Saturday 16 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

ரோபோட்டிக்ஸ் வல்லுனர் கென்னித் ராஜ் அவர்களுடனான ( தூய்மை பணியாளர் மகன் ) அனுபவம்

    இதுவரை கண்ட அரசுப்பள்ளிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுடைய மாணவர்களை இங்கு காண்கிறேன். நிச்சயம் அர்ப்பணிப்புள்ள இந்த ஆசிரியர்கள் இம் மாணவர்களை ஒளிரச் செய்வார்கள். அவர்களின் இம்முயற்சியில் ரோபோடிக்ஸ் துறை சார்பாக நானும் பங்களித்தது மிக மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து பயணிப்போம்.

 மகிழ்வுடன்
அன்பு. கென்னித்ராஜ்,
ரோபோட்டிக்ஸ் வல்லுனர்,
 சென்னை.



                                                 ரோபோட்டிக்ஸ் வல்லுனர் கென்னித் ராஜ் அவர்கள்  ( தூய்மை பணியாளர் மகன் ) எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.
                              
அறந்தாங்கி திசைகள் அமைப்பு மூலம் அறிமுகம் :

                                                             ரோபோட்டிக்ஸ் வல்லுநர் கென்னித் ராஜ் அவர்களுடனான அறிமுகம் .அறந்தாங்கி திசைகள் அமைப்பின்  மூலம்  எனக்கு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அவர்களை தொடர்பு கொண்டு எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் தொடர்பாக ஒரு அறிமுகம் வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொண்டேன். அன்னார் அவர்கள் அழைப்பை உடன் ஏற்றுக்கொண்டு சென்னையில் இருந்து கிளம்பி பல்வேறு பணிகளுக்கிடையில் தேவகோட்டைக்கு முதல் நாள் மாலை வந்தடைந்து, அறை எடுத்து தங்கி இருந்தார்கள். காலையில் எங்கள் ஆசிரியர்களின் உதவியுடன் அவர்களுக்கு காலை உணவு வழங்கி, அதன்பிறகு எங்கள் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும் ரோபோட்டிக்ஸ் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் ரோபோடிக்ஸ் தொடர்பான விளக்கங்களை மிக அருமையாக, அழகாக ,சந்தேகங்களுக்கு தெளிவு கொடுத்தார்கள். 

தூய்மை பணியாளரின் மகன் மைக்ரோ கணினி சிப் கண்டுபிடிப்பு  :

                 இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் அவர்கள் பங்கேற்று மைக்ரோ கணினி ஒன்றையும் வெளியிட்டார்கள். ரோபோட்டிக்ஸ் வல்லுனர் கென்னித் அவர்கள் கால்வாய் தூய்மை  செய்யும் தொழிலாளியின் மகன் ஆவார் . இதனை அவரே மிகவும் பெருமையுடன் கூறுகிறார். இவ்வாறு அவர் கூறும் பொழுது மாணவர்களிடையே ஒரு தன்னம்பிக்கை ஏற்படுத்துகின்றது. சாக்கடையை சுத்தம் செய்யும் ஒருவரின் மகன் மிகப்பெரிய வல்லுனராக, ரோபோடிக்ஸ் துறையில் உருவெடுத்துள்ளது மற்ற மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்துள்ளது.

 வறுமையை பொருட்படுத்தாமல் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் - அதுவே வாழ்க்கையில் வெற்றியை தரும் :

                    மாணவர்களிடம் கென்னித் ராஜ் பேசும்போது, என்னுடைய கல்வியின் மூலம் மைக்ரோ கணினியை கண்டுபிடித்து ,ரோபோடிக்ஸ் துறையில் விருது பெற்றுள்ளன். நான் முழுவதும் அரசு பள்ளியில் , தமிழ் வழி கல்வியில் பயின்றவன் என்று கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன்.எனது  தந்தையர் சென்னையில் கால்வாய் சுத்தம் செய்யும் துப்பரவு தொழிலாளி ஆவார் .இதன் காரணமாக சாக்கடை அள்ளும்போது எனது தந்தையுடன் பணியில் உள்ள பலர் வாயு தாக்கி இறந்துபோவது பார்த்து விஷவாயு கண்டறியும் கருவி கண்டுபிடித்துள்ளேன் .துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் முன்பாக, இக்கருவியை உள்ளே செலுத்தினால் உயிரைப் பறிக்கக்கூடிய விஷவாயுக்களான ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் அதிக அளவு இருந்தால், எச்சரிக்கை மணி எழுப்பி உஷார் செய்யும். இதனால், சாக்கடைக்குள் இறங்காமல் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் கென்னித் ராஜ்.இது மட்டுமல்ல பெண்கள், குழந்தைகள், மீனவர்களுக்கு பயன்படக்கூடிய  வகையில்  உருவாக்கியுள்ள ஜிபிஎஸ் கருவி இணைய உதவி இல்லாமலே செயல்படக்கூடியது என்பது அதன் சிறப்பம்சம். அனுமதிக்கப்பட்ட அதிர்வெண்களில் செயல்படக்கூடியது. இதற்கு சாதாரணமாக குறுந்தகவல் அனுப்பினால் போதும்; இந்த ஜிபிஎஸ்ஸை வைத்திருப்பவர் இருக்கும் இடம் கூகுள் மேப் லிங்காக குறுந்தகவலில் வந்துவிடுகிறது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விளிம்புநிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் ரோபோட்டிக்ஸை கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.  

