Monday 18 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

சிக்ரி துணை இயக்குனர் (மத்திய மின்வேதியியல் மையத்தின் ) மற்றும்  மத்திய அரசின் விஞ்ஞானிகளுடனான பள்ளி பகிர்வுகள்



மத்திய அரசின் விஞ்ஞானிகள் பள்ளிக்கு வருகை தருதல் :

                              கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக காரைக்குடியில் இயங்கிவரும் சிக்ரி என்கிற  மத்திய மின்வேதியியல் மையத்தின் துணை இயக்குனர் ஜெயச்சந்திரன் மற்றும் மத்திய அரசின் விஞ்ஞானிகள் பரமசிவம், முரளிதரன், முருகேசன் ஆகிய 4 பேரும் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவியல் தொடர்பாக பல்வேறு விஷயங்களை எடுத்துக் கூறினார்கள் .நாட்டிலேயே முதன் முறையாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பான் கருவியை எங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தி விஞ்ஞானிகள் பேசினார்கள்.அந்த நிகழ்வு நடப்பதற்கு முந்தைய வாரம் எங்கள் பள்ளி மாணவர்கள் சிக்ரியில் நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்காட்சி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . அந்த நிகழ்விற்கு எங்களுக்கு விஞ்ஞானி மீனாட்சிசுந்தரம் அவர்கள் அழைப்பு கொடுத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்து உதவினார்கள். அதன் தொடர்ச்சியாக சிக்ரி நிறுவன துணை இயக்குனர் ஜெயச்சந்திரன் அவர்கள் என்னிடம் கலந்து பேசி 4 விஞ்ஞானிகளும் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் காலை முதல் மாலை வரை நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள் . மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு விடை கூறினார்கள் . 

 நாட்டிலேயே முதன் முறையாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பான் கருவி  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிமுகபடுத்தி விஞ்ஞானி பேச்சு


               சிக்ரியின்  புதிய கண்டுபிடிப்புகள் பற்றி இயக்குனர் ஜெயச்சந்திரன் பேசுகையில், அன்றாட வாழ்க்கை பயன்பெறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறோம். 450 பொருட்கள் கண்டுபிடித்துள்ளோம். பாம்பன் பாலம், அதில் உள்ள ராடுகள் துருப்பிடிக்காமல் இருக்க பெயின்ட் கண்டுபிடித்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது துருப்பிடிக்காத ரயில் தண்டவாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு திண்டுக்கல்லில் 5 கிமீ தூரம் பரிசார்த்த முறையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பேட்டரிகளின் பல்வேறு நிலைகளிலும்,எடை குறைவாகவும் தயாரித்துள்ளோம். ஹைட்ரஜன் அளவை கண்டுபிடிக்கும் புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். அயோடின் உப்பு,மின்முலாம் பூசுதல்,நிக்கல் குரோமியம்,காப்பர்,தங்க முலாம் பூசுதல் போன்றவை  காரைக்குடி சிக்ரி மூலம் தான் முதலில் கண்டுபிடிக்கபட்டது .எவர் சில்வர் நிக்கலில் குரோமியம் சேர்த்து,வாழ்க்கைக்கு இன்றியமையாத சிறிய தொழில் நுட்பங்களை எல்லாம் சிக்ரி கண்டுபிடித்து உள்ளது.தகுதிகேற்றாற்போல் ,அறிவிற்கு ஏற்றார் போல் மூளையில் ,மனதில் அறிவியல் தொடர்பாக சந்தேகங்கள் ஏற்படலாம்.அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் ஒரு கூட்டு முயற்சியாக செயல்படுவது பள்ளி மாணவர்கள் மத்தியில் உந்துதலை ஏற்படுத்துகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். எதிர் காலத்தில் அறிவியல் துறையில் சிறந்து விளங்க, விஞ்ஞானிகளாக உருவாவதற்காகவே பள்ளி கல்லூரிகளில் விஞ்ஞானம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தி வருகிறோம், என்றார். பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தினார்கள். 

 ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் - விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு பாராட்டு :

            மாணவர்களுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கபூர்வமான இருந்ததாகவும்,  எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியாளர்களாக இம்மாணவர்கள் வருவார்கள் என்றும் என்னிடம் ஆர்வத்துடன்  4 விஞ்ஞானிகளும் தெரிவித்து விட்டு சென்றார்கள் .அதன் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பரமசிவம் விஞ்ஞானி அவர்களை முக்கியமான ஒரு இடத்தில் சந்தித்து பேசினேன் . அப்பொழுது நாங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டோம் . இருந்தாலும் உங்கள் பள்ளிக்கு வந்து மறக்க முடியாது. மீண்டும் ஒருமுறை ஜெயச்சந்திரன் ஐயா அவர்களுடன் உங்கள் பள்ளிக்கு நாங்கள் வருகை தந்து  மாணவர்களுடன் கலந்துரையாடுகிறோம் என்று என்னுடன் அன்புடன் கூறிச் சென்றார்கள். 


இளம் வயதில் சிக்ரியை அறிந்து கொண்ட மாணவர்கள் :

                       நான் படிக்கும் காலத்தில் எல்லாம் சிக்ரி என்கிற நிறுவனத்தை கல்லூரி முடிந்த பிறகு காரைக்குடி வந்த பிறகுதான் அறிந்து கொண்டேன். கல்லூரிப் படிப்பு படித்து வேதியல், இயற்பியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு செல்லக்கூடிய மாணவர்களும், முதுகலை  படித்த  மாணவர்களும் சிக்ரி  போன்ற நிறுவனங்களை அறிந்து வைத்திருப்பார்கள், ஆனால் 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிக்ரி என்கிற நிறுவனம் குறித்து அறிய வாய்ப்புகள் மிகக்குறைவு. அதன் உள்ளே செல்வதும்,அதுபற்றி தெரிந்து கொள்ளகூடிய   வாய்ப்புக்கள்  மிகமிக குறைவு. எனக்கு தெரிந்த சிலர்   சிக்ரி பற்றி இப்பொழுது தான் அறிந்துகொண்டோம் என்று கூறி உள்ளார்கள். அந்த நிலையில் ஒரு நடுநிலைப் பள்ளிக்கு சிக்ரியின் மூத்த விஞ்ஞானியும் , மற்ற விஞ்ஞானிகளும் பள்ளிக்கு வந்து மாணவருடன் கலந்துரையாடி பல்வேறு தகவல்களை விளக்கி சொல்லி புரிய வைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அந்த அருமையான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கிய சிக்ரி  விஞ்ஞானிகளுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.மத்திய விஞ்ஞானிகள் நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி பல்வேறு மின் வேதியல் தொடர்பான விஷயங்களை விளக்கிக் கூறியது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாகும் . 

 நன்றிகள் பல :
 
               சிக்ரி  என்பது ஒரு மிகப்பெரிய மத்திய அரசினுடைய நிறுவனம். மத்திய அரசு  அறிவியல் நிறுவனத்திலிருந்து விஞ்ஞானிகள்  பள்ளியை தேடிவந்து மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பாக கற்றுக் கொடுத்துச் சென்ற நிகழ்வு மிகப்பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டது. இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிய சிக்ரி  துணை இயக்குனர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கும், விஞ்ஞானிகள் பரமசிவம், முரளிதரன்,முருகேசன்  ஆகியோருக்கும், இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒத்துழைப்பு நல்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி கலந்த அன்புடன் ,

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம். 8056240653

சிக்ரி துணை இயக்குனர் (மத்திய மின்வேதியியல் மையத்தின் ) மற்றும்  மத்திய அரசின் விஞ்ஞானிகள் மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வினை வலைத்தளத்தில் காணலாம் :

 https://kalviyeselvam.blogspot.com/2015/08/3-1-8.html#more


No comments:

Post a Comment