Sunday 1 March 2020

  குதிர் பார்த்து வியந்த மாணவர்கள்

 சேற்றில் இறங்கி நாற்று  நடும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

  காளான் வளர்ப்பு பற்றி நேரில் செய்து கற்றுக்கொண்ட மாணவர்கள்


 
விவசாய கல்லூரிக்கு களப்பயணம் சென்ற மாணவர்கள்


















 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் செய்தனர்.


                                        5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் விவாசய கல்லூரிக்கு களப் பயணமாக  சென்றனர் .கல்லூரி பண்ணை  மேலாளர் கருப்பு ராஜ்   அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன்   தலைமை தாங்கினார் .விவசாய கல்லூரியில் ஆட்டு பண்ணை,கோழி பண்ணை,பன்றி பண்ணை,புறா பண்ணை,மீன் பண்ணை ஆகியவைகளையும்,பூச்சியியல் துறை ஆய்வகம்,மண் அறிவியல் ஆய்வகங்களையும், வெண்டிக்காய்,பாகற்காய்,புடலங்காய் போன்றவை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பாகவும் விவசாய பிரிவு அலுவலர் விக்னேஷ்,பண்ணை உதவியாளர் சகாயம் ஆகியோர் நேரில் கற்று கொடுத்தனர்.நவீன வேளாண்மை முறையில் தக்காளி பயிர் செய்வது தொடர்பாகவும் மாணவர்கள் கற்று கொண்டனர்.4500 கிலோ நெல் பாதுகாப்பக வைக்கப்பட்டுள்ள பண்டைய கால நெல் சேமிப்பு பாதுகாப்பு முறையான தானிய குதிர் தொடர்பாகவும் மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.சேற்றில் இறங்கி சந்தோஷமாக நாத்து நடுதல் செய்து கற்று கொண்டனர் .மாணவர்கள் பார்வையிட்ட இடங்களை பற்றி மாணவர்கள் அய்யப்பன்,வெங்கட்ராமன்,சிரேகா,கீர்த்தியா,ஜோயல் ரொனால்ட்,நதியா உட்பட பல மாணவர்களும்,ஆசிரியர்களும் பேசினார்கள்.பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.ஆசிரியர் கருப்பையா ,ஸ்ரீதர் மாணவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது.

                                                            பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்து செல்வது குறித்து கூறியதாவது :  இளம் மாணவர்களாகிய எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்போதே விவசாயம் தொடர்பாகவும்,விவசாயம் செய்வது குறித்து அறிந்து கொள்ளவும் ஏதுவாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன் ஒத்துழைப்புடன் களப்பயணமாக அழைத்து வருகிறோம்.இதன் மூலம் மாணவர்கள் விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கற்று கொள்கின்றனர்.எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்க்கிறோம் என்று கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் செய்து வேளாண்மை முறைகளை அறிந்து கொண்டனர்.

    











        



 மேலும் விரிவாக :
                              சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் செய்தனர். 

 விவசாயி ஆவதே குறிக்கோள் - மாணவர் உறுதிமொழி 

 ஆடு,பன்றி,கோழி ,புறா  வளர்ப்பது ,இயற்கை விவசாயம் செய்வது எப்படி ? நேரில் கற்றுக்கொண்ட மாணவர்கள் 

மண்புழு உரம்,பஞ்சகாவிய உரம்,மீன் அமிலம் போன்றவை எவ்வாறு தயாரிப்பது ? நேரில் கற்று கொண்ட மாணவர்கள் 

செடிக்கு வலிக்காமல் காய்கறிகளை எவ்வாறு பறிப்பது ? நேரில் சென்று காய்கறிகளை பறித்த மாணவர்கள் 

காளான் வளர்ப்பு செய்து கற்றுக்கொண்ட மாணவர்கள் 


நவீன வேளாண்மை முறையில் தக்காளி பயிர் செய்வது எப்படி என்பதையும்,நன்மைகளையும் அறிந்து கொண்ட மாணவர்கள் 

பண்டைய கால நெல் சேமிப்பு முறையான தானிய குதிர் தொடர்பாக நேரில் பார்த்து அறிந்து கொண்ட மாணவர்கள் 


 வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரிக்கு ஒரு நாள் களப்பயணம் :

