Sunday 10 June 2018

 பகுதி - 2
இரண்டாம்  நாள் சுற்று பயணம் :

*அறிவியலின் அதிசயத்தை விளக்கும்  விஸ்வேஸ்வரய்யா மியூசியம் 

*இந்திரா காந்தி ராணுவ மியூசியம்


*இசையுடன் தண்ணீர் நடனம் ஆடி அசத்தும் பெங்களூரு இந்திரா காந்தி இசையுடன் நீர் ஊற்று பகுதி

*விதான் சௌதா 




பெங்களூருவில் ஐந்து நாட்கள் சுற்று பயணம்

                      இரண்டாம் நாள் காலையில் நாங்கள் (லெ .சொக்கலிங்கம்)  எங்கள் இருப்பிடத்தில் இருந்து கிளம்பி மெட்ரோ ட்ரெயின் வழியாக கப்பன் பார்க் நிறுத்தத்தில் இறங்கி கொண்டோம்.அங்கு இருந்து சில நிமிடங்கள் நடந்து அருகே உள்ள மிக பிரமாண்டமான விஸ்வேஸ்வரய்யா மியூசியம் உள்ளே சென்றோம்.

 விஸ்வேஸ்வரய்யா மியூசியம்

ஒரு நாள் போதுமா ?
                                         விஸ்வேஸ்வரய்யா மியூசியம் உள்ளே சுற்றி பார்க்க ஒரு நாள் போதுமா ? பத்தாது என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனெனில் குறைந்தது இரண்டு நாள் வேண்டும் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்பது உண்மை.எதிர்கால மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக உள்ள இடம்.பார்த்து,தொட்டு,செயல்படுத்தி நேரில் அறிந்து கொள்ள வேண்டிய இடம்.  

நுழைவு கட்டணம் :
                                           விஸ்வேஸ்வரய்யா மியூசியம் உள்ளே செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 50 கட்டணம்.உள்ளே நாம்  செல்லும்போது நம்மை அறிவியல் விஞ்ஞானிகள் வரவேற்கின்றனர்.

பார்க்க வேண்டிய நான்கு காட்சிகள் :
             1) SCIENCE ON A SPHERE (GROUND FLOOR)
             2) THARAMANDAL SHOW (GROUND FLOOR)
             3) 3D SHOW (FIRST FLOOR)
             4) SCINCE SHOWS (GROUND FLOOR)

 SCIENCE ON A SPHERE (GROUND FLOOR):
                                             இந்த அறிவியல் காட்சி மிக அருமையாக உள்ளது.உள்ளே செல்வதற்கு கட்டணம் ரூபாய்  40 மட்டுமே.சுமார் 20 நிமிடம் நடைபெறுகிறது.மிகப்பெரிய அளவில் பந்து ஒன்று கட்டப்பட்டுள்ளது.அதனில் நன்றாக விளக்குகள் பொருத்தி அதனை மிக எளிதாக புரியும் வகையில் சூரியன் உட்பட ஒன்பது கோள்கள் பற்றி விரிவாக,பொறுமையாக விளக்குகின்றனர்.நாம் அருமையான காட்சிகள் மூலம் நமக்கு பல விஷயங்கள் மிக எளிதாக .விளங்குகிறது.

திரையிடப்படும்  நேரம் : காலை  : 11.15.., மணி 12.15 மணி
                                                    மாலை : 3.15 மணி , 4.15 மணி 


THARAMANDAL SHOW (GROUND FLOOR) : (குகைக்குள் காட்சி )
                                                       தாரமண்டல் காட்சி நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் .முதலில் உள்ளே செல்லும்போது பெரிய துணி உள்ளே குகை போன்று அமைப்புக்குள் செல்வது போன்று இருக்கும்.உள்ளே பெரிய படுதா துணிக்குள் நாம் அனைவரும் தரையில் சம்மணம் இட்டு அமரவேண்டும் .மிகவும் இருட்டான இடம் .OHP ப்ரொஜெக்டர் வழியாக  ராசிகள் பற்றி விளக்கமாக பார்க்க முடிகிறது . மிக தெளிவாக பல ராசிகள் பற்றியும்,அதனை விளக்கும் விதமும் அருமை.சிம்மம்,கன்னி ,நம்மை சுற்றி உள்ள ராசிகள் தொடர்பாகவும் மிக நிதானமாக குகைக்குள் ஒளி,ஒலி காட்சி மூலம் விளக்கமாக விளக்கப்படுகிறது.
                               இது ஒரு இருபது நிமிட காட்சியாகும்.சுமார் 10 நிமிடத்தில் குகை போன்ற பகுதிக்குள் சிலருக்கு இருமல் வந்து விட்டது.காட்சிகளை விளக்கி சொல்லி கொண்டு இருந்தவர் ஒரு சில நிமிடங்கள் இடைவெளி கொடுத்து ,சிரமப்படுவர்களை வெளியில் செல்ல சொன்னார்.பிறகு மீண்டும் தெளிவாக விளக்கினார்.
                                                இந்த காட்சிக்கு கட்டணம் : ரூபாய் 10 மட்டுமே.

