Saturday 22 September 2018

அடுத்தது என்ன என்ற என் தந்தையின் கேள்வியே என்னை விஞ்ஞானியாக உருவாக்கியது - மயில்சாமி அண்ணாதுரை 





தேவகோட்டை: பஸ், ரயிலில் போவது போல ராக்கெட்டுகளில் ஏறி பக்கத்து ஊர்களுக்குப் போகும் காலம் விரைவில் வரும் என்று பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார் . 
                                              சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஞ்ஞானியும் முன்னாள் இஸ்ரோ இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவி கீர்த்தியா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார்.

பக்கத்து ஊர்களுக்கு ராக்கெட் பயணம் 
 ராக்கெட் மூலம் விரைவில் நாம் வெளியூர் பயணம் செய்யும் நாள் உருவாகும். அப்போது இங்கு இருந்து பல வெளிநாடுகளுக்கு பல மணி நேரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து அடுத்த நாட்டுக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். 
உங்களில் என்னைப் பார்க்கிறேன் 
உங்களில் என்னைப் பார்க்கிறேன் நானும் 40 ஆண்டுகளுக்கு முன்பு உங்களில் ஒருவனாக உங்களைப்போல் இதே சூழ்நிலையில்தான் அரசு பள்ளியில் படித்தேன். உங்களில் என்னை நான் இன்று பார்க்கிறேன். என்னுடனான உங்கள் கலந்துரையாடல் உங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். 
பென்சில் டூ பத்மஸ்ரீ 
பென்சில் டூ பத்மஸ்ரீ நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது இரண்டு ரூபாய் பென்சில் பரிசாக வாங்கியதும், என்னை என் அப்பா கேட்ட கேள்வி அடுத்தது என்ன? என்பதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. பென்சிலில் ஆரம்பித்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றதற்கு பிறரிடம் நான் கேட்ட கேள்விகளும், பிறர் என்னிடம் கேட்ட கேள்விகளுமே எனது வளர்ச்சிக்கு காரணம். 
கேள்வி கேட்டால்தான் வளர முடியும்
கேள்வி கேட்டால்தான் வளர முடியும் கேள்விகளை கேட்கும்போது அதற்குரிய பதிலாக நீ இருக்க வேண்டும் என்று அப்துல்கலாம் அய்யா எனக்கு சொன்னதை செயல்படுத்தியதால்தான் செயற்கை கோள்களை என்னால் உருவாக்க முடிந்தது. நீங்களும் கேள்விகளை கேட்பதுடன் அதன் பதில்களை அறிந்து உங்கள் வாழ்க்கையில் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

செயற்கை கோளின் பயன்கள் 

                                        செயற்கை கோள் எப்படி செலுத்தப்படுகிறது,செயற்கைகோள் மூலமாக என்னென்ன பயன்கள்,செயல்பாடு பற்றி தெளிவுபடுத்தினார்.விண்வெளி ஆராய்ச்சியின் வழியாக மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவலாம் என்பதை தெளிவாக விளக்கினார்.எ.டி .எம்.செயல்பாடு,பொருளாதாரம்,புயல் ,காற்றழுத்தம்,காடுகளை பாதுகாத்தல்,எல்லை பாதுகாப்பு இவ்வாறு பல பயன்பாடுகளை பற்றி விளக்கினார்.

செயற்கை கோள் அமைப்பு மற்றும் தயாரிக்க ஆகும் செலவு :
                                                   செயற்கைகோள் பொதுவாக 17 நிமிடம் முதல் 20 நிமிடத்திற்குள் அதனுடைய பாதை எதுவோ அதைச் சென்றடைந்து விடும்.செயற்கைகோள் ஒரு கிலோகிராம் முதல் டன் கணக்கில் என எவ்வளவு எடையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.சுமார் இரண்டு லட்சம் முதல் 1000கோடி வரை செலவாகலாம்.

விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் உடல்நிலை :
                                                                  விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்  பொதுவாக நல்ல ஆரோக்கியமானவர்கள்தான் பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள்.ஒருவேளை விண்வெளிக்கு சென்ற பிறகு உடல்நிலை பாதிப்பு அடைந்தால் அதற்கு மருந்துகள் கேப்ஸுல் வடிவில் எடுத்து செல்வார்கள்.எனவே அதனால் எந்த பாதிப்பும் வராது.

