Thursday 16 March 2017

 நோய் காக்க பள்ளி மாணவர்களின் ஈரமான உதவி

பிஞ்சுகளின் உண்டியல் உதவி

 நாளிதழில் வெளியான செய்தி அறிந்து உதவிய அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்



தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நாளிதழில்   வெளியான "வைராக்கியத்திற்கு இன்னொரு பெயர் இளவரசி"என்கிற செய்தியை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆலோசனையின்படி  மாணவி ராஜி அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் படித்தார்.இதனை கேட்ட மாணவர்கள் தாங்கள் தினம்தோறும் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உண்டியலில் "சமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை போடுகிறோம் "என்று கூறி போடும் காசை மொத்தமாக சேர்த்து பாட்டி இளவரசியின் பேரனுக்கு கொடுப்பது என முடிவெடுத்தனர்.
                             கடந்த சில மாதங்களில் உண்டியலில் வகுப்பு வாரியாக சேர்த்த தொகையை அனைத்து மாணவர்களின் முன்பாகவும் கொட்டி,ஆசிரியர்கள் உதவியுடன் அதனை எண்ணி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் ஒப்படைத்தனர். மாணவர்கள்,தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களின் சார்பாக மொத்தம் ரூபாய் 6,000 க்கான காசோலையை  பாட்டி இளவரசி பெயரில் சென்னைக்கு அனுப்பினார்கள் . விடா முயற்சி எடுத்து பேரனின் உயிரை காப்பாற்றிய பாட்டியின் செயல் அனைத்து மாணவர்களின் நினைவிலும் ஒரு பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டது.தாங்களும் வரும்காலத்தில் இது போன்று  அனைத்து விஷயங்களிலும் விட முயற்சி எடுத்து வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணத்தையும்,அனைவரும் இது போன்று சமூகத்திற்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்திற்கு வரவேண்டும் என்கிற சிந்தனையும் ஏற்படுத்தி உள்ளது.
                                          பாட்டி இளவரசியின் விடா முயற்சியை கேட்ட மாணவர்கள் தங்கள் கருத்தாக பின்வருமாறு கூறினார்கள்.

8ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி : இந்த உண்மை சம்பவத்தில் வரும் பாட்டி போன்று நாம்  இருந்தால் ஒரு மூலையில் முடங்கி உட்கார்ந்து விடுவோம் . இது போன்று நோய் தாக்கியவரின் பக்கத்தில் கூட செல்லமாட்டோம்.ஆனால் இந்த பாட்டியோ விட முயற்சி எடுத்து பேரனின் நோயை குணப்படுத்தி உள்ளார்கள்.இவ்வளவு ரூபாயை நினைத்து கூட பார்க்கமுடியாது.அதனை சாதித்து காண்பித்துள்ளார்கள்.எனக்கும் இது போன்று இன்னும் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைஅனைத்து வகுப்புகளிலும்   உண்டியல் வைத்து அதனில் "சமூகத்திற்கு பயன்படும் வகையில் உதவவுதற்காக" என்று சொல்லி தினசரி காசு சேர்த்து வருகிறோம்.எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆலோசனையின்படி எங்கள் பெற்றோர் எப்போதாவது சாப்பிட வாங்கி கொள்ள கொடுக்கும் பணத்தில் ஒரு சிறு தொகையை உண்டியலில் போட்டு சேர்த்து வருகிறோம்.அதனை இந்த சந்தர்ப்பத்தில் பாட்டி இளவரசி போன்று விட முயற்சி எடுத்து தனது என்ணத்தை வெற்றியாக்கியதுடன் எங்களை போன்ற மாணவர்களுக்கும்,அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள அவருக்கு ,அவரது பேரனுக்கு உதவும் வகையில் இந்த பணத்தை மிகுந்த சந்தோசத்துடன் கொடுக்கிறோம்.எனது தாயார் கூலி வேலை பார்த்து  எப்பபோதாவது எனக்கு வாங்கி சாப்பிட கொடுக்கும் காசை பள்ளியில் உள்ள உண்டியலில் போடுவேன்.அது போன்று எங்கள் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கொடுக்கும் சிறு தொகையை உண்டியலில் சேர்த்து அதனை சமூகத்தில் உள்ள ஒருவருக்கு உதவவும்  வகையில் கொடுப்பதற்கு மகிழ்ச்சி அடைகின்றேன்.தம்பி கோபிநாத் படிக்கும் பள்ளியிலும் நன்றாக அவரது உடன் படிக்கும் மாணவர்களும்,ஆசிரியர்களும் கவனம் எடுத்து பார்த்து கொண்டதுடன் இவ்வளவு தூரம் உதவி செய்தது என்னை நெகிழ வைத்தது .பள்ளியையும் பாராட்ட வேண்டியது எனது எண்ணமாகும்.
                                                   