                                   கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தொடர்ந்து வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரிக்கு களப்பயணம் மாணவர்களை அழைத்துச் செல்கின்றோம் .இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் வித்தியாசமான  முறையில் அமைந்திருந்தது. ஒரு வாரம் முன்பாகவே கல்லூரியின் தாளாளர் அவர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று கல்லூரியின் உள்ள கருப்பு ராஜ் என்பவர்  உதவியை நாடி அவர் மூலமாக நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம் . காலை ஆறரை மணிக்கெல்லாம் எங்கள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுத்து வந்து ,கல்லூரி வாகனத்தின் மூலமாக காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி எட்டு மணிக்கெல்லாம் கல்லூரிக்குள் சென்று விட்டோம் .முதலாவதாக நாங்கள் மாட்டுப் பண்ணைக்கு சென்றோம் .

மாட்டு பண்ணை

                 எங்களைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வரவேற்று பல்வேறு தகவல்களை விரிவாக விளக்கமாக எடுத்துச் சொல்லும் கோகுல்ராஜ் அவர்களை நாங்கள் சந்தித்தோம். மிக இயல்பாக அவர்கள் வழக்கம்போல் குஜராத் கிர்  மாடுகளையும், ராஜஸ்தான் ரதி மாடுகளையும் ,சாய் நிவாஸ் மாடுகளையும் , முரா எருமைகளையும் எங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். மாடுகள் சாப்பிடக்கூடிய உணவுகள் தொடர்பாகவும் எங்களுக்கு விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறினார்கள் .எவ்வளவு பால் கறக்கும் ,எப்படியெல்லாம் மாடுகளைப் பராமரிக்கும் என்கிற விவரங்களையும் எடுத்துச் சொன்னார்கள். குரங்குகளும் அங்கே உள்ளே வளர்க்கின்றனர். நீண்ட கயிறுகளில்  இரண்டு குரங்குகள் வளர்த்து வருகின்றனர் .கிர்  மாடுகளும் கல்லூரியின் தாளாளர் அவர்கள் பிஸ்கட் கொண்டு கொடுத்தால் மிக  அன்பாகப் பழகி பிஸ்கட்டுகளை சாப்பிடும் என்கிற தகவலையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள் .வெள்ளை எலி  வளர்க்கின்றனர் .அவற்றையும் நாங்கள் கூண்டுக்குள் அழகாக பார்த்தோம் .

 நாட்டு கோழி பண்ணை 

                       பிறகு அங்கிருந்து நேராக கோழி வளர்க்கும் இடத்திற்கு சென்றோம் . கோழிப் பண்ணையில் இன்குபேட்டர் மூலமாக கோழிகளை எவ்வாறு வளர்ப்பது என்கிற விவரத்தை மிகத்தெளிவாக அந்த கோழி  கண்காணிப்பாளர் எங்களிடம் விளக்கினார்கள். கோழியை தொடர்பான பல்வேறு தகவலையும் எடுத்துக் கூறினார்கள்.கோழிகளுக்கு நாம் முதலிலேயே சாப்பிட வழங்கும் உணவு வகைகளையே அவை உண்ண பழகும் என்கிற தகவலை எடுத்து கூறினார்கள்.இங்குள்ள கோழிகள் அகத்தி கீரைகளை சாப்பிடும் என்று கூறினார்.அருமையாக அழகாக நாம் கொடுக்கும் உணவினை பிற்காலத்திலும் சாப்பிடும் என்கிற தகவலையும் எடுத்துக் கூறினார்கள் .அசோஸ்பைரில்லம் மூலமாக எவ்வாறு உணவுகள் தயாரிக்கப்படுகிறது, அந்த உணவுகள் மிகவும் சத்துள்ளவை என்கிற தகவலையும் எங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். உணவுகளை கோழிகளுக்கு எத்தனை நாளைக்கு ஒருமுறை கொடுக்கிறோம், எவ்வளவு கிராம் கொடுக்கிறோம் என்கிற தகவல்களையும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள் .இரண்டு மாதங்களில் வளர்ந்த கோழிகளை எங்களுக்கு காண்பித்தார்கள். நன்கு வளர்ந்த கோழிகளையும் எங்களுக்கு காண்பித்தார்கள். பள்ளி மாணவர்கள் கோழிமுட்டையை கொண்டுவந்து அவர்களது பெயரில் கொடுத்தால் இருபத்தோரு நாட்கள் குஞ்சுகளை உருவாக்கி  நல்ல முறையில் திருப்பி தருவதாகவும் எங்களிடம் தெரிவித்தார்கள்.

