Wednesday 12 April 2017

 கல்வி வரலாற்றில் புதிய முறையில் 

 மக்கள் வாழும் பகுதியிலேயே பெற்றோர் சந்திப்பு கூட்டம் 

மக்களை நோக்கி கல்வி பயணம் 

தேவகோட்டை- கல்வி வரலாற்றில் புதிய முறையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மக்கள் வாழும் பகுதியிலேயே பெற்றோர் சந்திப்பு கூட்டமாக நடைபெற்றது. 

 

ஏன் இது புதியமுறை ? 

                 பொதுவாக பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் என்பது பள்ளி வளாகத்துக்குள் மட்டுமே நடைபெறும்.அரசு உதவி பெறும் இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்க்கும் காரணத்தினால் பள்ளி வளாகத்துக்குள் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்துக்கு மிக குறைவான பெற்றோர்களே பங்கேற்கின்றனர்.இதனை மாற்றி பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் புதிய முறையில் இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்கள் 3.30 மணியை போல் வேலை முடிந்து வந்த பிறகு 4.15 மணியை  போல் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பெற்றோர்களின் இருப்பிடத்துக்கு சென்று இந்த கூட்டத்தை நடத்தி உள்ளனர் .இதற்காக பல நாட்களாக பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு தொடர்ந்து ஆசிரியர்கள் பெற்றோர்களின் வீடுகளுக்கு சென்று கூட்டம் தொடர்பாக எடுத்து கூறி பெற்றோர்களை சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள செய்து உள்ளனர்.100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

கூட்டம் தொடர்பான தகவல்கள் 

                               புதிய முறையிலான பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில்  பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் மஹேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோஹன் தலைமை தாங்கி பேசுகையில்,பள்ளியின் சிறப்புகளை எடுத்து கூறினார்.எனக்கு தெரிந்து இந்தியாவில் நகர் புற பகுதியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்  மக்கள் வசிக்கும் இடத்திலேயே  பெற்றோர்களை தேடி சென்று பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடப்பது இங்கு தான் முதல் தடவை ஆகும்.இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் கலை கல்லூரி ,காவல் நிலையம்,வங்கி ,அஞ்சல் அலுவலகம்,வானொலி நிலையம்,தோட்டக்கலை துறை என அனைத்து இடங்களுக்கும் நேரில் அழைத்து சென்று விரிவாக விளக்கி வருகின்றனர்.பல்வேறு வகையில் மாணவர்களுக்கு வாழ்க்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை கற்று கொடுத்து வருகின்றனர்.
                                      எவ்வித கட்டணமும் இல்லாமல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இப்பள்ளியில் படிக்க இயலும்.கியூபா நாட்டில்தான் இது போன்று அனுபவ கல்வியை கற்று தருகிறார்கள்.தனலெட்சுமி என்கிற மாணவி இதுவரை 46 சான்றிதழ்களை கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் பெற்றுள்ளார் என்பது பாராட்டப்பட வேண்டியது.தனலெட்சுமி பணக்கார வீட்டு பெண்ணா என்று எனது நண்பர் ஒருவர் கேட்டார்.இல்லை , இல்லை சாதாரண கூலி வேலை செய்யும் பெற்றோர் உள்ள குடும்பத்தை சார்ந்த மாணவிதான் என்று சொன்னேன்.தனலெட்சுமி என்கிற ஒரு மாணவி மட்டுமே இந்த பள்ளியின் தரத்திற்கு உதாரணம் ஆவார் .இவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள்.அந்த மாணவி மட்டும் இத்தனை சான்றிதழ் பெற்றுள்ளார்  என்றால் அவரோடு படிக்க கூடிய ஒவ்வொரு மாணவரும் 15 சான்றிதழ்கள் வைத்து உள்ளனர்.கல்லூரி முதல்வராக உள்ள என்னிடம் இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில்கள் பெறுவது எனக்கு பல்வேறு தருணங்களில் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.பல நாடுகளில் இருந்தும் இப்பள்ளிக்கு அறிஞர்கள் வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி செல்கின்றனர்.ஜெர்மன் சுபாஷினி,சிங்கப்பூர் சுவாமிநாதன்,ஹாங்காங் ராமநாதன் என நாடுகளில் இருந்தும் அறிஞர்கள் வந்து மாணவர்களின் கேள்விக்கு பதில் கூறி செல்கின்றனர்.கல்வியை இவ்வாறு சந்தோசமாக ,மகிழ்ச்சியாக அனுபவித்து கற்று கொள்ள வேண்டும்.அதனை இப்பள்ளி செய்து வருகிறார்கள் .இது போன்று பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வையுங்கள்.இவ்வாறு பேசினார்.பள்ளியின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும்,மாணவர்கள் அனைவரும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு தினம்தோறும் வருவதற்கும்  ,கை ,கால் ,நெகங்களில் அழுக்கு  இல்லாமல் சுத்தமாக இருப்பதற்கும் தொடர்ந்து பெற்றோர் ஒத்துழைப்பு கொடுத்து உதவுவது என 
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.புதிய முறையிலான இந்த பெற்றோர் சந்திப்பு கூட்டம் நல்ல முறையில் நடைபெற்றதற்கு பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

