Saturday 6 October 2018

 அவசரமாக வந்தாலும் பொது இடங்களில் இனிமேல் சீறுநீர் கழிக்கமாட்டேன் - மூன்றாம் வகுப்பு மாணவர்  உறுதிமொழி 

உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் தவறுகள் என்ன, என்ன ? என்கிற கேள்விக்கு அறியாமல் செய்த தவறுகளுக்கு உண்மையை சொல்லி திருத்தி கொள்வதாக உறுதிமொழி எடுத்து அசத்திய மாணவர்கள் 




உடல் உழைப்பை பகிர்ந்து  வாழ பயிலரங்கம் 

 நாடகம் மூலம் விழிப்புணர்வு


நம் நாட்டில் நல்ல மாற்றம் வேண்டுமா ? 
உங்கள் வேலையை நீங்களே செய்ய பழகுங்கள் 

காந்தி அமைதி நிறுவனத்தின் செயலர் பேச்சு 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உடல் உழைப்பை பகிர்ந்து கொள்வோம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் வாயிலாக காந்தியின் கொள்கைகள் பயிலரங்கின் வழியாக மாணவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
                                            பயிலரங்க நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கை நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன் , ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன், கிராம நிர்மாண சங்க நிர்வாகி உருமத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை காந்தி அமைதி நிலைய செயலர் குழந்தைசாமி , அவரது மனைவி கில்டா,இணை செயலர் முனைவர் செண்பகவல்லி,உறுப்பினர் சந்தர் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நாடகங்கள் நடித்து காண்பித்து மாணவர்களிடையே உடல் உழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.மாணவர்களிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்டு தங்களது வேலைகளை தாங்களே செய்ய சிறுவயது முதல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விளக்கினார்கள்.மாணவர்கள் தவறு செய்கிறோம் என்று அறியாமல் செய்யும் செயல்களை அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து அதை திருத்த உறுதிமொழி எடுக்க வைத்தனர்.உணர்வுபூர்வமான செயல்கள் குறித்து சரியாக பதில் சொன்ன மூன்றாம் வகுப்பு மாணவர் முத்தய்யன் ,ஐந்தாம் வகுப்பு மாணவி ராஜேஸ்வரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உடல் உழைப்பை பகிர்ந்து கொள்வோம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் வாயிலாக காந்தியின் கொள்கைகள் பயிலரங்கின் வழியாக மாணவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.




 உத்தமர் காந்தி போற்றிய உடலுழைப்பு பயிலரங்கம் :

நாடகம் வழியாக விழுப்புணர்வு :

கேள்விகளுக்கு  பதில் சொல்லி அசத்திய மாணவர்கள்,வியக்க வைத்த நாடகமும் :

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உடல் உழைப்பை பகிர்ந்து கொள்வோம் என்கிற தலைப்பில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கின் விழிப்புணர்வு நாடகம் வாயிலாக காந்தியின் கொள்கைகளை   மாணவர்களுக்கு காந்தி அமைதி நிறுவன செயலர் சூ .குழந்தைசாமி எடுத்து சொன்ன தகவல்கள் :
  
 மாணவர்களை சிந்திக்க வைக்க வைத்த கேள்விகள் :
                                            உங்கள் பள்ளியில் ஒரு இடத்தில்  குப்பை உள்ளது . அதனை எவ்வாறு சுத்தப்படுத்துவது ? என்ற கேள்வியை கேட்டு அதற்கான விடையை மாணவர்களிடம் பெறுவதற்காக நாடகம் நடித்து காண்பிக்கப்பட்டது.
காந்தியடிகளின் கொள்கை என்ன ?
                                      உன்னுடைய உடம்புக்கு தேவையான உணவை உன்னுடைய உழைப்பால் பெற வேண்டும்.உடல் உழைப்பு அவசியம்.உடல்உழைப்பு இல்லாததால்தான் இன்று பல்வேறு பிரச்சனைகளை மனிதர்கள் சந்திக்கிறார்கள்.