பன்றி வளர்ப்பு :
 

                    வெள்ளைப் பன்றி வளர்ப்பு பகுதிக்கு நாங்கள் சென்றிருந்தோம். வெள்ளை பன்றி மிக அதிக அளவு எடைகளில் அதிக அதிக அளவு பணத்திற்கு விற்கப்படுவதாக அங்கு உள்ளவர்கள் தகவல் தெரிவித்தார்கள் .வெள்ளை பன்றிகளுக்கு உணவுகள் கல்லூரிகள் கிடைக்கக்கூடிய கழிவு பொருட்களில் மிக அதிகமாக போடுவதாகவும் கூறினார்கள். மிக எளிதான முறையில் வளர்க்கப்பட்டு மிக அதிக விலைக்கு விற்பதற்கு விற்கப்படுவதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவித்தார்கள் .பன்றி வளர்ப்பு உபயோகமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

 கறிக்கோழி வளர்ப்பு :

                                        அங்கிருந்து நேராக நாங்கள் கல்லூரி மாணவர்களே வளர்க்கக்கூடிய கோழி வளர்ப்பு பகுதிக்கு வந்தோம்.  நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் தொடர்பாகவும் ,அதில் வரக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாகவும், அவற்றை சரிசெய்து அதிக நாள் வாழ்ந்தாலும் இன்னும் அதிக விலைக்கு விற்கலாம் என்பது தொடர்பாக ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி செய்து வருகின்றனர் .அவற்றையும் நாங்கள் நன்றாக கண்டு அனைத்து விளக்கங்களையும் பெற்றுக்கொண்டோம் .

புறா பண்ணை :

                             மீண்டும் அங்கிருந்து நாங்கள் புறா வளர்க்க கூடிய இடத்திற்குச் சென்றோம். புறாக்களை மாணவர்கள் கையில் பிடித்து பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இளம் வயது மாணவர்கள் புறாக்களை தொடும்போது அளவில்லா ஆனந்தத்திற்கு சென்றார்கள். புறா வளர்ப்பு பற்றியும் அறிந்து கொண்டோம் .


 பீட்ரூட் ஊத்தப்பம் :

                அங்கிருந்து நாங்கள் நேராக கல்லூரியில் உள்ள இடத்திற்குச் சென்றோம் .அங்கு எங்களை அன்பாக வரவேற்று பீட்ரூட் ஊத்தப்பம், சாம்பார், சட்னி ,கொடுத்து அனைத்து மாணவர்களையும் மிகவும் அன்பாக கவனித்துக் கொண்டார்கள் .வேண்டிய அளவு உணவுகளை நல்ல முறையில் கொடுத்தார்கள். கல்லூரி விடுதியின் உணவக மேற்பார்வையாளர் உமாமகேஸ்வரி எங்களை அன்புடன் வரவேற்று அனைத்து உதவிகளையும் நல்ல முறையில் செய்திருந்தார் .

குதிர் பற்றி அறிந்து கொண்ட மாணவர்கள் :


  கல்லூரியின் முன்பாக தானியக் குதிர் அமைத்து இருக்கின்றார்கள் . இது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது .இதுதொடர்பாக விவசாய  பேராசிரியர் விக்னேஷ் அவர்கள் விளக்கிச் சொல்லும் பொழுது, குதிர் என்பது பண்டைய காலத்தில் நெல்களை சேமித்து வைக்கக்கூடிய ஒரு பகுதி என்று தெரிவித்தார் .தானியங்கள் வைக்கோலை மட்டுமே மூலமாக வெட்டவெளியில் வைத்து குடில் அமைத்து 4500 கிலோ நெல்லை தற்பொழுது பாதுகாத்து வருவதாக கூறினார். இது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாக எங்களுக்கு இருந்தது. வெட்டவெளியில் எலி போன்றவை ஏதும் உள்ளே வருமா என்று எங்களுடைய மாணவர் கேட்டார்கள் .அதற்கு எதுவுமே வராது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்கள் .இது மிகப்பெரிய ஆச்சரியமாக எங்களுக்கு இருந்தது. குதிர்  தொடர்பாக பல்வேறு தகவல்களை விக்னேஷ் அவர்கள் எங்களுக்கு விளக்கமாக விரிவாக சொன்னார்கள் ,இது மாணவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது என்றே கூறலாம்.