செயற்கைக்கோளை முதன்முதலாக அனுப்பிய நாடு :
                                                                    செயற்கைக்கோளை முதன்முதலாக அனுப்பிய நாடு ரஷ்யாதான்.பிறகு அமெரிக்கா  என இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு அனுப்ப தொடங்கின.

செயற்கை கோள் செயல்பாடு :
                                         செயற்கைக்கோள் பகுதிகள் ஒவ்வொரு இடத்திலும் பிரிந்து செல்ல காரணம் எடை குறையக்குறைய வேகம் அதிகரிக்கும்.எரிபொருள் குறைந்தாலோ,பழுதடைந்தாலோ அதன் செயல்பாடு குறைந்து விடும்.படிப்படியாக ஒவ்வொரு பாகமாக அதன் உந்துதலை அதிகப்படுத்தி நிறைவாக விண்வெளியின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்று விடும்.என்றார் மயில்சாமி அண்ணாதுரை. நிறைவாக மாணவர் அய்யப்பன் நன்றி கூறினார்.

 விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் இயக்குநருமான  மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம் மாணவர்களின் கேள்விகளும் பதில்களும் :

ராக்கெட்டில் ஏறி பக்கத்து ஊருக்குப் போகும் காலம் வரும். மயில்சாமி அண்ணாதுரை 

மாணவர் ஐயப்பன் : செயற்கை கோள் முதன் முதலில் கண்டுபிடித்த நாடு எது?
  
 விஞ்ஞானி பதில் : முதன் முதலில் கண்டுபிடித்த நாடு ரஷியா .பின்னர் அமெரிக்கா என இரண்டு நாடுகளும் போட்டிபோட்டு செயல்பட்டன.

பாக்கியலட்சுமி : உங்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் யார் ?

விஞ்ஞானி  பதில் : எனது தந்தையும், குடியரசு தலைவர் அப்துல் காலமும் .

சிரேகா : செயற்கைகோள் எவ்வாறு மேலே செல்கிறது ?
    
விஞ்ஞானி பதில் : எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து,எடைக்கு தகுந்தாற்போல் எரிபொருள் பயன்படுத்தப்படும்.விண்வெளியில் தேவையில்லாத பாகங்கள் அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் மேலே செல்ல செல்ல உந்து சக்தி கொடுத்துக்கொண்டே கீழே விழுந்து விடும்.எடை குறையக்குறைய திசையின் வேகம் அதிகரிக்கும்.எரிபொருள் குறைந்தாலோ,பழுதடைந்தாலோ இயக்கம் குறையும் .

சந்தியா : விண்வெளி வேறு என்னென்ன ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள் ?

விஞ்ஞானி பதில் : மக்களுக்கு உதவி செய்யவே இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.முன்பு தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு என ஒன்று அல்லது இரண்டு நிலையங்கள்தான் இருக்கும்.ஆனால் இன்றோ வளர்ச்சியின் காரணமாக அதிகமான எண்ணிக்கையிலான ஒளிபரப்பு நிலையங்கள் வந்துவிட்டன.பயன்பாடுகளும் அதிக அளவில் உள்ளது.எ.டி .எம்.செயல்பாடு,பொருளாதாரம்,புயல் ,காற்றழுத்தம்,காடுகளை பாதுகாத்தல்,எல்லை பாதுகாப்பு போன்ற பல செயல்களுக்கு ஆராய்ச்சி செய்கிறோம்.
                      
வெங்கட்ராமன் : செயற்கைகோள் எப்படி தயாரிக்கப்டுகிறது ,எவ்வளவு செலவாகும் ?

விஞ்ஞானி பதில் : ஒரு கிலோகிராம்,சில கிராம்,10 டன் ,20 டன் என எவ்வளவு எடையிலும் தயாரிக்கலாம் .தேவையை பொறுத்து தயாரிக்கப்டுகிறது.செயற்கைகோள் தயாரிக்க சுமார் இரண்டு லட்சம் முதல் 1000 கோடி ரூபாய் வரை செலவாகலாம்.

கீர்த்தியா : விண்வெளிக்கு செல்லும்போது யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வார்கள் ?