திரையிடப்படும் நேரம் : காலை 11.45 மணி ,மாலை 3 மணி .
                             குகைக்குள் செல்லும்போது சிறிது தடுமாற்றமாக உள்ளது.பிறகு வெளியே வந்தது நல்ல மகிழ்ச்சியாக இருந்தது.


SCINCE SHOWS (GROUND FLOOR) : 
                                                      அறிவியல் தொடர்பான நேரடி செயல் விளக்கம் தரும் நிகழ்ச்சி .சுமார் இருபது நிமிடம் நடக்கிறது.அறிவியலில் உள்ள சில சோதனைகளை செய்து காண்பித்து அவற்றை விளக்கி ,சில நிமிடங்கள் கழித்து அதன் விவரங்களை எடுத்து கூறி நம்மை தெளிவு படுத்துகிறார்கள்.நம்முடன் நல்ல முறையில் கலந்துரையாடல் செய்து நம்மையும் செய்ய சொல்கிறார்கள்.அருமையான நேரடி செயல் விளக்கம் .
                                             இந்த காட்சிக்கு கட்டணம் : ரூபாய் 10 மட்டுமே.

திரையிடப்படும் நேரம் : மதியம் : 12.30 மணி ,,, மாலை 3.30 மணி 

எப்போது,எங்கு  இந்த மூன்று காட்சிகளுக்கும் டிக்கெட் வாங்குவது,எங்கு காணலாம் ?
                                        திரையிடப்படும் நேரங்களின் காட்சிகளுக்கு 10 நிமிடம் முன்னதாக உள்ளே நுழையும் இடத்தில் தரை தளத்தில் அங்கே அறிவிப்பு வெளியாகியதும் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே சென்று வரிசையில் நின்று உள்ளே சென்று பார்க்கலாம்.மூன்று காட்சிகளும் தரை தளத்தில் தான் நடைபெறுகிறது.


3D SHOW (FIRST FLOOR) : 
                                                3D காட்சி முதல் தளத்தில் உள்ளது .இங்கு பெரிய கியூ உள்ளது.அரை மணி நேரத்திற்கு ஒரு முறை காட்சி காண்பிக்கப்படுகிறது.ஒரு நபருக்கு ரூபாய் 40 கட்டணம்.3D காட்சி மிக அருமை.நாங்கள் செல்லும்போது நம்மை சுற்றி சுற்று சூழல் எப்படி எல்லாம் கெட்டு கொண்டு உள்ளது என்பதை தெளிவாக விளக்கினார்கள்.ஆமை,மீன் போன்றவை கடல் பகுதிகளில் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது ,பவள பாறை மற்றும் கோரல்ஸ் எவ்வாறெல்லாம் தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட்டுள்ளது என்பதை அழகாக விளக்கினார்கள்.பாம்பு,ஆமை போன்றவை நம் (லெ .சொக்கலிங்கம்) கண் அருகே வந்து செல்கிறது.அருமையான காட்சிகள்.
                
 மியூசியத்தின் உள்ளே நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்  :
        
                                          மொத்தம் நான்கு  தளங்கள்.கீழ் தளம்,முதல் தளம்,இரண்டாவது தளம்,மூன்றாவது தளம் என நான்கு தளங்கள் உள்ளன.