வியக்க வைத்த ஆய்வகங்கள்:

                          அங்கிருந்து நாங்கள் ஆய்வகங்களுக்கு சென்றோம் .முதலாவதாக மண் பரிசோதனை ஆய்வகம்  சென்றோம். மண் பரிசோதனை ஆய்வக பேராசிரியர் எங்களை அன்புடன் வரவேற்று பல்வேறு தகவல் எடுத்துக் கூறினார் .மண்ணின் தரம், மண்  எவ்வாறெல்லாம் பயன்படுகிறது அதன்  தரத்தையும் பெறுவதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற விவரங்களை எல்லாம் அவர் தெளிவாக எடுத்துக் கூறினார். மாணவர்கள் பல்வேறு சந்தேகங்களுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

 பூச்சியியல் துறை ஆய்வகம் :

             அடுத்ததாக நாங்கள் பூச்சியியல் துறை சென்றோம் . பூச்சியியல் துறை யில் எங்களை அன்பாக வரவேற்றார் பேராசிரியர் கருப்புராஜா . பூச்சிகள் தொடர்பான பல்வேறு தகவல்களை கூறினார் .நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார் .நன்மை செய்யும் பூச்சிகள் எவ்வாறெல்லாம் நமக்கு பயன்படுகிறது என்கிற தகவலையும் எடுத்துக் கூறினார்கள் .

செல் உயிரியல் ஆய்வகம் :

           அங்கிருந்து அடுத்ததாக நாங்கள் செல் நுண்ணுயிர் பிரிவிற்கு ஆய்வகத்திற்கு சென்றோம் .செல் நுண்ணுயிர் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்று கூறினார்கள். நொதித்தல் என்பது எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கினார்கள். நொதித்தல் மூலமாக தான் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது என்பதும் அது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எடுத்துக் கூறினார்கள்.

விவசாயம் செய்ய களப்பயணம் :

            அங்கிருந்து நாங்கள் அடுத்ததாக நேராக வேளாண்மை பிரிவிற்கு சென்றோம். வேளாண்மை விவசாயம் செய்யக்கூடிய பகுதிக்குச் சென்றோம்.

 நவீன முறை விவசாயம் :

 நவீன முறையில் வேளாண்மை செய்வது தொடர்பாக சகாயம் என்பவர் எங்களுக்கு விரிவான விளக்கங்களை எடுத்துக் கூறினார்கள்.சொட்டு நீர் பாசனத்தின் மூலமாகவும் அதிக அளவு விளைச்சல் தரக்கூடிய தக்காளியை எவ்வாறெல்லாம் தற்போது பயிரிடலாம் என்பதை எங்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்கள் .

காளான் வளர்ப்பு ,மண்புழு உரம் செய்து கற்று கொண்ட மாணவர்கள் :

                  அடுத்ததாக நாங்கள் காளான் வளர்ப்பு பற்றி அறிந்துகொண்டோம். காளான் வளர்ப்பு எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்பதை பேராசிரியர் கருப்பு ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு நேரடியாக செய்து  கற்றுக் கொடுத்தார்கள் .அதை மாணவர்களும் செய்து பழகிக் கொண்டார்கள். காளான் வளர்ப்பு இருக்கக்கூடிய பகுதியும் மண்புழு உரம் அதன் நன்மைகள் தீமைகள் அது தொடர்பாகவும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள் .மாணவர்கள் கையை விட்டு மண் புழுவை எடுத்து அதை அழகாக பார்த்து மண்புழுவின் நன்மைகள் பற்றி அறிந்து கொண்டார்கள். மண்புழு விவசாயிகளுக்கு உற்ற தோழன் என்பதை பேராசிரியர் அவர்கள் எங்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறினார்கள் .அடுத்ததாக பஞ்சகாவியா பற்றி தெரிந்து  கொண்டோம் இயற்கை உரத்தில் மிக முக்கியமான பஞ்சகாவியா பற்றி மிகத் தெளிவாக பல்வேறு தகவல்களை கருப்பு ராஜ் பேராசிரியர் எடுத்துக் கூறினார்கள்.