விஞ்ஞானி பதில் : விண்வெளிக்கு அனுப்பும் வீரர்கள் பொதுவாக நன்கு ஆரோக்கியமானவர்களைத்தான் பெரும்பாலும் அனுப்புவார்கள்.பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர்தான் அனுப்பப்படுவார்கள்.அப்படியே உடல்நிலை சரியில்லை என்றாலும் முதலுதவி செய்ய வழி செய்திருப்பார்கள்.செவ்வாய்,நிலவுக்கு செல்லும்போது உடன் மருத்துவர் (நீண்ட செல்ல கூடிய பயணங்களுக்கு ) செல்வார்கள்.

ஈஸ்வரன் : செயற்கைகோள் எவ்வளவு நாள் வரை செயல்படும் ?

விஞ்ஞானி பதில் : முதலில் 40 கிலோ எடையுள்ள செயற்கைகோள் 400கிலோமீட்டர் வேகத்தில் அனுப்பப்பட்டது.அவை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மட்டுமே செயல்படும்.இப்பொழுது எல்லாம் ஐந்து வருடம் ,10 வருடம் ,13 வருடம் ,15 வருடம் என இருக்கக்கூடிய வகையில் அனுப்பப்படுகிறது.எரிபொருள் பழுதாகி விட்டாலோ எரிசக்திகள் குறைந்தாலோ மட்டுமேதான் வேகம் குறைந்து செயல் இழக்க ஆரம்பித்துவிடும்.சுமார் 2,50,000லட்சத்துக்கும் மேற்பட்ட எ .டி .எம் இயந்திரங்கள் செயற்கைகோள் வழியாக இயக்கப்படுகிறது .

முத்தய்யன் : செயற்கைகோள் எவ்வளவு வேகத்தில் மேலே செல்லும் ?

விஞ்ஞானி பதில் : எடைக்கு தகுந்தாற்போல் வேகம் இருக்கும்.புவியீர்ப்பு விசை,உயரம்,எவ்வளவு தூரம் நிலவு சுற்றுகிறது இவை அனைத்தின் அடிப்படையில் வேகம் கட்டுப்படுத்தப்படும்.

பாலசிங்கம் : செயற்கைக்கோளை கட்டுப்படுத்த என்ன செய்வீர்கள் ?

விஞ்ஞானி பதில் :  அலைபேசி,டி .வி.செயல்பட ரிமோட் பயன்படுவது போல் செயற்கை கோளுக்கும் கட்டளையிட கட்டுப்பாட்டு அறை  உண்டு.கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்துக்கொண்டே இருப்போம்.அங்கே இருந்து தகவல் வந்துகொண்டே இருக்கும்.அதன் பல்வேறு செயல்பாடுகள் இங்கு இருந்தே கண்காணிக்கப்படும்.
                         இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொன்னார்.
    மேலும் விரிவாக :        

``அப்துல்கலாம் வழியில் நானும் பயணிக்கிறேன்!”- மயில்சாமி அண்ணாதுரை


இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக மாற்றமுடியும் என்பதை அறிவியல் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறது. அந்தந்த மாநில அரசுகளும், சமுதாயமும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மனிதர்களைப் பயன்படுத்தாமலேயே கழிவுகளை அகற்ற முடியும். அதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையே? 

மழை வரப்போவதையும் மழை நீர் எங்கு தேங்கும் என்பது குறித்தும் தொலை உணர்வு மையங்கள் மூலமாக நம்மால் சொல்லிவிட முடியும். முன்பெல்லாம் மேகக் கூட்டங்கள் அதிகமாக இருக்கும்போது மழையின் அளவைக் கணிக்க முடியாமல் இருந்தது. ஆனால், இப்போது செயற்கைக் கோள்கள் மூலமாக மழை வருவதற்கு முன்பே அதைச் சொல்லிவிட முடியும். ஆனால், இந்தச் சமிஞ்சைகளை எல்லாம் தாண்டி நகர்ப்புற கட்டமைப்பை நாம் எப்படி நிர்ணயித்து இருக்கிறோம் என்பது  கவனிக்க வேண்டிய விஷயம்.

முன்பு மாணவர்களோடு உரையாடுவதற்கும் ஓய்வுபெற்ற பிறகு உரையாடுவதற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

இப்போது நிறைய நேரம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன். கலாம் வழியிலேயே தொடர்ந்து பயணிக்கிறேன். எதிர்காலத்தில் சில திட்டங்களையும் யோசித்திருக்கிறேன். என்னுடைய நண்பர்கள், துறை வல்லுநர்கள் என அனைவரும் மாணவர்களோடு உரையாட முன்வர வேண்டும்.










No comments:

Post a Comment