கீழ்த்தளம் :
                                        கீழ் தளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய என்ஜின்கள்,மோட்டார்கள் என நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்திய பொருள்கள் உள்ளன.கட்டிங் செய்யும் பொருள்கள்,தண்ணீர் எடுக்கும் மோட்டார்கள்,பந்து உள்ளே சுற்றி விட்டால் ஒரு முழு ரவுண்டு சுற்றி விட்டு சில நிமிடங்கள் பயணம் செய்து மீண்டும் அந்த இடத்திற்கே வந்து சேரும் காட்சி பல்வேறு இயற்பியல் நிகழ்வுகளை நமக்கு ஞாபகபடுத்துகிறது. நாம் பயன்படுத்தும் கார் , மோட்டார் பைக் போன்றவற்றில் உள்ள பல்வேறு கியர் ,சக்கரங்கள்,உள்ளே சுற்றும் செயின்கள் என அனைத்துமே அருமை.நமது மாணவர்கள் இதனை பார்த்தால் நாம் நடத்தும் பாடங்கள் மிக தெளிவாக தெரியும்.

பயமுறுத்தும் டையனோசர் : 
                           கீழ்தளத்தில் நாம்  அடுத்து பார்க்க வேண்டிய முக்கிய பகுதி டையனோசர்.அசல் டயனோசர் போன்று வடிவில் தொடர்ந்து இயங்கும் இந்த வடிவம் பார்க்கும் குழந்தைகளை அச்சபட வைக்கிறது.டையனோசர் சத்தத்துடன் அது கத்தி கொண்டே நம் முன் வருவது பார்க்கவே வித்தியாசமாக உள்ளது.பார்க்கவேண்டிய இடம் .ரசிக்க வேண்டிய பகுதி.

முதல் தளம் :

நேரடி அறிவியல் செயல்பாடுகள் :
                             முதல் தளத்தில் அறிவியல் தொடர்பான பல்வேறு செயல் வடிவங்கள் உள்ளன .அவை அனைத்துமே செயல்படும் நிலையில் உள்ளன.நாம் பாடத்தில் படித்த பல்வேறு செயல்பாடுகளை நேரில் பார்த்து,செய்து அறிந்து கொள்ளலாம்.இன்னும் அதிகமான அறிவியல் செயல்பாடுகள் அறிந்து கொள்வதற்கு ஏற்ற இடம்.பல்வேறு இயற்பியல் தொடர்பான விதிகள்,வேதியியல் தொடர்பான செயல்பாடுகள் என அனைத்துமே பெரியவர்கள் முதல் சிறியவர் வரை நன்கு அறிந்து கொள்ளக்கூடிய தகவல்கள் ஆகும்.ஒவ்வொரு செயல்பாட்டின் அருகிலும் விரிவான,விளக்கமான தகவல்களும் நமக்கு எளிதில் புரியும் வகையில் உள்ளது.
                    
எலக்ட்ரானிக் செயல்பாடுகள் :
                                   எலக்ட்ரானிக் தொடர்பான செயல்பாடுகள் அனைத்துமே அவசியம் அறிய வேண்டியவை.எவ்வாறெல்லாம் மின்கலங்கள் இயக்கப்படுகின்றன,அதன் விதிகள் என்ன,மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்டுகிறது,அதன் உட்கூறுகள் என்ன,என்ன என்பதை மிக தெளிவாக விளக்குகிறது.நாம் நேரில் செய்து பார்த்தும் கற்று கொள்ளலாம்.தனியாக வீடியோ பொருத்தி டிவி ஓட விட்டு அதனிலும் அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல சேர் அமைத்து கொடுத்து உள்ளனர்.பார்ப்பதற்கும் அருமையாக உள்ளது.எலக்ட்ரானிக் தொடர்பான விரிவான செயல்பாடுகள்,நேரடி விளக்கங்கள் நம்மை வீடியோக்களில் இழுத்து கொள்கிறது.

இரண்டாம் தளம் :
                                     