  நாடகம் வழியாக விழிப்புணர்வு :

நான் ஒருத்தன் தப்பு செய்வதால் மட்டும்தானா இந்த உலகம் கெடுகிறது?

                   இதனை நாடகம் வழியாக காண்பிப்போம் என்று சொல்லி அடாவடியன் என்கிற மாணவராக குழந்தைசாமியும்,நல்ல பழக்கங்களை சொல்லும் அவரது நண்பராக முனைவர் செண்பகவல்லியும் நடித்தனர்.அப்போது அடாவடியன் என்கிற மாணவர் பபூல்காம் சாப்பிடுதல்,அதனை கண்ட இடத்தில் துப்புதல் ,எங்கு பார்த்தாலும் எச்சில் துப்புதல்,பிளாஸ்டிக்கை சாக்கடையில் போடுதல்,பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களை செய்கிறார்.இவற்றை செய்து விட்டு நான் ஒருத்தன் மட்டுமா செய்கிறேன்.இவ்வளவு பெரிய உலகத்தில் எத்தனையோ பேர் செய்யறாங்க.அவங்ககிட்ட போய் சொல்லுங்க.நான் ஒருத்தன் தப்பு செய்வதால் மட்டும்தானா இந்த உலகம் கெடுகிறது? என்கிற மாதிரி அவரது நடிப்பும்,பேச்சும் செல்கிறது.
                             இதன் தொடர்ச்சியாக மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் வாயின் வழியாக சொல்ல சொன்னபோது , 


 மூன்றாம் வகுப்பு மாணவர் முத்தையன் : இவர்கள் நடத்திய நாடகம் நன்றாக இருந்தது.அதனில் வரும் அடாவடி என்ற மாணவர் செய்யும் தவறுகளும்,அதனால் ஏற்படும் பாதிப்புகளும் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.நான் சாலையில் செல்லும்போது பொது இடங்களில் சீறுநீர் கழித்து விடுவேன்.இனிமேல் அப்படி இருக்கமாட்டேன்.அது போன்று சீறுநீர் கழிப்பவர்களிடமும் இது தவறு என்று எடுத்து சொல்வேன்.என்று பேசினார்.மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எட்டாம் வகுப்பு மாணவி சந்தியா : நான் ரோட்டில் செல்லும்போது பபுல்காம் சாப்பிட்டுக்கொண்டே செல்வேன்.அதனை கண்ட இடத்திலும் துப்புவேன்.இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன்.யாரும் செய்தாலும் அதனை மாற்ற சொல்லி அன்பாக சொல்லுவேன் என்று சொன்னார்.

எட்டாம் வகுப்பு மாணவி மாதரசி : நான் எச்சியை கண்ட இடத்திலும் துப்புவேன்.இது தவறுதான்.இனிமேல் அதுபோல் துப்பமாட்டேன்.எனது வேலைகளை நானே செய்வேன்.என்னை மாற்றி கொள்வேன்.

எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி : எங்கள் வீட்டில் சில வேலைகளை எங்கள் அம்மா செய்யுபோது நான் ஜாலியாக பார்த்துக்கொண்டு இருப்பேன்.இனிமேல் அப்படி இல்லாமல் எனது அம்மாவுக்கு உதவியாக இருப்பேன்.என்னையும் மாற்றி கொள்வேன்.

ஏழாம் வகுப்பு மாணவர் ஐயப்பன் : எங்கள் பள்ளியில் எங்காவது குப்பை கிடந்தால் நானே முதலில் அதனை எடுத்து போடுவேன்.அதன் பிறகு மற்றவர்களையும் குப்பை போட விடாமல் அன்புடன் சொல்லி சரி செய்வேன் என்று பேசினார்.

தன் உடம்பை கருவியாக வைத்து இருந்த காந்தியடிகள் :

மாணவர்களிடம் தொடர்ந்து பேசிய குழந்தைசாமி ,காந்தியடிகள் சின்ன,சின்ன விசயங்களில்கூட கவனம் செலுத்துவார் .வரலாற்றில் இடம்பெறாத ,அவரது சுய சரிதையில் இல்லாத ஒரு நிகழ்வை இங்கு சொல்ல விரும்புகிறேன்.இதனை நான் அவரது நண்பர்களின் வழியாக செவி வழி செய்தியாக அறிந்து கொண்டேன்.

