வுகளை பேசினார்கள். ஹாங்காங்கில் இருக்கக்கூடிய நிலைகள் பற்றியும் விரிவாக பேசினார்கள். 

 ஹாங்காங்கில் பொதுப்போக்குவரத்துக்கு முக்கியத்துவம் :

                  தான்  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாங்காங் நாட்டில் வசித்து வருவதாகவும், பொதுப் போக்குவரத்தையே தான் அதிகமாக பயன்படுத்துவதாகவும், இரு சக்கர வண்டி ஓட்டுவதற்கு கூட தற்காலத்தில் மறந்து விட்டதாகவும் ,முன்பு தெரிந்து இருந்தும் தற்போது அங்கு அது தேவைப்படாத காரணத்தினால் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த அந்நாட்டு அரசு ஊக்குவிப்பதால்  இருசக்கர வாகனம் ஓட்டுவது என்பதே தனக்கு தற்பொழுது மறந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த அளவிற்கு ஹாங்காங்கில் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெறுவதாகவும் கணவனும் மனைவியும் எடுத்துக் கூறினார்கள். அவர்களுடனான நட்பு இன்றுவரை தொடர்கின்றது. 

ஹாங்கங்குக்கே சென்று வந்த அனுபவம் :

                      ஹாங்காங் குறித்து எங்கள் பள்ளி மாணவர்களுக்கு அன்னார் அவர்கள் விளக்கிய நிகழ்வு ஹாங்காங் நாட்டிற்கே சென்று வந்தது போல் பல்வேறு தகவல்களை இயல்பாக எடுத்துக் கூறினார்கள்.மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அன்பாகவும், அழகாகவும் பதில் கூறினார்கள். அவர்களுடனான நட்பு மறக்கமுடியாது. மாணவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்துவதாக  இருந்தது . 

நன்றிகள் பல :

                இந்த  நல்ல நிகழ்விற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த திரு. சந்திரமோகன் அவர்களுக்கும், நல் உள்ளங்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 நன்றி கலந்த அன்புடன் 

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
 தேவகோட்டை.
 சிவகங்கை மாவட்டம்.
8056240653

 ஹாங்காங் நாட்டின் தமிழ்ச் சமூகப் பிரமுகரும், பொறியாளருமான  ராமநாதன் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடியநிகழ்வு வலைத்தளத்தில் கேள்வி பதில்களுடன் காணலாம் :


 https://kalviyeselvam.blogspot.com/2016/08/blog-post_26.html#more




No comments:

Post a Comment