Wednesday 8 April 2020

நீதிமன்ற விழாவில் பங்கேற்ற அனுபவம் 

கதைகளின் மூலம் கருத்துக்களை விளக்கிய நீதிபதி 

நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா 









                               நண்பர்களுக்கு வணக்கம். கடந்த மாதத்தில் ஒரு நாள் தேவகோட்டை நீதிபதி அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு கடித தகவல் வந்தது. உலக மகளிர் தினம் நீதிமன்ற வளாகத்தில் கொண்டாட இருப்பதாக அழைப்பு எனக்கு வந்தது .அதனை சரியாக ஞாபகம் வைத்திருந்து ஒரு வாரம் கழித்து நீதிபதி முருகன் அவர்களிடம் பேசி அந்த நிகழ்வில் பங்கேற்றது  மிகவும் அருமையான ஒரு நிகழ்ச்சி . என்  வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றே சொல்லலாம்.நீதிமன்ற நீதிபதிகள்,அலுவலர்கள் , அரசு வழக்கறிஞர்,மூத்த வழக்கறிஞர்கள்  என்று அனைவரையும் ஒருசேர நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. முதலாவதாக எனது அருகில் அமர்ந்து இருந்த நீதிமன்ற அலுவலர் திரு.குருமூர்த்தி அவர்கள் மிக அழகாக அருமையாக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு கவிதை வாசித்தார்கள். பிறகு வழக்கறிஞர் திரு.பாலசுப்ரமணியம் அவர்களும்,பெண் வழக்கறிஞர் ஒருவரும் உலக மகளிர் தினம் குறித்து பேசினார்கள் .அதன் பிறகு நீதிமன்ற சிராசதார் பாண்டிச்செல்வி மேடம் அவர்கள் பேசினார்கள்.எனக்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. சில நிமிடங்கள் என்னுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டேன் .

மூத்த வழக்கறிஞர்,சமூக ஆர்வலரின் உருக்கமான பேச்சு

                                   எங்கள் பள்ளியிலிருந்து என்னுடன் இரு ஆசிரியைகளும் கலந்து கொண்டதற்கு நீதிபதி அவர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்தார்கள் .  நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்குகொண்ட நிகழ்வு எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனக்கு அடுத்ததாக பேசிய மூத்த  வழக்கறிஞர் ஜான்சிராணி அவர்கள் மிக அழகாக பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். இன்றைய பெண்கள் எப்படி உள்ளார்கள், இன்றைய நிலவரங்கள் எப்படி நடைபெறுகிறது, இன்று பெண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் ,பெண்களுக்கான நிறைய விஷயங்கள் கிடைத்த போதும் அதனை முழுமையாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும், விவாகரத்துகள் இல்லாமல் நல்ல முறையில் குடும்பத்தை கொண்டு போவதற்கான பல்வேறு கருத்துக்களை அழகாக எடுத்துரைத்தார்கள்.எங்கள் பள்ளி குறித்தும் பல்வேறு நல்ல கருத்துக்களை தெரிவித்தார்கள்.என் சார்பில்  நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன். அடுத்ததாக சமூக ஆர்வலர் ரோனிகா அவர்கள்  பேசும்போது  மிகவும் இயல்பாக இருந்தது. வாழ்க்கை நடைமுறையை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். இன்று காலையில் கூட  மருத்துவமனையில் சந்தித்த  பெண்ணை காப்பாற்றி விட்டு அவர் தொடர்பான சில விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அது மனதுக்கு மிகவும் வேதனையாகவும், பல்வேறு விஷயங்களை பெண்களுக்கு எடுத்துரைப்பதாக மிக இயல்பாக  சொல்லி இருந்தார் . அதன் தொடர்ச்சியாக அரசு வழக்கறிஞர் சொர்ணலிங்கம் அவர்கள் பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டிய விஷயங்கள்  குறித்தும், நீதிமன்றத்தில் அதிக அளவில் பெண் அலுவலர்கள் இருப்பதற்கும் வாழ்த்து தெரிவித்து பேசினார்கள்.