காந்தியடிகள் தொடர்பாக புதிய செய்தி :
                                                     உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட காந்தியடிகள் யாத்திரைக்கு வெகு தூரம் தலைமை தாங்கி செல்வார் .பின் கிராமங்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் செல்லுவார்.ஒரு இடத்தில் யாத்திரை சில நிமிடங்கள் நின்று போனது.யாருக்கும் ஏன் என்று புரியவில்லை.தன் உடம்பை ஒரு கருவியாக வைத்திருந்தார் காந்தி.ஆனால் அன்று என்னவோ தெரியவில்லை,அவருக்கு சீறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது.இதோ ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்,நீங்கள் யாரும் வரவேண்டாம் என்று கூறி சென்றார்.வெகு நேரமாகியும் வரவில்லை.இரண்டு பேர் மட்டும் உள்ளே சென்று பார்த்தபோது,,காந்தியடிகள் மண் வாரி கொட்டி கொண்டிருந்தார்.ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு,நான் சீறுநீர் கழித்து இந்த பூமித்தாயை இழிவுபடுத்தி விட்டேன் என்று வருந்தி கூறினார்.சின்ன விசயங்களை கூட மதித்தார்.அதனால்தான் காந்தியடிகள் மகாத்மா என்று அழைக்கப்பட்டார்.

ஆறு பண்புகளால் வாழ்க்கையை வளமாக்கி கொள்ளுங்கள் :
                                        ஒருவர் மாணவ பருவத்திலேயே பின்வரும் ஆறு  பண்புகளை பெற்று இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெறலாம் :

1) குறுக்கே பேசாமல் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

2) இடையில் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கையைத் தூக்கி அனுமதி வாங்கிய பிறகே பேச வேண்டும்.

3) கோல் சொல்லாமல் நேரடியாக பேசி தீர்த்துக்கொள்வேன்.

4) இயற்கையில்  மாற்றமுடியாத ஒன்றை நான் குறையே சொல்ல மாட்டேன்.

5) ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி தப்பான வதந்திகளை பேசுவது இல்லை .

6) தப்பு செய்தால் நான் தப்பு செய்தேன் என்று ஒப்புக்கொள்வது.

                     இந்த ஆறு பண்புகளையும் எப்போதும் கடைபிடித்தால் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த இயலும்.

கேள்வி :வீட்டில் தீடிரென மின்சாரம் தடைபட்டால் என்ன செய்வீர்கள் ?
 
மாணவர்களின் பல்வேறு விதமான பதில்கள் :
1)  நானே சென்று விளக்கை ஏற்றுவேன்.
2) மெழுகுவர்த்தி ஏற்றுவேன்.
3) அலைபேசி இருந்தால் அதனில் உள்ள டார்ச்சை எரிய வைப்பேன்.
4) மின்சார வாரியத்துக்கு போன் செய்வேன்.

இவ்வாறு மாணவர்கள் பதில் சொன்னார்கள்.இந்த இடத்தில் இவை அனைத்தையும் யார் செய்கிறார்கள் ? நானே செய்கிறேன்  என்பதுதான் பதில்.பள்ளியில் உள்ள குப்பையை எடுப்பதில் இருந்து  அனைத்து பணிகளையும் நான் செய்வேன்,நான்தான் முதலில் முன்  வருவேன் என்று சொல்கிறோமோ அன்று தான் நாட்டில் முன்னேற்றம் வரும் என்று பேசினார்.
                             இந்த விழிப்புணர்வு பயிலரங்கின் வாயிலாக மாணவர்கள் பல்வேறு நல்ல விசயங்களை பழகி கொண்டு அதனை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும் உதவியாக இருந்தது.




                                                            









                                        

No comments:

Post a Comment