இஸ்ரோவின் செயல்பாடுகளை விளக்குதல் :
                                          உலக அளவில் செயற்கை கோள் செயல்பாடுகள் என்ன,என்ன ? அவை எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பவை தெளிவாக விளக்கி சொல்லப்படுகிறது.ராக்கெட் எவ்வாறு விண்ணிற்கு அனுப்பப்படுகிறது என்பதை நேரடி செயல்பாடுகளில் அறிந்து கொள்ளலாம்.செயற்கை கோள் எவ்வாறு விண்ணில் செலுத்தப்படுகிறது என்பதை தெளிவாக செயல் முறையில் செய்து காண்பிக்கிறார்கள்.நிலவில் நாம் விஞ்ஞானியுடன் இருப்பது போல் படம் எடுத்துக்கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.மிக உயர்வான விஞ்ஞான தொழில்நுட்பங்கள் செயல்படுத்த பட்டுள்ளன.அதனை பார்க்கும்போதே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.நிலவில் உள்ள விஞ்ஞானியுடன் நாம் நின்று எடுப்பது போல் செட் அமைக்கப்பட்டுள்ளது.அதில் நாமும் போட்டோ எடுத்துக்கொள்ளலாம்.இந்த தளத்தை விட்டு நாம் வெளியில் வரும்போது விண்வெளிக்கு சென்று  வந்த ஒரு எண்ணம் நம் உள்ளே ஏற்பட்டு விடுகிறது.
                         ஒரு சுற்று முடித்து விட்டு வெளியே வந்து அங்கு உள்ள நிலவு விஞ்ஞானியுடன் நாம் படம் எடுத்து கொள்ளலாம்.மகிழ்ச்சியாக இருக்கும்.

பெல் செயல்பாடுகள் :
                                                  இந்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரடி செயல் விளக்கத்தின் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.அனைத்து எலக்ட்ரானிக் பொருள்களும் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது ,பயன்படுத்தப்படுகிறது என்பதை நாமே செய்து கற்றுக்கொள்ள இயலும்.பெல் நிறுவனத்தின் செயல்பாடுகள் நம்மை வியக்கவைக்கின்றன.நமது மாணவர்கள் இதனை ஆர்வமுடன் பார்க்கும்போது கண்டிப்பாக அதிகமான அறிவியல் விழிப்புணர்வுடன் புரிதலும் ஏற்படும் என்பது உண்மை.பாரத் மிகு மின் நிறுவனம் தயாரிக்கும் பொருள்கள் எவ்வாறு உள்ளன,அவை நாட்டுக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதெல்லாம் அருமையாக உள்ளது.அனைவரும் நேரில் சென்று பார்த்து வாருங்கள்.

மூன்றாம் தளம் :
                                    இங்கு (லெ .சொக்கலிங்கம்)  இயற்கை உணவு,சிறுதானியங்கள் தொடர்பான விளக்கங்களும்,வீடியோ காட்சிகளும் அழகாக காட்சி படுத்தப்பட்டுள்ளன.இவற்றை பார்க்கும் நமக்கே இயற்கை உணவுகளையும்,சிறுதானியங்களையும் அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் நம்மை அறியாமல் ஏற்படுகிறது.அவற்றில் அடங்கி உள்ள சத்துக்கள்,அவற்றால் நமக்கு கிடைக்கும் சத்துக்கள் தொடர்பாக அழகாக நமக்கு புடிக்கும் வகையிலும்,புரியும் வகையிலும் விளக்கி உள்ளனர் .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டிய இடம்.

மரபணு தொடர்பான பகுதி :
                                         நமது உடலில் என்ன மாதிரியான உடற்க்கூறுகள் உள்ளன,DNA கட்டமைப்பு,நமது ஜீன் எவ்வாறு உள்ளது ,அதன் தன்மை என்ன போன்ற பல்வேறு தகவல்களை இங்கு தெரிந்து கொள்ள இயலும்.தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் வீடியோக்களில் நமக்கு ( பெரிய டி .வி.திரைகளில் ) நமது உடல் அமைப்பு தொடர்பான விசயங்களை அறிந்து கொள்ள இயலும்.நாம் ஓடினால் ,குதித்தால் ,நடந்தால் எவ்வளவு நமது உடலில் சக்தி உருவாகும் என்பது தொடர்பான தகவல்கள் நமக்கு தெரிந்து கொள்ள கூடிய வகையில் அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.மிக நல்ல அறிவியல் தொடர்பான தகவல்களை விளக்கும்  பகுதி. ஒரு தந்தை.தாய் எப்படி இருந்தால் குழந்தை எப்படி உருவாகி வரும் என்பதை அறிவியல் பூர்வமாக நாமே கண்டுபிடிக்கும் வகையில் விளக்கமாக சொல்லி உள்ளனர்.நாமே அதனை செய்தும் பார்க்கலாம்.கண்டுபிடிக்கலாம்.

