Thursday 23 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம்
தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியர் திருமங்கலம் கிருஷ்ணகுமார் அவர்களுடன்  பழகிய அனுபவம்




தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியர் திருமங்கலம் கிருஷ்ணகுமார் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளியை பற்றி பாராட்டி எழுதிய வரிகள்:
 
 "நல்ல நிலத்தில் விழுகிற விதைகள்.... செழிப்பான 
மரங்களாகின்றன...." 
சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி,  மிகச்சிறந்த நிலம்.
 இங்கு இருக்கிற குழந்தைகள் , மிகச் சிறந்த உயரத்தை எட்டுவார்கள் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.
  ஒரு முன் மாதிரி பள்ளியாக உருவாக்கிக் கொண்டிருக்கிற தலைமையாசிரியர் திரு. சொக்கலிங்கம் சாரை தலை வணங்கி வாழ்த்துகிறேன். அவரிடம் இருந்தும்,  இங்குள்ள ஒவ்வொரு குழந்தைகளிடம் இருந்தும் எனக்கான பாடங்களை நிறைய நான் எடுத்துச் செல்கிறேன். 
                                             நன்றி 
எஸ் கிருஷ்ணகுமார்,
செய்தி ஆசிரியர்,
தினகரன் நாளிதழ்,
 மதுரை.


நாளிதழின் செய்தி ஆசிரியரை முதன்முறையாக சந்தித்த அனுபவம் :

                           தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியர்  திருமங்கலம் கிருஷ்ணகுமார் அவர்களுடன் பழகிய அனுபவம் இனிமையானது. அவரது  வலைதளம் மூலமாக அவருடன் தொடர்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக அவருடைய கருத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டபோது இனிமையான அனுபவம் ஏற்பட்டது. தினகரன் நாளிதழில் ஞாயிறு தோறும் வெளிவந்த தமிழ் குறித்த கட்டுரை தொடர்பாக வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டபோதும்   தொடர்ந்து அவருடன் எங்களுக்கான தொடர்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அன்னாரை  எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாட வருமாறு அழைத்திருந்தேன். பத்திரிக்கையில்  மதுரை பதிப்பின் செய்தி ஆசிரியராக உள்ள ஒருவர் எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினால்  பத்திரிக்கை தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு எளிதாக புரியும் . நாளிதழ்  தொடர்பான விஷயங்களையும் ,அது தொடர்பான வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும்   இளம் வயதிலேயே மாணவர்கள் மனதில் பதிய வைக்கும் வேண்டும் என்கிற நோக்கத்தில் அவருக்கு அழைப்பு கொடுத்து இருந்தேன். அதன் தொடர்ச்சியாக அன்னார் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாள் காலையில் மதுரை திருமங்கலத்தில் இருந்து பேருந்தில் கிளம்பி   எங்கள் பள்ளிக்கு வருகை தருவதற்காக காரைக்குடிக்கு எட்டு மணிக்கெல்லாம் சரியாக வந்து விட்டார்கள்.  பேருந்து நிலையத்தில் தான் முதன் முதலாக அன்னாரை சந்தித்தேன்.அது வரை தொலைபேசி வழி தொடர்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.நானும் எட்டு மணிக்கு தான் பள்ளிக்கூடத்திற்கு கிளம்புவேன். காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து அவரை பேருந்தில் மூலமாக அழைத்துக்கொண்டு எங்கள் பள்ளிக்கு சென்றோம். 

நாளிதழ் தொடர்பாக மாணவர்களுக்கு இயல்பாக விளக்கிய விதம் அருமை


              எங்கள் பள்ளி மாணவர்களுடன்  மூன்று மணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. மிக அருமையாக மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பத்திரிக்கை தொடர்பாகவும், சமுதாயம் தொடர்பாகவும் ,இன்றைய சமுதாய சூழ்நிலை தொடர்பாகவும், விரிவாக, விளக்கமாக ,அன்பாக பதிலளித்தார்கள். செய்தித்தாள் படிப்பதன் நோக்கம் என்ன, செய்தித்தாளின் மூலமாக நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம், செய்தித்தாள்கள் சமுதாயத்தில் எந்த அளவு பங்கு ஆற்றுகின்றன, செய்தி தாள் எவ்வாறு தயாராகிறது என்பது போன்ற தகவல்களை மிக எளிமையாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறினார்கள். மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். 


கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்

                  அதன் தொடர்ச்சியாக தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடுத்துவதற்காக 
மதியம் கல்லூரிக்குச் சென்றோம். கல்லூரி முதல்வர் திரு. சந்திரமோகன் அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்றார்கள். மாணவர்களுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இன்றைய பத்திரிகை நிலைமை என்ன, எப்படி எல்லாம் பத்திரிக்கை செயல்படுகிறது , பத்திரிக்கை துறையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ன என்கிற தகவல்களை மிக அழகாக பகிர்ந்துகொண்டார்கள். மாணவர்களும்  பத்திரிக்கையின்  செய்தி ஆசிரியரை சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தார்கள். 

 நாளிதழில் பணி புரிவது சுவையான  சுகம் :

                      பிறகு பேருந்தில் வரும்போது என்னுடன் பல்வேறு தகவல்களை அன்னார்  அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள் . தான் நன்றாக படித்து இருப்பதாகவும், தன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் பேராசிரியர்களாகவும், பெரிய பதவியில் இருப்பதாகவும், தனக்கு கவிதை எழுதுவதிலும், சமுதாயத்தின் மீதும்,செய்தி துறையின் மீதும்,எழுத்துக்கள் மீதும் மிகவும் அக்கறை இருந்ததன் காரணமாக செய்தி துறைக்கு வந்ததாகவும், செய்தித் துறையில் மிக ஆர்வத்துடன் பணியாற்றி   உதவி செய்தி ஆசிரியராக இருந்து, தற்பொழுது செய்தி ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். செய்தித் துறையில் தான் பணியாற்றுவது மிகப்பெரிய பெருமையாகவும் கூறினார்கள். இரவு முழுவதும் செய்தி ஆசிரியருக்கு உள்ள பணிகளைப் பற்றி என்னிடம் எடுத்துரைத்தார்கள். மதியம் 3 மணிக்கு இப்பணிக்கு வந்தால் இரவு முழுவதும் பணியாற்றிவிட்டு மீண்டும் இரண்டு மணி மூன்று மணிக்கு வீட்டுக்கு சென்ற பிறகு இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று படுத்த பிறகு அலுவலகத்தில் இருந்து சில சந்தேகங்களை கேட்பார்கள் என்றும், தூக்கத்தில் இருக்கும் பொழுது போன் அடிக்கும் என்றும், அவ்வாறு போன் அடிக்கும் பொழுது அந்த போன் காலை அட்டென்ட் செய்வதாகவும் , செய்தி ஆசிரியர் பணி  பல்வேறு வகைகளில் தனக்கு பிடித்த பணியாக இருப்பதால் இதையும் தான் அன்புடன் ஏற்றுக் கொள்வதாகவும், தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்புடனும்,புரிதலுடனும் தனது பணி எளிதாக உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள். பத்திரிக்கை பணியில் மற்ற பணிகளை போன்று விடுமுறை எடுப்பது என்பது ஒரு சிரமமான நிகழ்வு என்றாலும்,  அதையும் விருப்பத்துடன் தானே ஏற்றுக் கொண்டு தன்னுடைய குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு இந்த பணியை மிகச்சிறப்பாக செய்து வருவதாகவும் கூறினார்கள்.  

எப்போதும் தயாராக இருக்க வேண்டிய பணிதான் செய்தியாளர் பணி :

                              நானும் அன்னாருடன்  என்னுடைய தந்தையும் நாளிதழில்  நிருபராக பணியாற்றி வருவதையும்,  அவருக்கும் இரவு நேரங்களில் இது போன்று  போன் அழைப்புகள் வரும் என்றும், இரவு 12 மணி, இரண்டு மணிக்கெல்லாம் அவருக்கும் எங்காவது ஏதேனும் விபத்து அல்லது நிகழ்வுகள் நடைபெற்றால் அதை செய்தி எடுப்பதற்காகவும் ,படம் பிடிப்பதற்காக கிளம்பிச் செல்வார்கள் என்றும், அது எங்களுக்கு சங்கடமாக இருக்கும் என்றாலும், அவருடைய பணியின் காரணமாக  செல்வதால் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தேன் .அதனையே அவர்களும் ஆமோதித்தார்கள். பத்திரிகையாளரின் பணி மகத்தானது. மிகவும் சிரமமானது. பல்வேறு சூழ்நிலைகளுக்கு இடையில் நாங்கள் பணியாற்ற வேண்டியுள்ளது என்பதை எல்லாம் மிக அழகாக என்னிடம் அன்பாக அவருடைய பணி தொடர்பாக எடுத்துரைத்தார்கள்.என்னிடம்  மிகவும் மகிழ்ச்சியுடன் பேசி,  அவசியம் நீங்கள் எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வருகை தாருங்கள் என்று கூறி அழைப்பு விடுத்தார்கள்.காரைக்குடியில் உள்ள அவரது உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாலை 6 மணிக்கு அவரை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு தொடர்ந்து இன்றுவரை நாங்கள் அவருடன் தொடர்பில் இருக்கின்றோம். எங்களிடம் அன்பாக பேசி வருகிறார். பள்ளி தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளை அன்போடு கேட்டு வருகின்றார். அன்னாருக்கு  இந்த நேரத்தில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

பத்திரிகையாளர் பணி போற்றத்தக்கது :

                                     இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து  நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். பத்திரிகையாளரின் பணி போற்றத்தக்கது. மிகவும் சிறப்பானது. அன்னாருடைய வாழ்வில்  இன்னும் மேலும் மேலும் மிகப்பெரிய வெற்றிகளை அடைய வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகள் பல.

 நன்றி கலந்த அன்புடன்

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
 தேவகோட்டை.
 சிவகங்கை மாவட்டம்.
8056240653  

மாணவர்களுடன் தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியர் திருமங்கலம் கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துரையாடிய தகவல் வலைத்தளத்தில் :
https://kalviyeselvam.blogspot.com/2016/12/blog-post_14.html#more









No comments:

Post a Comment