இதிகாச கதைகளின் வழியாக பெண்களின் பெருமைகளை விளக்கிய நீதிபதி


                                நிறைவாக  பேசிய மாண்புமிகு  நீதிபதி முருகன் அவர்கள் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு வழியாக அவரது அம்மா குறித்தும்,தனது மகனுக்கு எப்போது துறவறம்  என்கிற முடிவை மிக சரியாக சொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவராக இருந்துள்ளார் என்பதையும் , காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு கூறி அதனில் பெண்மையின் முக்கியத்துவம் குறித்தும் பேசி  பெண்களுடைய நிலைமையை மிக அழகாக தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கதைகளின் மூலமாக எடுத்துரைத்தார் .கதைகள் கேட்பதற்கு ஆர்வமாகவும் சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும் அமைந்திருந்தது .மகளிரின் இன்றைய நிலை குறித்தும்,ஆண்களின் பங்கு குறித்தும் ,குழந்தைகளின் நிலை குறித்தும் தெளிவாக விளங்கும் வகையில் பேசினார்கள்.எப்பொழுதுமே எனக்கு நீதிபதி அவர்களிடம்  பிடித்த ஒரு விஷயம் பல்வேறு தகவல்களை பேசினாலும்  சொல்ல வேண்டிய விஷயத்தை ஆணித்தரமாகவும், அழகாகவும் எடுத்துரைப்பதில் மிக நேர்த்தியான ஒரு பேச்சாளர். உண்மை அதுதான் . நீதிபதி பேசும்போது எங்கோ செல்கிறார் என்று எண்ணும்போதும் கூற வந்த தகவல்களை நிறைவாக கொண்டுவந்து எடுத்த விஷயத்தில் முடிப்பதில் அவர் மிகவும் கெட்டிக்காரர். ஏற்கனவே இரண்டு மூன்று நிகழ்வுகள் எங்கள் பள்ளியில் அவருடன் கலந்து கொண்டதன் அடிப்படையில் அவருடைய பேச்சு பற்றி எனக்கு  நல்ல புரிதல் இருந்தது .அங்கு இருந்த அனைவருக்குமே நல்ல புரிதல் இருந்தது . நீதிபதி அவர்களுடன் கலந்து கொண்ட அந்த விழாவிற்கும் அதன் மூலமாக எனக்கு கிடைக்கப் பெற்ற பல்வேறு தகவல்களுக்கும் நிச்சயமாக நீதிபதி முருகன் ஐயா அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளகிறோம் .

அனுபவத்தை பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட ஆசிரியைகள்
 


               நிகழ்வு நடந்த மறு நாள் எங்கள் பள்ளியில் ஆசிரியர்களிடமும் ,மாணவர்களிடமும் காலை வழிபாட்டு கூட்டத்தில் நீதிமன்ற விழாவில் பங்கேற்ற ஆசிரியைகளை நிகழ்வு குறித்து  பேச சொன்னேன் .அப்பொழுது ஆசிரியை செல்வமீனாள் பேசும்போது , நீதிமன்ற விழாவில் நாங்கள் பங்கேற்றது புதுமையான விஷயம். நாங்கள் இதுவரை நீதிமன்றத்திற்கு ஒருமுறை பள்ளியின் சார்பாக சென்று இருக்கின்றோம். மாணவர்களை அழைத்துச் சென்றபோது. ஆனால் இரண்டாவது முறையாக இது போன்ற விழாவிற்கு  நீதிமன்றம்  சென்றபோது எங்களுக்கு மிகப் பெருமையாக இருந்தது.அதுவும் மகளிர் தின விழாவில் பங்கேற்றது இன்னுமும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. நீதிமன்றத்தில்  70 சதவீதத்திற்கு மேல் பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சிரியமாக  இருந்தது . பள்ளிக்கூடத்தில் பணியாற்றுவதோடு வெளியில் நிகழ்வுகளுக்கும்  செல்லும்போது பல்வேறு விஷயங்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அது போன்றுதான் நீதிமன்றத்திற்கு சென்று இந்த விழாவில் கலந்துகொண்டது எங்களுக்கு பல்வேறு புதிய தகவலை கற்றுக்கொடுத்தது என்கிற தகவலையும் அங்கே பகிர்ந்துகொண்டார். விழாவில்  கலந்து கொண்ட மற்றொரு ஆசிரியை முத்துமீனாள் பேசும்போது  நீதிபதி அவர்களுடைய பேச்சு மிக அருமையாக இருப்பதாக தெரிவித்தார்கள்.அங்கு பேசியவர்கள் பல்வேறு விஷயங்களை பெண்களுக்கு புரியும் வண்ணம், குடும்பத்தை எவ்வாறு நாம் காப்பாற்றவேண்டும், குடும்பத்தில் பெண்களின் பங்கு குறித்தும்,ஆண்களின் பங்கு குறித்தும்   மிக அழகாக எடுத்துரைத்தாக தெரிவித்தார்கள். 

வாய்ப்புக்கு நன்றிகள் பல

                              நண்பர்களே  அங்கு பேசிய அனைவருமே  அதிகமான அளவில் பெண்கள் பணியாற்றுவதும், அவர்கள் குடும்பத்தையும் கவனித்து வேலைக்கும் வந்து  சமுதாய கடமையாற்றுவது மிகவும் பாராட்டுக்குரியது .நமது குழந்தைகளுக்கும் நல்ல விசயங்களை அதிக அளவில் கற்று தரவேண்டும் , குடும்பம்,பணியாற்றும் இடம் என அனைத்து இடங்களிலும் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் பொறுமையாக அனுசரித்து செல்ல வேண்டும் .அப்போதுதான் நீண்ட காலம் நமது அமைப்புகள் வலுப்பெறும் என்று  மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினார்கள் .  இந்த விழாவில்  பங்கேற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்து இருந்தது. நல்லதொரு வாய்ப்பளித்த மாண்புமிகு நீதிபதி முருகன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

அன்புடன் 
லெ .சொக்கலிங்கம்,
 தலைமை ஆசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
 தேவகோட்டை.
 சிவகங்கை மாவட்டம்.
8056240653






No comments:

Post a Comment