நான்காவது தளம் :
                                        உணவு விற்கப்படும் இடம்.இங்கு நமக்கு (லெ .சொக்கலிங்கம்) தேவையான மதிய உணவு பூரி,தோசை.தயிர் சாதம் .பிரியாணி,மதிய சாப்பாடு என அனைத்துமே உள்ளன.நன்றாகவும் உள்ளது.மாலை நேரத்தில் டீ யும் சாப்பிட்டு கொள்ளலாம் .நல்ல இடம்.பப்ஸ்,சமோசா,பிஸ்கட் ,குளிர்பானங்கள் என அனைத்துமே கிடைக்கின்றன .
                             
பொதுவான தகவல்கள் :
                                               தொடர்ந்து நாம்  பார்க்கும்போது நமக்கு கால் வலி அதிகம் வந்து விடுகிறது.எனவே நன்றாக ஓய்வு எடுத்து பிறகு பாருங்கள்.நல்ல வாய்ப்பு.இரண்டு நாட்கள் நன்றாக சுற்றி பார்க்கலாம்.குழந்தைகளை,மாணவர்களை அழைத்து சென்று சுற்றி காண்பியுங்கள்.அறிவியல் தொடர்பான பல்வேறு தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளலாம் .
                                         சிறுநீர் கழிப்பதற்கு எதுவாக ரெஸ்ட் ரூம் முதல் தளத்தின் கீழ் பகுதியிலும்,மூன்றாவது தளத்தின் கீழ் பகுதியிலும் அமைந்து உள்ளன.

பார்வை நேரம் :
                                  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.உள்ளே செல்ல அனுமதி உண்டு.

மியூசியம் முன் பக்கத்தில் :
                                       முன் பக்கமாக நமக்கு இஸ்ரோ ஏவிய செயற்கை கோள் தொடர்பான அனைத்து மாதிரிகளும் வைக்கப்பட்டுள்ளன.அவை பார்க்க கண்கொள்ளா காட்சிகள் ஆகும். 
                               மியூசியம் பார்த்து முடித்து எப்ப உட்காருவோம் என்ற எண்ணத்தோடு வெளியில் வந்து மாலை 6 மணி அளவில் ஆட்டோ பிடித்து சுமார் இரண்டு கிலோமீட்டரில் உள்ள இசையுடன் தண்ணீர் நடனம் ஆடி அசத்தும் பெங்களூரு இந்திரா காந்தி இசையுடன் நீர் ஊற்று பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

வித்தியாசமான ஆட்டோ பயணம் :
                                                   நாங்கள்  (லெ .சொக்கலிங்கம்)     ஆட்டோவில் ஏறி அமர்ந்த உடன் ஆட்டோக்காரர் எங்களிடம் சொன்ன தகவல் தான் எங்களை வியப்பில் ஆழ்த்தியது: என்னவென்றால் செல்லும் வழியில் ஒரு பேக்டரி அவுட்லெட் இருப்பதாகவும் அதனில் சில நிமிடங்கள் உள்ளே சென்று வந்தால் ஆட்டோவுக்கு பணம் கொடுக்க வேணாம் என்றும், நீர் ஊற்று பகுதி மாலை 6.50குத்தான் திறப்பார்கள் என்றும் பொய் சொன்னார்.எப்படி பொய் சொல்கிறார் என்று கண்டுபிடித்தோம் என்று கேட்கிறீர்களா ? கூகுளில் சென்று பார்த்தபோது தெளிவாக திறக்கும்  நேரம் கொடுத்து இருந்தார்கள்.
                              நாங்கள் ஆட்டோக்காரரிடம் ,அய்யா அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.எங்களை நேராக கொண்டு போய் நீர் ஊற்று பகுதியின் வாசலில் விடுங்கள் என்று சொல்லி விட்டோம்.சுமார் 6.25 மணி அளவில் உள்ளே சென்றோம்.

