Thursday 31 January 2019


 நான்கு ஆண்டுகளில் 50 சான்றிதழ்கள் , 40 பரிசுகள் பெற்று நடுநிலைப்பள்ளி மாணவி சாதனை 



பள்ளி மாணவ தேர்தலிலும்  27 வாக்கு  வித்தியாசத்தில் ஜெயித்து மாணவ தலைவராக உள்ளார் 

ஆளுமைகளிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று அசத்தும் மாணவி 


விருதுகள் மற்றும் சான்றிதழ்களின் நாயகி  காயத்ரி

 மருத்துவராகி கிராமத்தில் சென்று உதவி செய்யவேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார் மாணவி 

 
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிருபித்த மாணவி 



           மாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம் என பங்கேற்கும் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார் ஒரு மாணவி  .13 வயதில் 50 சான்றிதழ்கள், 40பரிசுகள்  பெற்று அசத்தியுள்ளார்.அவரை பற்றி பார்ப்போமா ?

                              சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் படிக்கும்  வகுப்பு மாணவி காயத்ரி..இவரது தந்தை சித்ரவேல் ஆவார்  . தாய் சொர்ணாம்பாள்   ஆவார்.சிறு வயதில் இருந்தே ( இப்போதே சிறு வயதுதான் ) ஓவியம்,பேச்சு,நாடகம் ,கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் கொண்டார்.சிறுவயதிலேயே ஆல்ரவுண்டராக திகழும் இவர் பள்ளியில் மட்டுமல்ல வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளிலும்  இவரது வரையும் திறன் ,ஓவியங்கள் பார்வையாளர்களை கவரும்.பள்ளி மாவட்ட ,மண்டல ,மாநில அளவிலான போட்டிகளில் சான்றிதழ்கள் பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார்.திருச்சி அண்ணா கோளரங்கம் மற்றும் தமிழக அரசின்   தமிழ்நாடு அறிவியல் மையம் நடத்தும் விநாடி  வினா ,ஓவிய போட்டிகள்,கணித போட்டிகள் ,தமிழக மின்சாரவாரியத்தின் திருச்சி மண்டல அளவிலான ஓவிய போட்டிகள், பல ஆன்மீக குழுக்கள் ,விழா கழகங்கள் ,சேக்கிழார் விழா குழு,கந்தசஷ்டி விழா கழகம் ,தமிழ் சங்கங்கள் ,பல் சமய உரையாடல் ,பணிக்குழு,பேச்சுபோட்டிகள் ,இந்து சமய அறநிலைய நடத்தும் பாவை விழா ,சனாதன தர்ம மடலாயம் ,புத்தக திருவிழாக்கள் ஆகியனவற்றில் நிகழ்த்தும் பேச்சு போட்டிகள்  மற்றும் ஓவிய போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் பெற்று வந்த பெருமை கொண்டவர். 
                                பள்ளியில் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் மாணவர்களின் அன்பை வாக்குகளாக பெற்று 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாணவ தலைவராக தொடர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.
                       

                                  
                                மேலும் பத்திரிக்கை துறைகள் நடத்துகிற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளது இவரது தனி சிறப்பு.மத்திய அரசின் ஆற்றல் சேமிப்பு,எரிசக்தி துறை,மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்துகிற மழை நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஓவிய போட்டிகள்,ஆயுள் காப்பீட்டு கழகம் நடத்தும் ஓவிய போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டும்,மெடலும் ,சான்றிதழ்களும் குவித்து வருகிறார். தேவாரம்,திருவாசகம்,பெரிய புராணம் பல நூல்கலையும் படித்து இளம் வயதிலேயே ஆன்மீக பாடல்களையும் அறிந்து வருகிறார்.பாடல்களை திறம்பட ஒப்புவிக்கும் ஆற்றல் மிக்கவர்.

                                                பல்வேறு போட்டிகளில் பரிசு பதக்கம் சான்றிதழ்கள் பெற்று சிறப்புடைய மாணவி காயத்ரி ஆலயங்கள் ,உண்டியல் எண்ணும் பணிகள் ,சமூக பணிகள் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறார்.இவர் தொட்டதெல்லாம் வெற்றிதான்.வெற்றி மீது வெற்றி வந்து இவரை இவரது திறமையால் வந்து சேருகிறது.படிப்பு,போட்டிகள் அனைத்திலும் ஊக்கமுடன் உழைக்கும் இவரது செயல்பாடு பாராட்டும்படி உள்ளது.பதிமூன்று  வயதில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று 50 சான்றிதழ்கள் , 40க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

                            இது குறித்து மாணவி காயத்ரி கூறுகையில், எனது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை
கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும்  , மாணவர்களின் ஒத்துழைப்புடனும் வீட்டில் பெற்றோர்களின் ஊக்கம் ஆகியவற்றுடன் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறேன்.திருச்சி,மதுரை,சென்னை போன்ற பல்வேறு ஊர்களுக்கு இப்போதுதான் முதல் முறையாக போட்டிகளில் கலந்து கொள்ள சென்று வந்துள்ளேன்.இதுவரை இந்த ஊர்களுக்கு சென்றது இல்லை.எனது தந்தை கூலி வேலை செய்து வரும் சொற்ப சம்பளத்தில் தான்   என்னை படிக்க வைக்கிறார்.எனது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உதவியுடன் ஆசிரியைகள் உதவியுடனும் பல்வேறு போட்டிகளுக்கும் பல ஊர்களுக்கும் சென்று வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.வரும்காலத்தில் சிறந்த பேச்சளாராகவும் ,ஓவியராகவும் வரவேண்டும் என்பதே எனது ஆசை.எனது லட்சியம் இதன் மூலம் எனது இலட்சியத்தை அடைய வழிகளை கற்று கொள்வேன்.நான்காம்  வகுப்பு முதல் எட்டாம்  வகுப்புக்குள் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு 50 சான்றிதழ்களையும் ,40க்கும் மேற்பட்ட பரிசுகளையும் பெறுவதற்கு பள்ளிதான் காரணம் என்று பெருமையுடன் சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.







No comments:

Post a Comment