Saturday 30 July 2016


 டிஸ்லெக்ஸியாவை  வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்

அறுபதாயிரம் அலுவலர்களை நிர்வகிக்கும் முன்னாள் ட்ராப் அவுட் மாணவர்

மூன்றரை லட்சம் மாணவர்களுக்கு வருடம்தோறும் நம்பிக்கையூட்டும் டிஸ்லெக்ஸியா மாணவர்
 
வராத படிப்பை  வரவழைத்த வெற்றி மனிதர்

கனவை நினைவாக்க,வாழ்க்கையில் வெற்றி பெற
ஆசை இருக்க வேண்டும்,அதற்கான செயலும் இருக்க வேண்டும்

உலகம் திரும்பி பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்

நம் வாழ்க்கையே பலூன் மாதிரிதான்

இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்திய வருமான வரி துறையின் இணை ஆணையாளர் மாணவர்களிடம் நம் வாழ்க்கையே பலூன் மாதிரிதான் என்று பேசினார்.




                                   நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.இந்திய வருமான வரி துறையின் இணை ஆணையாளர் நந்தகுமார் மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியதாவது :
                                         படிப்பு சடங்காக கூடாது
                   நாம் படிக்கும் படிப்பு சடங்கு மாதிரி இருக்க கூடாது.என்ன காரணம் என்று தெரியாமல் செய்யும் செயலுக்கு பெயர் மூடநம்பிக்கை ஆகும்.ஏனோதானோ என்று படிக்க கூடாது.புரிஞ்சு படிக்க வேண்டும்.தெரிந்து படிக்க வேண்டும்.கவனித்து படிக்க வேண்டும்.எனக்கு பள்ளியில் போர்டுல எழுதிப் போடுறதை எழுதமுடியாது. அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று  சொல்லப்படுற ‘கற்றல்குறைபாடு’தான்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும்போது தான் தெரியவந்துச்சு.5ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து வந்தேன்.அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே நான்  பலமுறை மனதால் காயப்படுத்தப்பட்டேன்..மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் கடைசி பெஞ்சிற்கு தள்ளப்பட்டேன். அதைக்கூட தாங்கிக்கொள்ள முடிந்த என்னால்  தாங்கிக்கொள்ள முடியாதது 'இவனோடு சேர்ந்தால் உருப்படமாட்டீங்க' என்று சொல்லி சகமாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியதான்.
இந்தக் கொடுமையை தாங்கிக்கொண்டு ஆறாம் வகுப்பிற்கு போகவும் இல்லை, பள்ளியில் அழைக்கவும் இல்லை.உங்களை போன்று படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு வெளியே வாசலில் சோகத்துடன் நின்று 6ம் வகுப்பு படிக்கும்போது பார்த்து கொண்டு இருப்பேன்.ஆனால் அந்த படிப்பை புரிந்து படித்து பள்ளிக்கு செல்லாமலேயே இன்று வெற்றி பெற்று விட்டேன்.எனவே படிப்பு சடங்காக இருக்க கூடாது.

                                                   வெற்றிக்கான காரணம்

      8லட்சம் பேருடன் போட்டியிட்டு எங்கள் பேட்சில் வெற்றி பெற்றவர்களில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வந்த உடன், எனது புகை படம் செய்தி தாளில் வந்த பிறகுதான் எனது தெருவிலே நான் படித்து உள்ளேன்,என்னால் படிக்கவும் ,எழுதவும் முடியும் என்பதே தெரியும்.உங்கள் வெற்றியின் மூலம் உலகம் உங்களை திரும்பி பார்க்க வேண்டும்.என்னை திரும்பி பார்த்தது.பார்த்து கொண்டு உள்ளது.சிலர் படிக்கும்போதே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.நீ நல்லா  வருவ என்பார்கள்.எனக்கு அப்போதே தெரியும் இவன் இப்படி ஆவான் என்று சொல்வார்கள்.அதனை நம்பாதீர்கள்.என்னை யாரும் அப்படி சொல்லவில்லை.ஆனால் இன்று நான் அறுபதாயிரம் அலுவலர்களை  பேரை நிறுவகிக்கும் அரசு பணியில் உள்ளேன். இந்திய அரசில் தனி துறை உருவாக நானும் ஒரு காரணமாக இருந்துள்ளேன்.இன்று என்னுடைய கார்டை காண்பித்தால் பாராளுமன்றத்தின் அனைத்து கதவுகளும் திறக்கும்.அதற்கு ஒரே காரணம் என்னுடைய படிப்பு மட்டும்தான்.என்னை யாரும் சின்ன வயதில் இப்படி வருவாய் என்று சொல்லவில்லை.எனது நண்பர்கள் நான் சிறு வயதாக இருக்கும்போது மெக்கானிக் கடையில் வேலை பார்த்தபோது இருந்த அந்தோணி.அவர்  இப்போதும்  அதே கடையில் தான் உள்ளார்.அவருக்கு ஐ .ஆர்.எஸ்.என்றால் என்ன என்று தெரியாது.என்னுடைய இன்றைய நண்பர்கள் இந்திய நாட்டின் பிரதமர்,ஜனாதிபதி.இந்த வெற்றிக்கு காரணம் எனக்கு வராது என்று சொன்ன படிப்பை பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய நான் விரட்டி சென்று அதனை வரவைக்க வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்து படித்தேன்.சிறிது படித்த எனக்கே இவ்வளவு வெற்றி என்றால் நன்றாக இருக்க கூடிய நீங்கள் அனைவரும் இன்னும் நன்றாக படிக்கலாம்.மிக பெரிய பதவிகளுக்கு செல்லலாம்.
                                                   ஐ .ஆர்.எஸ்.தேர்வில் நான் வெற்றி பெற்றபோது என்னுடன் பணி ஆணை வாங்க வந்த அனைவரும் நான் ஐ .ஐ .எம்,ஐ .ஐ .டி யில் படித்தேன் என்று சொன்னார்கள்.எம்.பி.ல் .படித்தேன்,என்று பெரிதாக பேசினார்கள்.ஆனால்   சென்னை ஆவடியில், விளிம்புக் குடும்பத்தில் பிறந்து, ஒவ்வொரு நகர்விலும் தடுக்கி விழுந்து,  பள்ளிக்கே செல்லாமல் ,பள்ளியினால் நிராகரிக்கப்பட்ட நான் அவர்களைவிட  முதல் மாணவனாக வெற்றி பெற்று கிழிந்த ட்ராயர் போட்டு கொண்டு ,மெக்கானிக் கடையில் எடுபிடி வேலை பார்த்த நானும் வெற்றி பெற முடியும் என்று சொல்வதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்தத்தை எண்ணி பெருமை பட்டு கொண்டேன்.அப்பா படித்திருக்க வேண்டும்,அம்மா படித்திருக்க வேண்டும் என்று தேவை இல்லை.ஐ .ஏ.எஸ்.போன்ற குடிமைபணி  தேர்வுகள் எழுதுவதற்கு ஒரு இளங்கலை பட்டம் இருந்தால் போதுமானது.நீங்கள் பெரிய படிப்புகள் எதுவும் படிக்க தேவை இல்லை.படிப்பதை புரிந்து படித்தால் போதும்.எப்படி நீங்கள் கையில் வைத்துள்ள பலூனில் காற்றை ஊதுகிறீர்களோ அதே மாதிரிதான் உங்கள் வாழ்க்கையும் அமையும்.எனவே படிப்பதை புரிந்து படியுங்கள்.கவனித்து படியுங்கள்.உங்கள் ஆளுமையினை வளர்த்து கொள்ளுங்கள்.சாதாரண போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று நான் இருக்கும் இடத்தில்  மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே என்னுடைய வாழ்க்கையை அமைத்து கொள்வேன் என்று கனவு காணாதீர்கள்.உங்கள் கனவுகளை பெரியதாக்குங்கள்.நீங்கள் எழுதும் போட்டி தேர்வுகளில் பெரிய பதவிகளுக்கு புரிந்து படித்து தேர்வு எழுதுங்கள்.தமிழ்நாடு இல்லை,இந்தியா இல்லை ,உலகமே உங்களை திரும்பி பார்க்கும் வகையில் வெற்றியாளராக மாறுங்கள்.அதற்கு நீங்கள் நினைக்கும் பெரிய கனவை தொடர்ந்து நினைத்து கொண்டே இருங்கள்.விடமால் அதனை துரத்தி ஓடுங்கள்.நீங்கள் எவ்வளவு அதனை நினைக்கீறீர்களோ அவ்வளவு தூரம் அது உங்களை நோக்கி வரும்.அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தானாக கிடைக்கும்.நான் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும்போது எனது சிந்தனை பெரியதாக இல்லை.படித்து வெற்றி பெற வேண்டும் என்று எனது உள்ளுணர்வு சொல்லும்போது படிப்பதற்கான அனைத்து உதவிகளும் போராடினாலும் கிடைக்கத்தான் செய்ததது.எனது எண்ணம் பெரிதாக,பெரிதாக அதற்கான வாய்ப்புகளும்,உதவிகளும்  தொடர்ந்து கிடைத்தது . எனக்கு அப்போதுதான் நாம் முயற்சி செய்தால் கண்டிப்பாக உலகம் நமக்கும் உதவி செய்யும்,நம்மாலும் உலகத்தை திரும்பி பார்க்க வைக்க முடியும் என்ற உண்மை தெரிந்தது.நான் உலகத்தை திரும்பி பார்க்க வைத்து விட்டேன். .எனவே உங்களை உலகம் நல்ல விஷயத்துக்காகத்தான் திரும்பி பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும்.
                                          வாழ்க்கையில் பெரிய ஆள் ஆவதற்கு பெட்டி கடை வைத்தால் கூட நன்றாக சம்பாதித்து விடலாம்.பணம் இன்று இருக்கும் நாளை போகும்.ஆனால்  படிப்பு மட்டுமே உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும்.இன்று நான் பல ஆயிரம் பேருக்கு இணையம் வழியாக ஐ .ஏ .எஸ்.ஆவதற்கு பயிற்சி கொடுத்து கொண்டுள்ளேன்.எனது அரசு பணியில் மிக பெரிய செயல்களை என்னால் செய்ய முடிகிறது.நன்றாக எழுத வராத,படிக்க வராத நான் திரும்ப,திரும்ப எனக்கு வராத விசயத்தை தேடி,தேடி சென்று செய்தேன்.வராததை வரவைத்தேன்.நல்ல நிலையில் கிராம பகுதியில் உள்ள நீங்கள் எனக்கு அது இல்லை, இது இல்லை, அப்பா சரியில்லை,அம்மா சரியில்லை என்று புலம்பி கொண்டு இருக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.கொஞ்சமாக படித்த எனக்கே இவ்வளவு வெற்றி கிடைத்து உள்ளபோது உங்களக்கு இன்னும் அதிக வெற்றி கிடைக்கும்.எப்போது என்றால் நல்ல விஷயம் வராதபோது அதனை தேடி கண்டுபிடித்து அதனை உங்களது ஆக்கி கொள்ளும்போதுதான் வெற்றி கிடைக்கும்.என்னுடைய பெயரை கூட எழுத தெரியாத ,வாசிக்க தெரியாத நிலையில் இருந்த நானே  சாதித்திருக்கிறேன்... நீங்களும் சாதிக்கலாம். இதற்காகத்தான் வருடத்தில் மூன்றரை லட்சம் மாணவர்களை சந்தித்து உற்சாகத்துடன் நம்பிக்கை ஊட்டுகிறேன். என்று பேசினார்.நிகழ்ச்சியில் சென்னை வருமான வரி துறையின் இணை ஆணையாளராக உள்ள நந்தகுமாருடன்  சென்னையை சார்ந்த கோபிநாத்,ரங்கநாதன் ஆகியோரும் ,பள்ளி மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