ராணுவ மியூசியம் :
                                          இந்திரா காந்தி நீர் ஊற்றின் உள்ளே சென்று டிக்கெட் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுப்பவரிடம் விசாரித்து கொண்டு இருக்கும்போது,அவர் சொன்னார் சார் இதன் உள்ளே ராணுவ மியூசியம் தயாராகி கொண்டு உள்ளது.நீங்கள் சென்று பார்த்து விட்டு ,பிறகு 6.55 மணி அளவில் இசையுடன் கூடிய நீர் ஊற்றுக்கு வந்து விடுங்கள் சரியாக இருக்கும் என்று சொல்லி விட்டார்.
                                       பிறகு சில நிமிடங்கள் உள்ளேயே நடந்தால் வரக்கூடிய ராணுவ ம்யூசியத்திற்கு சென்றோம்.அங்கு இந்திய விமானப்படையில் பயன்படுத்திய விமானங்கள்,ராணுவ தளவாடங்கள் ,இஸ்ரோவில் பயன்படுத்திய செயற்கை கோள் போன்றவற்றின் மாதிரிகள் நம்மை ஆச்சிர்யத்தில் ஆழ்த்துகிறது.கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்கள் படைகளில் உள்ளதுபோல் கட்டப்பட்டு உள்ளது.அருமையான பார்வை.

இசையுடன் கூடிய நீர் ஊற்று :
                                                         ராணுவ மியூசியத்தில் இருந்து சில அடிகளில் உள்ள நீர் ஊற்று நோக்கி சென்றோம்.அங்கு இரண்டாவது படிக்கட்டில் அமர்ந்தோம்.சுமார் 6.50 மணிக்கு சென்று அமர்ந்தோம்.டீ வந்ததை வாங்கி சாப்பிட்டோம்.பிறகு சூடாக விற்ற வறுத்த பொறியையும் சாப்பிட்டோம்.
                                    சரியாக 7 மணிக்கு இசை,இசைக்க நீர் ஊற்று நடனமாடியது.பல்வேறு பாடல்களுக்கு நீர் ஊற்று அருமையாக ஆடியது.கூட்டமும் குறைவுதான்.நல்ல முறையில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் 30 நிமிடங்கள் இசையை ரசித்தோம்.நீர் ஊற்றின் நடனத்தையும் ரசித்தோம்.பிறகு அருகில் உள்ள விதான் சௌதாவை நோக்கி நடந்தோம்.

கட்டணம் மற்றும் காட்சி நேரங்கள் :
                                                     ஒரு நபருக்கு 30 ரூபாய் மட்டுமே.மாலை 7 மணிக்கு ஒரு காட்சியும்,இரவு 8 மணிக்கு ஒரு காட்சியும் என இரன்டு காட்சிகளுமே சுமார் 30 நிமிடம் மட்டுமே நடக்கக்கூடியது ஆகும்.

மீண்டும் ஆட்டோக்காரர்களின் தொல்லை ;
                                                    வெளியில் வந்தால் ஆட்டோ ரெடியாக உள்ளது.சார் ஒரு துணிக்கடை அருகில் உள்ளது.நீங்கள் உள்ளே சென்று அரை மணி நேரம் செலவு செய்ய வேண்டும்.பிறகு உங்களை எங்கு சொல்கிறீர்களா அங்கு இறக்கி விடுவோம்.என்றும்,இந்த ஆட்டோ அனைத்துமே கம்பெனி ஆட்டோக்கள் என்றும் சொன்னார்.நாங்கள் ஒரு கும்பிடு போட்டு விட்டு நடையை கட்டினோம்.

விதான் சௌதா :
                                    கர்நாடக அரசின் சட்டசபை வளாகம்.இரவு எட்டு மணி ஆனதால் உள்ளே செல்ல இயலவில்லை.வெளியில் அந்த பகுதி முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அருமையான காட்சியாக இருந்தது.பார்த்து ரசித்துக்கொண்டு அருகில் இருந்த மெட்ரோ ட்ரெயினில் ஏறி இந்திரா நகர் வந்து சேர்ந்தோம்.

அடையாறு ஆனந்த பவனில் இரவு உணவு :
                                    நாங்கள் (லெ .சொக்கலிங்கம்)    இந்திரா நகரில் உள்ள அடையாறு ஆனந்த பவனில் நல்ல முறையில் உணவு சாப்பிட்டு விட்டு ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு எங்கள் இருப்பிடம் நோக்கி சென்றோம்.
                                   என்னுடைய முதல் பகுதியில் முதல் நாள் சுற்று பயணம் ஆரம்பிக்கும்போது ஒரு திருப்பம் வந்ததாக எழுதி இருந்தேன்.அதனை அடுத்த பகுதி - 3 இல் பார்ப்போம் .அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.


லெ .சொக்கலிங்கம் ,காரைக்குடி 
chokklaingamhm@gmail.com


 

No comments:

Post a Comment