சேற்றில் இறங்கி நாற்று நடவு செய்த மாணவர்கள் :

               விவசாயம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்த மாணவர்களை நேராக விவசாய பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கேயே மாணவர்களை நாற்று நடச் சொன்னார்கள். மாணவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி சேற்றில் இறங்கிய காலை வைத்து உள்ளே சென்று அவர்கள் நாத்து நடும்பொழுது மிகப்பெரிய ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள் .ஏனெனில் இவர்கள் அனைவரும் நகர் பகுதியில் இருப்பவர்கள். எவ்வாறு சேற்றில் காலை வைக்க வேண்டும் என்கிற நடைமுறையும், காலை வைத்தால் எவ்வாறெல்லாம் இருக்கும் என்பதையும் அனுபவிக்கும் பொழுது மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு சென்றார்கள் என்பது உண்மை. அடுத்ததாக நாங்கள் நேராக மல்லிகைப்பூ வளர்க்கும் இடங்களையும், பொன்னாங்கண்ணிக்கீரை வளர்க்கும் இடங்களையும் சென்று ஆர்வத்துடன் மாணவர்கள் பார்த்தனர் .மீன் பண்ணையில் மீன்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறது  என்பதை நேரடியாக மீன்குட்டை  பகுதிக்கு அழைத்துச் சென்று எங்களை விரிவாக விளக்கமாக  விளக்கிச் சொன்னார்கள்.

விவசாய கல்லுரி மாணவர்களுடன் கலந்துரையாடல் :

ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் கல்லூரி மாணவர்கள் 

                             எங்கள் பள்ளி மாணவர்கள் கல்லுரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்.எங்கள் பள்ளி மாணவர்கள் தாங்கள் உள்வாங்கிய தகவல்களை விரிவாக எடுத்து சொல்லி ,தங்களின் திறமைகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.கல்லூரி மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் .அதோடு மாணவர்களை பாராட்டி மேலும் சில தகவல்களையும் சந்தேகங்களையும் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். 

உரம் இல்லாத இயற்கை  காய்கறிகளுடன் அன்பான மதிய உணவு :


அங்கிருந்து நாங்கள் மீண்டும் மதியம் மிகுந்த பசியோடு உணவகத்திற்கு வந்து இயற்கையாக விளைந்த காய்கறிகளான கீரை, பீட்ரூட் ஆகியவற்றுடன் மதிய உணவை நல்ல முறையில் சாப்பிட்டோம் ,உணவாக மேற்பார்வையாளர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் எங்களுக்கு மிக அன்பான முறையில் உணவுகளை வழங்கினார்கள். 

பாதுகாப்பாக பள்ளியை வந்தடைதல் :

மீண்டும் கல்லூரி வாகன ஓட்டுநர் குமார் அவர்கள் உதவியுடன் மாலை 5 மணிக்கு பள்ளியை வந்து அடைந்தோம் .இந்த ஒரு நாள் சுற்றுலா எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. எங்களுடைய மாணவர்களுக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது .

கல்லூரி தாளாளருக்கு நன்றிகள் பல :

கல்லூரியின் தாளாளர் அவர்கள் சென்னையில் இருந்து கொண்டே எங்களை பலமுறை தொடர்பு கொண்டும் எங்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். கல்லூரியில் உள்ள அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல :

விவசாயம் செய்வதற்கும் விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல் அறிவதற்கும் இளம்வயது மாணவர்களுக்கு இந்த களப்பயணம் மிகப்பெரிய உதவியாக இருந்தது என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் .இந்த நிகழ்வில் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த எங்களுடைய பள்ளி நிர்வாகம் ,ஆசிரியர்கள் ,கல்லூரி நிர்வாகம், கல்லூரி தாளாளர் திரு சேதுராமன் அவர்கள் ,கல்லூரியின் உடைய பல்வேறு தரப்பட்ட அலுவலர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.


