Saturday 15 December 2018

என் எம் எம் எஸ் தேர்வும் ,அரசு பள்ளி மாணவர்களும்


                                            நண்பர்களே ,இந்த ஆண்டு (2018 ) என் எம் எம் எஸ் எழுதும் எங்கள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு தினசரி வரவைப்பதே மிக சவாலாக இருந்தது .ஏன்  இந்த நிலைமை ?
                                       பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தினசரி பள்ளிக்கு வரவைப்பதே மிகவும் சிரமான வேலை ஆகும்.அதுவும் இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் என் எம் எம் எஸ் தேர்வுக்கு என்று பயிற்சிக்கு எடுத்து கொண்ட மாணவர்களின் குடும்ப சூழ்நிலை மிகவும் சுமார்.பயிற்சியாளர் திரு.மோகன் அவர்கள் வெகு தொலைவில் உள்ள ஊரிலிருந்து எங்கள் பள்ளிக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி கொடுக்க வருகிறார் என்று பல நாள்களுக்கு முன்பே திட்டமிட்டு சொல்லியும் சரியாக பயிற்சியாளர் வரும் நாளன்று தேர்வு எழுத உள்ள குறிப்பிட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

அம்மாவை உதவிக்கு அழைத்த மாணவி :
                                       ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) மாணவி பள்ளியில் நன்றாக படிப்பார் .ஆனால் வீட்டுக்கு சென்றால் படிக்கும் சூழ்நிலை இல்லை .அவரை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் முயற்சி எடுத்துவருகிறார்கள்.பயிற்சியாளர் வருகை தந்த நாளன்று அந்த மாணவியும் வரவில்லை.பிறகு வீட்டுக்கு மாணவர்களை அனுப்பி அந்த மாணவியை வரவைத்தோம்.அவர்களிடம் செல் போன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மாணவி வரும்போதே அம்மாவையும் உதவிக்கு அழைத்து வந்து,வைத்து வலி அதனால்தான் வர தாமதம் என்று கூறினார்.நாங்களும் ஒன்றும் சொல்லவில்லை.பள்ளிக்கு வந்த வரை மகிழ்ச்சி என்று சொல்லி அனுப்பி வைத்தோம்.

தீபாவளிக்குகூட சாப்பிடாத மாணவர்கள் :
                                                                          சில நாட்கள் கழித்து மாணவி ராணி மற்றும் அவரது தம்பிகளும் ஒரு வாரம் பள்ளிக்கு வரவில்லை.பிறகு அவரது தாயாரே பிள்ளைகளை அழைத்து வந்து சார், ஒரு பையனுக்கு காய்ச்சல்.மகளுக்கு வாய்த்து வலி.என்ன சார் பண்றது.எங்க வீட்டுக்குகாரர் நன்றாக குடித்து விட்டு ,என்னை வட்டிக்கு பணம் வாங்கி வர சொல்லி சண்டையிடுகிறார்..பிள்ளைகளிடமும் சண்டை போடுகிறார்.தீபாவளியன்றும்,அடுத்து இரண்டு நாட்களும் எனது குழந்தைகள் சரியாய்   சாப்பிடவும் இல்லை ,புது துணி அணியவும் இல்லை.பள்ளியில் கொடுத்த சீருடையைத்தான் அணிந்து இருந்தனர்.என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள் சார்? நான் கட்டியிருக்கும் ஆடைகூட ஆங்காங்கே கிழிந்து தையல் போடப்பட்டுள்ளது.எனது நிலைமை யாருக்கும் வரக்கூடாது சார் என்று கண்ணீர் ததும்ப அழுதார்.தினசரி எனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாலே எனக்கு போதும்,போதுமென்று உள்ளது சார் என்று சொன்னார்.எங்களுக்கும் கண்களில் கண்ணீர் .மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினோம்.

