Thursday 5 July 2018

பாட புத்தகங்களை  படிப்பது மட்டுமே கல்வி இல்லை 
வாழ்க்கைக்கான கல்வியை கற்றுக்கொள்வதே கல்வி 

அன்பு காட்டுங்கள் வாழ்க்கையில் உயரத்திற்கு செல்வீர்கள் 

முன்னாள் துணைவேந்தர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை 

முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்   கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
                                            நிகழ்வுக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சொ .சுப்பையா மாணவர்களுடன் கலந்துரையாடி பேசுகையில் , அடுத்தவர் மீது அன்பு காட்டினால் வாழ்க்கையின் உயரத்திற்கு செல்வீர்கள்.நான் அரசு பள்ளியில் படித்துதான்  துணைவேந்தர் பதவிக்கு வந்தேன்.அரசு பள்ளியில் படிப்பதை பெருமையாக எண்ணுங்கள்.இடர்பாடுகளை தாண்டி வெற்றி பெறுவதே வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும்.உங்களது குறிக்கோளை மிக உயர்ந்ததாக ஏற்படுத்தி கொள்ளுங்கள்.அதனை அடைய தொடர் முயற்சி மேற்கொள்ளுங்கள்.பள்ளி,கல்லூரி,நிறுவனம்,நாடு இவை அனைத்தின் தலைமைகள்தான் அவற்றின் தலை விதியை மாற்றி அமைக்கிறது .எனவே நல்ல தலைவராக உங்களை உருவாக்கி கொள்ளுங்கள்.இவ்வாறு பேசினார்.தேவகோட்டை வட்டார அளவில் போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தமிழக அரசு செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர் கிஷோர்குமாரையும் பொன்னாடை அணிவித்து பரிசு கொடுத்து பாராட்டினார்.மாணவர்கள் கிஷோர்குமார்,வெங்கட்ராமன்,காயத்ரி,மாதரசி,பாக்யலட்சுமி,கிருத்திகா உட்பட பல மாணவர்கள் சந்தேகங்கள் கேட்டு பதில் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.நிகழ்வில் ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்றனர்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்  சொ .சுப்பையா கலந்துரையாடினார் .உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.







மேலும் விரிவாக :
                                     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்   சுப்பையா கலந்துரையாடல் நிகழ்வில் பேசுகையில் ,

                                             நான் முதன் முதலாக பள்ளியில் ஆண்டு விழாவில் 11ம் வகுப்பு படிக்கையில் பேசி முதல் பரிசு வாங்கினேன்.எனக்கு தெரிந்து எனது பள்ளி வாழ்க்கையில் அடுத்த பள்ளியில் இருந்து வந்து ஒரு ஆசிரியர் மட்டுமே எங்களிடம் பேசி உள்ளார்.ஆனால் உங்கள் பள்ளியில் பல ஆட்சியாளர்கள்,ஆளுமைகள் உங்களிடம் பேசி சென்று உள்ளனர்.இதுதான் கல்வி.  பாட புத்தகங்களை  படிப்பது மட்டுமே கல்வி இல்லை .
வாழ்க்கைக்கான கல்வியை கற்றுக்கொள்வதே கல்வி .இதனை உங்கள் பள்ளியில் செயல் படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.பள்ளிக்கு பாராட்டுக்கள்.

உதவி யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் உதவி செய்யுங்கள்.நல்ல நண்பர்களோடு தொடர்ச்சியான உறவு வைத்து கொள்ளுங்கள்.சுற்றத்தாரோடு சுமுகமாக இருக்க கற்று கொள்ளுங்கள்.பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள்.அன்பும்,பண்பும் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதியாக,மகிழ்ச்சியாக வாழலாம்.அறிவில்லாதவர் தவறாக பேசினால் அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.தவறு என்று தெரிந்தால் சுட்டிக்காட்டி எடுத்து கூறும் தைரியத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.அன்பு விருதோம்பல்,பெரியவரை மதித்தல்,அடுத்தவருக்கு உதவி செய்தல்,உயர்ந்த இலக்கு,நம்பிக்கை இவற்றுடன் பயனித்து , நம்முடையை திறமையை வெளிப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.எதையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டே இருக்க கூடாது.இன்பமும்,துன்பமும் கலந்துதான் வாழ்க்கை.நாம் உலகத்தில் எதையும் எடுத்து கொண்டு போகப்போவதில்லை.80 வயது வரை உயிரோடு இருந்தோம் என்பதை விட 80 வயது வரை மகிழ்ச்சியோடு வாழ்ந்தோம் என்பது சிறந்த வாழ்க்கை.என்று பேசினார்.


No comments:

Post a Comment