மாணவர் அய்யப்பன் : விவசாய கல்லூரிக்கு வந்து சேற்றில் இறங்கி நாட்டு நற்றது எனக்கு வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி.நான் இதுவரை எனது குறிக்கோளாக போலீஸ்,கலெக்டர் ஆக வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.ஆனால் சேற்றில் இறங்கி நாட்டு நட்ட பிறகு எனக்கு விவசாயி ஆக வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.இந்த கல்லூரியில் பன்றி பண்ணையில் பன்றி வளர்ப்பதால் அதன் மூலம் நாம் சம்பாதிக்க இயலும் என்று சொன்னார்கள்.மேலும் மாட்டு பண்ணையில் காலையும் ,மாலையும் 12லிட்டர் கறக்கும் மாடுகளை பார்த்து ஆச்சிரியப்பட்டு போனேன்.மாடுகளுக்கு பிசுகட் கொடுத்தேன்.அவை ஆர்வத்துடன் சாப்பிட்டது கண்டு எனக்கு பிரமிப்பாக இருந்தது.கண்டிப்பாக நான் பிற்காலத்தில் விவசாயியாக வருவேன்,என்று பேசினார்.

 மாணவி கீர்த்தியா  : அனைத்து இடங்களிலும் 1330 குறள் தான் பார்த்துள்ளேன்.ஆனால் இங்கு கல்லூரியில் 1331வது குறள் எழுதி போட்டு அதில் விவாசியை பாராட்டி உள்ளனர்.புறா குஞ்சு எனது கையில் வாங்கி பார்த்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.நான் இது வரையில் முயல் குட்டி பார்த்தது கிடையாது.இன்று கையில் வாங்கி பார்த்து அதனை பக்கத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.வெண்டிக்காய் பறிக்கும்போது அதனை எவ்வாறு பறிக்க வேண்டும் எனக்கு நன்றாக சொல்லி கொடுத்தனர்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

 மாணவி நதியா  ; பாகற்காய்,புடலங்காய் பறித்த அனுபவம் அருமை.செடிகளுக்கு வலிக்காமல் காய்களை பறிக்க கற்று கொடுத்தனர்.மீன் பண்ணை பார்த்தோம்.மீனுக்கான உணவை தூக்கி போட்ட உடன் அவை வெளியில் வந்து சாப்பிட்டது நன்றாக இருந்தது.மூலிகை தாவரங்கள் பார்த்தோம்.ராசிகளுக்கு உள்ள மரங்களையும் பார்த்தோம்.சேற்றில் இறங்கி நாற்று நட்டது எனக்குள் புதிய அனுபவத்தை கொடுத்தது.

மாணவி ஜெயஸ்ரீ: மண் புழு உரம் தயாரிப்பது எப்படி,அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை விரிவாக விளக்கினார்கள்.ஸ்பைருலினா தயாரிப்பது எப்படி என்பதையும் விளக்கி சொன்னார்கள்.இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே நான் காலநிலை அறிவது தொடர்பாக பார்த்து வந்துள்ளேன்.ஆனால் இங்கு தெளிவாக அதனை நேரில் காண்பித்து எவ்வாறு மழை பெய்யும் அளவை கணிப்பது ,இன்றைய வெப்பநிலை அளவு என்ன அதன் தொடர்ச்சியான தகவல்களை விளக்கினார்கள்.எனக்கு முழுவதும் புரிந்தது.

மாணவர் வெங்கட்ராமன் : இது வரை செடி எப்படி வளர்கிறது என்று எனக்கு தெரியாது.இன்று ஆய்வகங்களில் தெளிவாக எனக்கு இதனை விளக்கி சொன்னார்கள்.காளான் வளர்ப்பது எப்படி,வளர்ந்த காளானை எப்படி விற்கலாம்,பஞ்ச காவிய தயாரிப்பது ,மீன் அமிலம்,சாணி உரம் போன்றவை தயாரிப்பது போன்றவற்றை நேரடியாக விளக்கி சொன்னார்கள்.இதன் மூலம் நான் வீட்டில் மிச்சமாகும் உணவு வகைகளை வைத்து உரம் தயாரிக்க முயற்சி எடுப்பேன்.மண் அறிவியல் ஆய்வகம் ,பூச்சியியல் துறை ஆய்வகம்,பூ,இலை பற்றிய ஆய்வகம்,நுண்ணுயிரியனங்கள் பற்றிய ஆய்வகம் போன்றவற்றை நேரில் காண்பித்து தெளிவாக விளக்கினார்கள்.என்று பேசினார்.
 