மாணவர்களிடம் கைதட்டி வரவேற்பை பெறும் கென்னித் அவர்களின் பேச்சு :


           இதனை அவர் கூறும் பொழுதும் அவருக்கு ஏற்பட்ட மான, அவமானங்கள், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து தான் கல்விகற்று எப்படியெல்லாம் முன்னுக்கு வந்தேன் என்று மாணவருடன் விளக்கிக் கூறும் பொழுது மாணவர்களுக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன் ஆக இருக்கின்றது, ஜெயிச்சுட்டு பேசுங்க என்பதை நிரூபித்துள்ள கென்னித் ராஜ் அவர்கள் மாணவ சமுதாயத்தில் மிகப்பெரிய ஆளுமை ஆகவே தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகின்றார். கென்னித் ராஜ் அவர்கள் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை அடைய ரோபோடிக்ஸ் துறையிலும்,  மனித ஆளுமையிலும் மிகப்பெரிய வெற்றிகளை அடைய வாழ்த்துவோமாக. கென்னித்  ராஜ் அவர்களுடன்,அவரது உதவியாளர் முருகப்பெருமாள் அவர்களும் வந்திருந்தார்கள். அவர்களும் அவருடன் இணைந்து மிகத் தெளிவாக மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்களை எடுத்துக் கூறினார்கள். கென்னித்  ராஜ்  அவர்களுடன் பேசும் பொழுது பல்வேறு ரோபோடிக்ஸ்  தகவல்களையும்,  இன்றைய சூழ்நிலையில்  மக்கள் குறித்தும், சமூகம் குறித்தும் முன்னேற்றமான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். 

ஜெய்த்து விட்டு பேசும் ஆளுமை :

 சாக்கடை தூய்மை செய்யும் பணியாளரின் மகன் என்று கென்னித் அவர்கள் கூறும்போது மாணவர்களிடம் மோட்டிவேஷன் அதிகமாக வளருதல் :


            சமீபத்தில் அறந்தாங்கி திசைகள் விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற அன்னார்  அவர்கள் மேடையில் பேசும்போது கூட தான் ஒரு தூய்மைப் பணியில் இருப்பவர் என் மகன் என்பதை பெருமையாக கூறிக் கொள்வதாக அங்கு குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பு பேசினார். அப்போது மாணவர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. இந்த வரவேற்புதான் மாணவர்களை மோட்டிவேஷன் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுபோன்று ஒரு ஆளுமை எங்கள் பள்ளிக்கு வந்து மாணவருடன் கலந்துரையாடி பல்வேறு தகவல்களை விளக்கி  சென்றது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக எங்கள் மாணவர்களுக்கு இருந்து வருகின்றது. தொடர்ந்து அன்னாருடன்  தொடர்பில் இருக்கின்றோம்.

 நன்றிகள் பல :

                  சென்னையில் இருந்து எங்கள் பள்ளிக்காக மட்டுமே ஒருநாள் தேவகோட்டைக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்ற கென்னித் ராஜ் அவர்களுக்கும், அன்னார் அவர்களை அறிமுகப்படுத்திய அறந்தாங்கி திசைகள் அமைப்பினருக்கும்,உதவியாளர் முருகப்பெருமாள் அவர்களுக்கும், உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி கலந்த அன்புடன் ,

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,  

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,  
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.  
8056240653 



ரோபோட்டிக்ஸ் வல்லுனர் கென்னித் ராஜ் அவர்கள்  ( தூய்மை பணியாளர் மகன் ) எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு வலைத்தளத்தில் காணலாம் :

 https://kalviyeselvam.blogspot.com/2019/06/blog-post_17.html#more


ரோபோட்டிக்ஸ் வல்லுனர் கென்னித் ராஜ் அவர்கள்  ( தூய்மை பணியாளர் மகன் ) எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு வீடியோவாக காணலாம் :

 https://www.youtube.com/watch?v=wA8lJqsJFLQ

https://www.youtube.com/watch?v=KXbtuga9xR0

 https://www.youtube.com/watch?v=paOiOzYiUKU

 https://www.youtube.com/watch?v=V7Okf0impoY
 
 https://www.youtube.com/watch?v=6hPPzbJAyXM










No comments:

Post a Comment