 6ம் வகுப்பு மாணவி காயத்ரி : இந்த தகவலை கேட்ட உடன் நான் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அனைவரிடமும் சென்று இதனை சொன்னேன்.எங்கள் வீட்டில் அருகில் உள்ள பிரேமா அத்தையிடம் சொன்னேன்.அவர்கள் நான் பல விஷயங்களில் கொஞ்சம் முயற்சி செய்து ,பிறகு சரியாக வராவிட்டால் அப்படியே விட்டு விடுவேன்.ஆனால் நீ இப்போது சொல்லும் பாட்டியின் தகவலை கேட்டல் எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது.இனிமேல் நான் கண்டிப்பாக விடாமல் முயற்சி செய்து கண்டிப்பாக எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவேன் என்றார்.அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்து எனக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.நானும் அனைத்து விஷயங்களிலும் முயற்சி செய்து கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.எனது அக்கா சொர்ணம்பிகா இந்த பள்ளியில்தான் 8ம் வகுப்பு வரை படித்தார்.இப்பள்ளியில் படிக்கும்போது அரசு நடத்தும் போட்டி தேர்வான NMMS தேர்வில் வெற்றி பெற்று மாதம் 500 ரூபாய் பெற்று வருகிறார்.அவர் இப்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார்.அவரிடமும் பாட்டியின் கதையை சொன்னேன்.அப்போது அவர் எனக்கு IAS ஆவதுதான் லட்சியம்.நிச்சயமாக நான் பாட்டி போன்று விட முயற்சி எடுத்து IAS ஆவேன் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.எனக்கும் மருத்துவர் ஆவதே ஆசை.நானும் கண்டிப்பாக முயற்சி எடுத்து படித்து மருத்துவர் ஆவேன் என்று பேசினார்.


7ம் வகுப்பு மாணவி ஜெனிபர் கூறியதாவது : நான் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள லதா அக்காவிடம் சென்று இளவரசி பாட்டி விடாமுயற்சியுடன் பணம் சேமித்து தனது பேரன் கோபிநாத் நோய் சரியான  தகவலை சொன்னேன்.அதனை கேட்ட லதா அக்கா நானும் தீவிர முயற்சி எடுத்து கண்டிப்பாக எனது குழந்தைகளுக்கு ஆங்கிலம் நன்றாக சொல்லி கொடுப்பேன்.பல நாட்களாக சொல்லி கொடுத்தும் ஆங்கிலம் சரியாக வரவில்லை.இளவரசி பாட்டி விடாமுயற்சி அறிந்து நானும் முயற்சி எடுத்து சோர்ந்து போகாமல் எனது குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுப்பேன் என்று சொன்னார்.



6ம் வகுப்பு மாணவர் ரஞ்சித் : இந்த பாட்டியை போன்று நானும் வைராக்கியத்துடன் என் வீட்டின் அருகே உள்ள படிக்காத மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து உதவுவேன்.இந்த நிகழ்வில் வரும் மருத்துவர் ரேவதி அவர்கள் போன்று நானும் மருத்துவராகி அனைவருக்கும் உதவுவேன்.பள்ளியில் வகுப்பில் உண்டியலில் சேர்க்கும் பணத்தை விடாமுயற்சி எடுத்து தனது பேரன் உயிரை காப்பாற்றிய பாட்டி இளவரசிக்கு கொடுத்து உதவுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.என்று பேசினார்.


5ம் வகுப்பு மாணவர்  ஐயப்பன் : பாட்டி இளவரசி அவர்களின் பேரன் கதையை கேட்ட எனக்கு மிகுந்த ஆச்சிரயத்தை ஏற்படுத்தியது.இப்படியும் காப்பாற்றுவதற்கு முயற்சி எடுப்பார்களா என்கிற எண்ணம் மேலோங்கியது.எங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் சொன்னேன்.அவர்கள் இதனை ஆச்சரியத்துடன் கேட்டனர்.நானும் என்னால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்து வாழ்க்கையில் விட முயற்சியுடன் வெற்றி பெறுவேன்.