                   5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரும் சுற்றுலா செல்வது போல தனியார்  குளிர் வசதி கொண்ட  இரண்டு ஓம்னி பேருந்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.கல்லூரியில் நான்கு குழுக்களாக மாணவ,மாணவியரை பிரித்து அவர்களுக்கு உதவியாக கல்லூரி பேராசிரியர்களும்,கல்லூரி மாணவர்களும் வழிகாட்டுதலுடன் பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பேராசிரியர்கள் உதவியுடன் மாணவ,மாணவியர்க்கு வெண்டைக்காய் பறிக்க கற்று கொடுக்கப்பட்டது.மாணவர்களை  வைத்து எடை போட செய்து விவாசயம் தொடர்பாக நேரடியாக செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.                          
                               இக்கல்லுரி 240 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது.இங்கு இயற்கை விவசாயம் கடைபிடிக்கபடுவதை மாணவர்களுக்கு விரிவாக எடுத்து சொல்லப்பட்டது.இயற்கை வேளாண்மை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடபட்டதையும் விளக்கமாக சொல்லப்பட்டது.எண்ணெய் வித்துப் பயிர்களான எள் ,நிலக்கடலை ,சூரிய காந்தி,தென்னை,பூக்களில் முக்கியமாக மல்லிகை,பல மரங்களில் மா,பலா,வாழை மற்றும் மாதுளை,மேலும் சந்தனம் ,தேக்கு,செம்மரம்,வாகை,புங்கம்,வேம்பு,இலுப்பை,புளி ,வெப்பாலை போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் பயிரிடபட்டுள்ளதை மாணவர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது.  5 முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரையும் அவர்கள் கையால் செடிகளை கொடுத்துநட செய்ய சொன்னார்கள்.மாணவ ,மாணவியரும் சந்தோசமாக செடிகளை நட்டனர். 
                                                                 பன்றி வளர்ப்பு,ஆடு வளர்ப்பு,மாடு வளர்ப்பு,பால் தரும் பசுக்கள்,கோழி இனங்களில் கினி கோழி ,வான் கோழி,நாட்டு கோழி,புறா,முயல்,வாத்து போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வளர்க்க படுவதை விரிவாக ,நேரடியாக விளக்கப்பட்டது.
                                        கல்லூரி பண்ணை மேலாளர் கருப்பு ராஜ்   5 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விவாசயம் தொடர்பான கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர்.மாணவர்களின் கேள்விகளும்,தாளாளர் பதில்களும் ;

  நதியா : வெள்ளை பன்றி வளர்ப்பதால் என்ன பயன் ?

பேராசியர் கருப்புராஜ்  : விவாசயம் தொடர்பான பணிகளுக்கும்,உணவுக்காகவும் பன்றிகள் வளர்க்கபடுகின்றன.பன்றிகள் அதிக குட்டிகளை ஈனும்.நிறைய மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதற்கு தான் வெள்ளை பன்றிகள் வளர்க்கபடுகின்றன.

சந்தியா : வேளாண்மையில் என்ன,என்ன படிப்புகள் உள்ளன?

பேராசியர் கருப்புராஜ்: இளங்கலை பட்டம்,முதுகலை பட்டம்,டிப்ளோம படிப்பு,ஆராய்ச்சி படிப்பு என வேளாண்மையில் பல்வேறு படிப்புகள் உள்ளன.வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.இது தான் எல்லா தொழிலுக்கும் முன்னோடி .அனைத்து நாடுகளுக்கும் வேளாண்மை தேவை.பயிர் நிலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன.இடைக்காலத்தில் 20 வருடங்களாக சரியான மழை  இல்லை.நிலம் சரியாக உலுவதில்லை.அடுத்து தொழில். நிலம் தரிசாகி விடும்.விவசாயத்தின் வாயிலாக கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கும்.எனவே நீங்கள் அனைவரும் வருங்காலத்தில் விவசாயம் செய்ய முன்வரவேண்டும்.அதனை குறிகோளாக எடுத்து கொள்ள வேண்டும்.