பல நாள் பள்ளிக்கு வராத மாணவர் :
                                                       நன்றாக படிக்க கூடிய மற்றுமொரு மாணவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) பெரும்பாலும் பள்ளிக்கே வருவதில்லை.அவரது அம்மாவை அழைத்து,உங்கள் பையன் நன்றாக படிக்கிறார்.தினசரி பள்ளிக்கு வர சொல்லுங்கள் என்று அறிவுரை சொன்னோம்.அதற்குமாணவரின் தாயாரோ,நான் சொல்லி விட்டேன் சார் அவன்தான் வரவில்லை என்று எளிதாக சொல்லி விட்டு சென்று விட்டார்.மாணவர் வரவில்லையே என்று போன் செய்தால் போனும் எடுப்பது கிடையாது.மாணவரின் தாயாரோ,நான் என்னத்த சொல்ல ,சார் அவர் அப்பா தினமும் குடித்து விட்டு சண்டை போட்டு அடிக்கிரார்.அப்பாவின் நிலையை பார்த்து மகன்களும் அப்படியே அதிர்ந்த போய் விடுகிறார்கள்.இரவு சரியாக தூங்காமல் மறுநாள் ,நான் வெள்ளனா கிளம்பி வேலைக்கு போன பிறகு இவர்கள் பள்ளிக்கு வராமல் போய் விடுகிறார்கள் சார்.நானும் வேலை பார்த்தால்தான் ஏதாவுது இவர்களுக்கு சாப்பாடு குடிக்க முடியும் என்று வருத்தப்பட்டு சொல்லி சென்றார்.உண்மையில் எங்களுக்கே மிகவும் வருத்தமாக இருந்தது.இது போன்ற சூழ்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தினசரி பள்ளிக்கு வந்தாலே மிக பெரிய வெற்றி என்பது எனது வெளிப்பாடு.

                                                  இவரின் தம்பியும் பல நாட்களாக பள்ளிக்கு சரியாக வருவதில்லை.பிறகு வீட்டுக்கு சென்று மாலை வேலைகளில் ஆசிரியர்கள் அவர்கள் வீட்டில் பேசி அவனை அன்புடன் பள்ளிக்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.இதுதான் பெரும்பாலான அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை.

நன்றாக படிக்கக்கூடிய மாணவி ஆனால் இன்று NMMS தேர்வுக்கு சரியான நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புகூட வரவில்லை .ஏன் ?
                                             இன்று எங்கள் பள்ளியின் ஆசிரியை தேர்வு துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே தேர்வு நடைபெறும் பள்ளிக்கு சென்று விட்டார்கள்.தேர்வு எழுதும் மாணவர்களையும் வர சொல்லி விட்டார்கள்.ஆனால் நாம் இந்த தகவலின் முதலில் சொல்லப்பட்ட மாணவி அவர்கள்  தேர்வுக்கு சரியான நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புகூட வரவில்லை.பிறகு ஆசிரியை அவர்களே வண்டி எடுத்துக்கொண்டு நேராக வீட்டுக்கு சென்று ,மாணவியை  அழைத்து வந்து தேர்வு நடைபெறும் பள்ளிக்குள் விட்டு சென்றுள்ளார்கள்.ஏன் ? அந்த மாணவி சரியான நேரத்தில் வரவில்லை என்று விசாரித்தபோது,இரவு மாணவி அவர்களின் தந்தை குடித்துவிட்டு வந்து அம்மாவுடன் கடுமையாக பேசியதால் மனவருத்தத்தில் இரவு படிக்கவும் இல்லை.சரியான தூக்கமும் இல்லை என்பதால் வர இயலவில்லை என்று சொல்லி கண்ணீர் விட்டு உள்ளார்.பிறகு அந்த மாணவிக்கு மனதைரியம் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி தேர்வுக்கு அனுப்பி வைத்தோம்.

மாணவர்களை வாழ்த்துவோமாக !
                                   இதுதான் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலைமை.பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள் வீட்டு சூழ்நிலையின் காரணமாக படிக்கும் சூழ்நிலை மாறி விடுகிறது.இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் எட்டாம் வகுப்பை தாண்டி படித்தாலே மிகப்பெரிய சாதனையாக உள்ளது.இவர்களுக்குத்தான் நாங்கள் பாடமும் சொல்லி குடுத்து தொடர்ந்து நல்வழிப்படுத்தி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மாதம் ரூபாய் 1000 கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் ஆர்வமாகும்.  பல தடைகளை தாண்டி ஆசிரியர்களின்  கடுமையான முயற்சியுடன் படித்துள்ள மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துவோமாக !

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.





No comments:

Post a Comment