6ம் வகுப்பு மாணவி ராஜி : பாட்டி இளவரசியின் செயல்பாடு எனக்கு மிகுந்த நம்பிக்கையை உண்டு பண்ணி உள்ளது.நானும் என்னுள் இருக்கும் சாதனை செய்ய வேண்டும் என்கிற என்ணத்தை ஒரு நாள் நிறைவேற்றி காண்பிப்பேன் என்றார்.
                                    காசோலை அனுப்பியது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தது :
                                         அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியாகிய    நாங்கள் தொடர்ந்து பல மாதங்களாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உண்டியல் ஆசிரியர் செலவில் வாங்கி கொடுத்து அதனில் அவர்களால் முடிந்த காசை சமுதாயத்திற்கு உதவும் வகையில் கொடுக்கிறோம் என்கிற என்ணதோடு சேர்க்க சொல்லி வருகிறோம்.அடிக்கடி இவ்வாறு நல்ல சொற்களை சொல்லி காசு போடுவதால் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கம் வருகிறது.மேலும் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும் வளருகிறது.பள்ளியில் உண்டியல் வைத்து சேமிக்க  ஆரம்பித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலும் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
                                   நாளிதழில் வெளியான செய்தியை மாணவர்களிடம் காலை வழிபாட்டு கூட்டத்தில் வாசித்து காண்பித்தோம்.அப்போது மாணவர்கள் வந்து தங்களது கருத்துக்களை சொல்லும்போது, பிஞ்சு குழந்தைகள் முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை சேர்க்கும் உண்டியல் சேமிப்பை இந்த பாட்டிக்கு கொடுத்து உதவுவோம் என்றனர்.உடனே மாணவர்களின் முடிவு படி உண்டியல் பணத்தை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை எண்ண  செய்து அதனை பெற்று கொண்டு,ஆசிரியர்கள் மற்றும் எனது பங்களிப்புடன் ரூபாய் 6,000 துக்கான காசோலையை பாட்டி இளவரசி பெயருக்கு எடுத்து அனுப்பி உள்ளோம்.இது போன்று நல்ல செயல்பாடுகள் இந்த சிறு வயதில் வந்தால் அது மாணவர்களுக்கு வரும் காலத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள பிஞ்சு மாணவர்களின் ஈரமான உதவி என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
                                   காசோலை கிடைத்தது குறித்து பாட்டி இளவரசி தலைமை ஆசிரியருக்கு தொலைபேசி வழியாக தெரிவித்தது : காசோலை கிடைத்தும் பாட்டி இளவரசி கூறியது : எனக்கு எவ்வளவோ உதவிகள் வந்து கிடைத்துள்ளன.நான் உதவிய அனைவரையும் கடவுளாகத்தான் பார்க்கின்றேன்.எனது பேரன் உயிர் பிழைக்க நான் பல நேரங்களில் இரவு 1மணி,2மணிக்கெல்லாம் எழுந்து அமர்ந்து கடவுளே எனது பேரனை காப்பாற்றுங்கள் என்று மன்றாடுவேன்.அவ்வாறு கடவுளை நான் வேண்டியதால் தான் கடவுள் பல்வேறு மனிதர்களின் உருவத்தில் வந்து எனது பேரனை காப்பாற்றுவதற்கு உதவி உள்ளார்.எனது இரண்டு மகன்களும் இல்லாத நிலையிலும் ,எனது கால் பாதம் தேய,தேய முட்டி இரண்டும் வலிக்க எனது பேரனுக்காக உதவி கேட்டு,சாதாரண வேலை பார்க்கும் எனக்கு உதவிகள் நல்ல முறையில் கிடைத்து இன்று எனது பேரன் குணமாகி  உள்ளார்.இது எனக்கு மகிழ்ச்சிதான்.
                                        எனக்கு கிடைத்த உதவியில் நான் பெரிய உதவியாக எண்ணுவது தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் செய்த உதவியைத்தான் பெரிதாக எண்ணுகிறேன்.ஏனெனில் பள்ளியில் நாளிதழ் வாசித்ததை கேட்டு , அதனை உள்வாங்கி கூலி வேலை பார்த்து வறுமையான நிலையிலும்  தங்களது பெற்றோர்கள் கொடுக்கும் காசை உண்டியலில்  சேர்த்து அதனை சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உதவ முன் வந்துள்ள மாணவர்ளின் உதவி எனக்கு பெரிய உதவியாக தெரிகிறது.வறுமையான சூழ்நிலையிலும் பெரிய மனதுடன் உதவ முன்வந்துள்ள பள்ளி மாணவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.பத்திரிக்கை செய்தியை காலை வழிபாட்டு கூட்டத்தில் வாசிக்க செய்து மாணவர்களின் மனத்தில் நல்ல சமுதாய சிந்தனையை,விடா முயற்சியை ஏற்படுத்தி,என்னையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு எனது வங்கி எண் ,வீட்டு முகவரி பெற்று ,பணத்தை காசோலையாக மாற்றி எனது முகவரிக்கு கிடைக்குமாறுசெய்து, எனது பேரனுக்கு உதவி செய்ய தூண்டுகோலாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் , நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.எனது பேரனுடன் அந்த பள்ளிக்கு ஒரு நாள் சென்று அந்த மாணவர்களை சந்தித்து வாழ்த்தி வருவேன் என்பதை இப்போது தெரிவித்து கொள்கிறேன் என்றார்.