                                      மாணவர்கள் வெங்கட்ராமன், காயத்ரி,சாய் புவனேஸ்வரன்,ஜெகதீஸ்வரன்,தனலெட்சுமி,ராஜேஸ்வரி,சின்னம்மாள்,திவ்ய ஸ்ரீ,ஜீவா,நித்திய கல்யாணி,பரமேஸ்வரி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.நிகட்சியின் நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.

                                                            டிஸ்லெக்ஸியா
          

இது குழந்தைப்பருவத்தினருக்கு ஏற்படக்கூடிய குறைபாடுபள்ளிக்கூடம் போகும்போதுதான் இதன் பிரச்னை தெரியவரும்.'இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கவும், அவற்றிற்குரிய உச்சரிப்புகளை சம்பந்தப்படுத்திப் பார்க்கவும் சிரமப்படுவார்கள்.ஆனால் இது ஒரு மனநோய் இல்லை.தமது சக வகுப்பு மாணவர்களைப் போல, எழுத, படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.இதனால் மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் நிராகரிக்கப்படுவர்.எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றை படிப்பதிலும் பகுத்துப் பார்ப்பதிலும் பல குழப்பங்கள் இருக்கும். முழுமையான வாக்கியங்கள் அமைத்து பேச மிகவும் கஷ்டப்படுவார்கள்.
அவர்களின் குறைகளை சரியாகக் கண்டறிந்து, சரியான முறையில் கற்றுவித்தால் சமுதாயத்தில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிப்பார்கள்.
ஆனால் இவர்களை கண்டறிந்து சரியான முறையில் கற்றுத்தர யாருக்கும் பொறுமையும் இல்லை நேரமும் இல்லை.‘தாரே ஜமீன் பர்’ படத்தில ஒரு சின்னப் பையனுக்கு  இருக்குமே, அதே பிரச்னைதான். இது நோயில்லை; உளவியல் பிரச்னையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சிக்கல். இதுக்கு மருத்துவத்துறை இன்னும்  தீர்வு கண்டுபிடிக்கல.என்றார்.

                                      மெக்கானிக் கடை பையன் இணை ஆணையாளர்
                                  பள்ளியில் படிக்க வாய்ப்பில்லாததால்       படிப்புதான் வரல... லாட்டரிச் சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோ’ன்னு ஆவடியில இருந்த கடையில  என் அப்பா உக்கார வச்சுட்டார். தெருக்கள்ல  போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். வயது ஆக ஆக, ஸ்கூலுக்குப் போற பிள்ளைகளைப் பாக்க ஆசையா இருக்கும்.இன்னொரு பக்கம், ‘அவன்கூடப் பழகுனா நீயும் ஊர்சுத்திப் பயலாயிடுவே’ன்னு சொல்லி என்கூட பழகுற பசங்களை அவங்க பேரன்ட்ஸ் அடிப்பாங்க. படிக்காம  இருக்கிறது தப்புன்னு உணர்ந்தேன். ஆனா, திரும்பவும் பள்ளிக்கூடம் போறதுக்கு மிரட்சியா இருந்துச்சு. அப்போ தான் அமல்ராஜ்னு ஒரு நண்பன், ‘பள்ளிக்கூடம்  போய்தான் படிக்கணும்னு இல்லைடா, வீட்டில இருந்துக்கிட்டே தேர்வு எழுதலாம்’னு சொன்னான். அதுதான் முதல் பொறி. உடனடியா அப்ளை பண்ணினேன்.  கடையில இருந்துக்கிட்டே எட்டாவது பாஸ் பண்ணிட்டேன். அடுத்து பத்தாவது... .மெக்கானிக் கடையில் படித்தால் அடிப்பார்கள்.எனவே இரண்டு,இரண்டு தாளாக கொண்டு சென்று கடை முதலாளிக்கு தெரியாமல் படிப்பேன்.எழுதி எழுதிப் பாப்பேன். நாலு தடவை  தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். மத்தவங்க மாதிரி வேகமா எழுத வராது. எல்லோரும் ரெண்டரை மணி நேரத்தில 50 கேள்விக்குப்  பதில் எழுதினா என்னால 20 கேள்விக்குத்தான் எழுதமுடியும். கையெழுத்தும் சரியா இருக்காது. ஆனா விடையை சரியா எழுதுவேன்.இப்படித்தான் பத்தாம் வகுப்பை முடிச்சேன்.திடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க.  கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்குப் போனேன். என் உடல்வாகுக்கு செங்கலும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா  வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ் கடை. அங்கிருந்து டி.வி. மெக்கானிக் சென்டர். வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன்.  கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சுக்கிட்டே +2வுக்கு அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கனாமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம  பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில ஃபெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். அடுத்து கல்லூரி போகணும். இப்போ அப்பாவோட மனநிலையும்  மாறிடுச்சு. ‘சரி.. வேலைக்குப் போகவேணாம், படிடா’ன்னு சொல்லிட்டார். எனக்கு பி.எஸ்சி கணிதம் படிக்க ஆசை.


ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலயும் இடம் கிடைக்கலே. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில, ‘பி.ஏ. ஆங்கிலம் இருக்கு,  எடுத்துக்கிறியா’ன்னு கேட்டாங்க. சேந்துட்டேன்...’’ என்கிறார் நந்தகுமார். கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் நந்தகுமாரின் ‘ஆங்கில அறிவைப்’ பார்த்து  மிரண்டு போன பேராசிரியர்கள், ‘நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ணமுடியாது... ஒர்க்ஷாப்புக்குப் போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ’ என்று அறிவுரை சொன்னார்கள். ‘‘போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செமஸ்டர்... தேர்வுக்கு முதல் நாள் அம்மை  போட்டுருச்சு. எழுந்து உக்காரக்கூட முடியலே. தட்டுத்தடுமாறி கல்லூரிக்குப் போயிட்டேன். ஆனா உள்ளே அனுமதிக்கலை. போராடி அனுமதி வாங்கி தனியா  உக்காந்து எழுதுனேன். அடுத்த செமஸ்டர் நேரத்தில பெரிய விபத்து. அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.

 என் பேட்ச்ல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும்தான். பி.ஏ முடிச்சதும்  எம்.ஏவுக்கு நிறைய கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணினேன். ‘ஆபீசர்ஸ் டிரெயினிங்  அகாடெமி’ நடத்தின ஒரு தேர்வை எழுதுனேன். கல்லூரியில் என்.சி.சி.யில இருந்ததால அந்த வாய்ப்பு கிடைச்சுச்சு. அதுல பாஸ் பண்ணி, ஆர்மியில செகண்ட் லெப்டினென்ட்  வேலைக்குத் தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க.54 கிலோவா இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. மருத்துவர்களுக்கே புரியாத புதிர். ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்தும் மீண்டு வந்தேன். ஆனா, வேலை  கைவிட்டுப் போயிடுச்சு.
அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது ,ஐஏஎஸ்,ஐபிஎஸ்,ஐஎப்எஸ்,ஐஆர்எஸ் போன்ற மத்திய அரசின் குடிமைப்பணியில் சேர்வது என முடிவுசெய்தேன். அதுவும் இளங்கலை முதுகலை போல மூன்றாண்டு படிக்கவேண்டும் என்ற அறியாமை நிலையுடன் அதற்கான பயிற்சி மையங்களை அணுகினேன்..
ஐஐடி,ஐஐஎம் படித்தவர்களே படாதபாடுபடும் போது பாவம் நீங்கள் என்ன செய்யமுடியும் என்று அந்த பயிற்சி மையம் என்னை நிராகரித்தது.அப்போதுதான் எனது நண்பர் ஒருவர் இது போட்டித்தேர்வுதான் வழக்கம் போல நீயே படித்து முயற்சி செய் என்று சொல்லிவிட்டார்.
அதற்கான முயற்சியில் இறங்கி தேர்வு எழுதினேன். அகில இந்திய அளவில் முதல் மாணவராக என்னுடன் போட்டி இட்ட 8 லட்சம் மாணவர்களை வெற்றி கண்டு  இந்திய அளவில் முதல் மாணவனாக வெற்றி பெற்றேன்.,ஐஆர்எஸ் ஆனேன்..பயிற்சி மையம் சொன்ன ஐஐடி,ஐஐஎம் மாணவர்கள் எல்லாம் ரேங்கில் என்னை விட வெகு தொலைவில் இருந்தனர்.

                                                        .


பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்திய வருமான வரி துறையின் இணை ஆணையாளர் நந்தகுமார் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்.







 



No comments:

Post a Comment