  சிரேகா  : மாற்று வேளாண்மை என்றால் என்ன ?

பேராசியர் கருப்புராஜ் : சில இடங்களில் கால்வாய் பாசனம் இருக்கும்.நிலத்தில் பயிரை மாற்றி,மாற்றி விவசாயம் செய்தால் மகசூல் கூடும்.தண்ணீர் குறைவாக செலவு செய்தால் போதுமானது.

சந்தியா : மல்லிகை செடிக்கு எத்துனை நாளைக்கு ஒரு முறை மருந்து தெளிக்கபடுகிறது ?

பேராசியர் கருப்புராஜ் : மருந்து தெளிப்பது என்பது பூச்சியின் தாக்குதல்,நோயின் தாக்குதல் இருந்தால் மட்டுமே தேவை.எத்துனை நாள்  ஒரு முறை மருந்து தெளிப்பது என்பது நோயின் தாக்கத்தை பொருத்து மட்டுமே அமையும்.

  அய்யப்பன் : இயற்கை உரம் ,செயற்கை உரம் என்றால் என்ன?

பேராசியர் கருப்புராஜ் : இயற்கை உரம் என்பது மக்கிய தொழு உரம் ஆகும்.எரு  தயாரிப்பது உரம் ஆகும்.எப்போதுமே இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மண் இறுக்கமாக இருந்தால் மட்டுமே , சத்து பற்றா குறை இருக்கும் நேரமே செயற்கை உரம் போட்டால் மண் இளக்கம் கொடுத்து நன்றாக பயிர் வளரும்.


இவ்வாறு மாணவ ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.

5ம்  வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர் இது போன்று கல்லூரிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும் ,இது தங்களின் வாழ்க்கையில் முடியாத சந்தோசம் என்றும் கூறினார்கள்.

காளான் வளர்ப்பு குறித்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக செய்து கற்றுக்கொடுத்த பேராசிரியர் கருப்பு ராஜ் விளக்கமாக சொல்லிய தகவல் :
                            
                                         காளான் வளர்ப்பு கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து நன்றாக வேக வைக்க வேண்டும் . வேக வைத்த வைக்கோல்களை 50% ஈரப்பதமாக இருக்கும் பொழுது பாலித்தீன் பையில்  உள்ளேவைக்க  வேண்டும். எவ்வாறு அதனை செய்ய வேண்டும் என்பதே கீழ்வருமாறு காணலாம்: பாலித்தீன் பைகளை எடுத்து அடி நுனியை நூல் கொண்டு மேல் நோக்கி இருக்குமாறு கட்டி விட வேண்டும்.அதன் உள்ளே ஐந்து அடுக்குகளாக வைக்கோலை வைத்து ஒவ்வொரு அடுக்கிலும் காளான் வித்துக்களை துவ வேண்டும்.படுக்கையை மெதுவாக அமிழ்த்தி, பின் நூலால் இறுக்கமாகக் கட்ட வேண்டும்.காற்றோட்டத்திற்காக12 துளைகள் இட வேண்டும்.கூரை வேயப்பட்ட அறையில் இந்த படுக்கைகளை அலமாரி அமைப்புகளில் (அ) தொங்கும் நிலையிலோ அடுக்கவும்.அறை வெப்ப நிலை 22 – 250 செ மற்றும் ஒப்பு ஈரப்பதம் 85 – 90%ஏதும் மாசுபட்டுள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். அப்படி இருந்தால் அகற்றி விட வேண்டும்அதேபோல், பூச்சிகள் ஈக்கள், வண்டுகள், கரையான்கள், ஏதும் தாக்கியிருந்தர், மாலத்தியான் 1 மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.நன்றாக பரவிய விதைப் படுக்கையை வளரும் அறைக்கு மாற்ற வேண்டும்.21 நாள்களில் நமக்கு நன்கு வளர்ந்து காளான் கிடைத்து விடும் என்று செயல் முறையை செய்து காட்டினார்.

காளான் வளர்ப்பு வீடியோ :
 
https://www.youtube.com/watch?v=O8aF7yqCG-M








No comments:

Post a Comment