                                          
                                        நிகழ்வில் மாணவர்கள் தங்களின் சாதனைகளை அனைத்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் எடுத்து சொன்னார்கள்.பெற்றோர்கள் சார்பில் சீதாலட்சுமி,பிரியங்கா,ராஜேஸ்வரி,சீலா ,லெட்சுமி உட்பட ஏராளமோனர் பேசினார்கள். நிறைவாக பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

 பட விளக்கம் :கல்வி வரலாற்றில் புதிய முறையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மக்கள் வாழும் பகுதியிலேயே பெற்றோர் சந்திப்பு கூட்டமாக நடைபெற்றது. 


   மேலும் கல்லூரி முதல்வர் பள்ளி தொடர்பாக பேசிய தகவல்கள் : 


   இறையன்பு ஐ.ஏ .எஸ்.,ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ்.,ஆல்பி ஜான் ஐ.ஏ .எஸ்.,நந்தகுமார் ஐ.ர்.எஸ்,காவல்துறை கோட்ட  கண்கணிப்பாளர்,பத்திரிக்கை செய்தி ஆசிரியர்கள் ,பல துறை பேராசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை சந்தித்து முன்னேற்ற கருத்துக்களை கூறி செல்வதுடன் ,பல ஆளுமைகளை இந்த இளம்  வயதில் மாணவர்களை சந்தித்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும்போது நாமும் அவர்களை போல் வாழ்க்கையில் வரவேண்டும் என்கிற எண்ணமும் ஏற்பட்டு வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை எட்டி பிடிக்க வழி வகை செய்யும்.

                                                   இப்பள்ளியில் அரசு வழங்கும் மதிய உணவான இலவச சத்துணவை அனைத்து மாணவர்களும் சாப்பிடும் வகையில் வழங்கி வருகின்றனர்.வாரா ,வாரம்  பெற்றோர் வந்து பார்வையிட்டு சத்துணவு பார்வைக்கென வைக்கப்பட்டுள்ள நோட்டில் தங்களது கருத்துக்களை எழுதி  செல்கின்றனர்.குறைகள் இருந்தால் உடன் களையப்படுகிறது .நிறைகள் இருந்தால் உடன் சத்துணவு அமைப்பாளர்களிடம் சொல்ல படுகிறது.அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக மதியம் உணவிற்கு கையில் கர்சீப் கொண்டு வந்து முறைப்படி விரித்து உட்கார்ந்து சாப்பிட பழக்கி உள்ளனர்.குறிப்பாக கீழே உணவு விழுவது கிடையாது.மேலும் இளம் வயது சிறு மாணவர்களை 7,8 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அருகில் உட்கார வைத்து அவர்கள் அனைவரும் சாப்பிட பின்புதான் ,அதனை அங்குள்ள இரண்டு ஆசிரியர்களிடம் காண்பித்து விட்டு செல்ல வேண்டும் என்று காண்பிக்க சொல்லி அனைத்து மாணவர்களையும் சாப்பிட வைத்து விடுகின்றனர் ஆசிரியர்களும்,மாணவர்களும். 

                             இப்பள்ளியில் வார திருவிழா மற்றும் மாத திருவிழா என போட்டிகள் வாரா,வாரம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.பேச்சு மாதம் , ஓவிய மாதம் ,கவிதை மாதம்,வாசிப்பு மாதம்  என ஒவ்வொரு மாதமும்  வாரா,வாரம் போட்டிகள் நடத்தி ஒரு வாரம் பரிசு பெற்றவர்கள் அடுத்த வாரம் பங்கேற்பாளர்களாக இல்லாமல் பார்வையாளர்களாக மாற்றி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது பாராட்ட படவேண்டியது.இதனால் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன் , அனைவரின் திறமைகளும் வெளிப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. கல்வியை இவ்வாறு சந்தோசமாக ,மகிழ்ச்சியாக அனுபவித்து கற்று கொள்ள வேண்டும்.அதனை இப்பள்ளி செய்து வருகிறார்கள் .இது போன்று பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வையுங்கள்.இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment