Monday 26 August 2024

குறைந்த செலவில் கலப்பிடமில்லாத  சோப் பவுடர் , சோப் ஆயில் தயாரிக்கும் பயிற்சி

பச்சை,மஞ்சள்,ரோஸ் கலர்களில் பினாயில் உற்பத்தி செய்து அசத்திய பெற்றோர்கள்  









தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் சார்பில் பினாயில், சோப்பு பவுடர் , சோப் ஆயில் தயாரித்தல் பயிற்சி நடைபெற்றது.

                                   ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

                                  பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் இயக்குனர் சண்முகம்  மற்றும் பயிற்சியாளர் ஆரோக்கிய சகாய அருள் ஆகியோர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பினாயில் ,சோப் பவுடர், சோப் ஆயில் தயாரித்தல் குறித்து பயிற்சி அளித்து  பேசுகையில்,

                       பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் லைசால், பன்னீர், ஓமவாட்டர் முதலான பல்வேறு வாசனை பொருட்கள் உட்பட அனைத்தும் குறைந்த செலவில் தயாரிக்கும் பயிற்சி வழங்கி வருகின்றோம். 

                                   கம்ப்யூட்டரில் உள்ள பைத்தான், ஜாவா மற்றும் தையல் பயிற்சிகள், ஆரி ஒர்க், ஸ்வீட் தயார் செய்தல், மில்லட்  தயார் செய்தல், மேட் தயார் செய்தல், தரைவிரிப்புகள் தயார் செய்தல், கூடை தயார்செய்தல் ஆகியவற்றிக்கான  பயிற்சி போன்றவையும் எங்களது பயிற்சி மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. 

                                           தேவைப்படுவோர் எங்களுடைய பயிற்சி மையத்திற்கு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அனைத்தும் இலவசம்.பினாயில்  20 லிட்டர் தயாரிக்க மொத்த செலவு 225 ரூபாய்க்குள்தான் வரும். 40 ரூபாய் என்று தோராயமாக விற்றால் 800 ரூபாய் கிடைக்கும். 

                                 சோப் ஆயில் 10 லிட்டர் தயார் செய்ய 250 ரூபாய் ஆகும். 80 ரூபாய் லிட்டர் என்று விற்றால் 800 ரூபாய்க்கு விற்கலாம். 

                                சோப் பவுடர் தயாரிக்க ஆகும் செலவு 5 கிலோவிற்கு  580 ரூபாய் ஆகும்.கிலோ  325 ரூபாய் என்று தோராயமாக விற்றால் 470 ரூபாய் லாபம் கிடைக்கும்.  நாம் இவ்வாறு தயாரிக்கும் பொருள்கள் அனைத்துமே கலப்பிடமில்லாதது , சுத்தமானது என்று கூறினார்கள் .

                                  பள்ளி அளவில் இங்குதான் முதன் முதலாக  இந்த பயிற்சி நடைபெறுகிறது என்றும் கூறினார்கள்.குறைந்த செலவில் நேரடியாக பயிற்சியானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

                                                     இளம் வயதிலேயே தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு  இது போன்ற பயிற்சிகள்  நல்ல உதவியாக இருக்கும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.பெற்றோர்களும் ஏராளமானோர் ஆர்வமுடன் இதனை கற்றுக் கொண்டனர். 

                             

                                  நம் வீட்டிற்கு தேவையானவற்றை தயாரித்துக் கொள்ளவும், குடிசைத்தொழில் போன்று செய்வதற்கும் இவர்களது பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். 


 படம் விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் இயக்குனர் சண்முகம் மற்றும் பயிற்றுனர் சார்பாக சோப் ஆயில், பினாயில், சோப் பவுடர் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.   நிகழ்வில் ஏராளமான பெற்றோர்களும் பங்கு கொண்டு பயிற்சி பெற்றனர் 


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=cdmsMZCnh4g




பினாயில் தயாரித்தல் : (செயல் முறை )


                         தயாரிப்பதற்கு முன்னர் அவசியம் கைக்கு உரையும், முகத்திற்கு மாஸ்க்கும்   போட்டுத்தான் தயாரிக்க வேண்டும். 

                                20லி பினாயில் தயாரிக்க முதலில் 25லி அகலமுள்ள பெரிய டப்  எடுத்து 1லி பினாயில் கம்பௌண்ட்  உடன் 19லி நல்ல தண்ணீரைக் கலந்து, நன்றாக ஆத்த வேண்டும் .போர் வாட்டர் பயன்படுத்தகூடாது. .  

                              நன்கு ஆத்தினால்தான் கட்டி படாமல் கெட்டுப்போகாமல் இருக்கும். 

                              வாசனைக்கு ஐஸ்மின் அல்லது ரோஸ் பவுடர்  25மி.லி. சேர்த்துக் கலக்க வேண்டும். 

                                    கலர் பச்சை, சிவப்பு, மஞ்சள், ரோஸ் இந்தக் கலர்களில் வேண்டிய கலரை வேண்டிய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 கலப்படமில்லாத பினாயில் தயார்.


 சோப் பவுடர்  தயாரித்தல்:(செயல் முறை )

                       தயாரிப்பதற்கு முன்னர் அவசியம் கைக்கு உரையும், முகத்திற்கு மாஸ்க்கும்  போட்டுத்தான் தயாரிக்க வேண்டும். மரக்குச்சி ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

                                        5 கிலோ சோப்பு பவுடர் தயாரிக்க முதலில் 25 லிட்டர் அகலமுள்ள பெரிய வாளி போன்ற அகன்ற வாய் உள்ள பாத்திரம்  எடுத்து அதனில் வாஷிங் சோடா 2 கிலோவை கொட்டி கட்டியில்லாமல் கைகளினால் நன்கு கிளறவும். 

                                   பிறகு பேக்கிங் சோடா 2 கிலோ கொட்டி கட்டி இல்லாமல் கைகளினால் நன்கு கிளறவும். பிறகு டிஎஸ்பி பவுடர் 200 கிராம் கொட்டி நன்கு கிளறவும். பிறகு டினோபால் 100 கிராமை கொட்டி நன்கு கிளறவும். 

                                         பிறகு ஆசிட் சிலரி  700 மி.லி.யை  ஊற்றவும். இதை ஊற்றிய உடன் கொதிக்க ஆரம்பித்து மாவு நன்கு வேக ஆரம்பிக்கும். மரக் குச்சியை வைத்து நன்கு கிளறி விடவும். தொட்டுப் பார்க்கவும்.

                                  மாவு ஆறிய உடன் கைகளினால் கட்டியில்லாமல் நன்கு கிளறவும். பிறகு வாசனை திரவியம் சர்ப் எக்ஸெல் சேர்க்கவேண்டும். கலர் கிராம் 20 ரூபாய் சேர்த்து நன்கு கிளறவும்.

கலப்படமில்லாத சோப் பவுடர் தயார். 


 சோப் ஆயில் தயாரித்தல்:(செயல் முறை )

                                            தயாரிப்பதற்கு முன்னர் அவசியம் கைக்கு உரையும், முகத்திற்கு மாஸ்க்கும்  போட்டுத்தான் தயாரிக்க வேண்டும்.

                                     10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முதலில் 9 லிட்டர் சுத்தமான தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். போர் வாட்டர் பயன்படுத்தகூடாது. 

                                  மரக் குச்சி ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் 25 லிட்டர் அகலமுள்ள பெரிய டப்பு எடுத்து 9 லிட்டர் தண்ணீரை அளந்து ஊற்ற வேண்டும். 

                                         பிறகு காஸ்டிக் சோடா 350 கிராமை கொட்டி  மரக் குச்சியை வைத்து கிளறவும். பிறகு ஆசிட் சிலரி 700 மி.லி யை  ஊற்றி மரக் குச்சியை வைத்து நன்கு கிளறவும். 

                            பிறகு யூரியா 100 கிராம் கொட்டி மரக் குச்சியை வைத்து கிளறவும். பிறகு எஸ் எல் இ எஸ் 300 மி.லி.யை  ஊற்றவும். இது  தேன் பதத்தில் இருக்கும்.

                                      நன்கு மரக் குச்சியை வைத்து கிளறவும் வாசனை திரவியம் 25மி.லி.சேர்க்கவும். வாசனை திரவியம் லெமன் மட்டுமே சேர்க்க வேண்டும்.

கலப்படமில்லாத சோப் ஆயில் தயார்




No comments:

Post a Comment