நீங்களும் நோய் காக்க உங்களின் ஈரமான உதவியை செய்ய பாட்டி இளவரசியை கீழ்கண்ட எண்ணிலும் ,கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு பணமாக செலுத்தியும் அன்னாரது பேரனுக்கு மேலும் உதவலாம் :

அலை பேசி எண் : 9940287312

K .ELAVARASI,
A/C No. 3577766839,
IFSC : 284964,
CENTRAL BANK OF INDIA,
VALASARAVAKKAM,
CHENNAI- 600087.

K.இளவரசி ,
மகாலெட்சுமி அபார்ட்மெண்ட்,
6/27 A ,ஸ்ரீ ராம் நகர் ,
கவிஞர் கண்ணதாசன் வீதி,
ஸ்ரீதேவி குப்பம்,
அன்பு நகர் ,
வளசரவாக்கம்,
சென்னை - 600 087.



 பாட்டி இளவரசியின் விடாமுயற்சி தொடர்பான தகவலை படியுங்கள் :



வைராக்கியத்திற்கு இன்னொரு பெயர் இளவரசி!
ஒரு பெண் சிறப்பிக்கப்படுவதற்கு விமானம் ஓட்ட வேண்டாம்; விண்வெளியில் சாகசம் செய்ய வேண்டாம்; அவ்வளவு ஏன், எழுத, படிக்கக் கூட தெரிந்திருக்க வேண்டாம். ஒரு விஷயத்தை வைராக்கியத்தோடு அணுகி, ஜெயிக்க தெரிந்திருந்தால் போதும். அந்த வகையில், இன்னும் தன் காலுக்கு, இரு நுாறு ரூபாய் செருப்பு வாங்கிப் போடக் கூட முடியாத, இயலாமை கொண்ட, இளவரசி என்ற பாட்டி, 25 லட்ச ரூபாயை சேகரித்து, தன் பேரனை காப்பாற்றிஉள்ளார்.
மகன்கள் அடுத்தடுத்த விபத்தில் இறந்து விட்டனர்; மருமகள் பிரிந்து விட்டாள். மிஞ்சியிருந்த ஒரே வாரிசான பேரனுக்கு, 'தலசீமியா' என்ற விபரீதமான நோய். 25 லட்ச ரூபாய் இருந்தால் பேரன் பிழைப்பான் என்ற நிலையில், வீட்டு வேலை செய்யும் பாட்டி, வைராக்கியத்துடன் பணத்தை புரட்டி, பேரனைக் காப்பாற்றிய நெஞ்சை உருக்கும் கதை இது.
மகன்கள் சாவு : பிழைப்புத் தேடி, பல வருடத்திற்கு முன் சென்னையில் தஞ்சம் புகுந்தவர் தான், இளவரசி. பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர். நான்கு வீடுகளில் வேலை செய்தும், எலக்ட்ரீஷியனான கணவர் கொடுக்கும் பணத்தை வைத்தும், குடும்பம் நடத்தி வந்தார். இரண்டு மகன்களும் அடுத்தடுத்த விபத்துகளில் இறந்து போயினர். மூத்தவர், திருமணமாகாமல் இறந்தார். இளையவர், திருமணமாகி, இரண்டரை மாத குழந்தை இருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். மகனின் காரியத்தை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தால் மருமகளைக் காணோம்; இன்னமும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், தொட்டிலில் கிடந்த, குடும்பத்தின் ஒரே வாரிசான பேரன், கோபிநாத்திற்கு உடம்புக்கு முடியவில்லை. துாக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் பாட்டி இளவரசி. என்னென்னவோ பரிசோதனைகள் செய்தனர், டாக்டர்கள். இறுதியில், உன் பேரனுக்கு, 'தலசீமியா' நோய் வந்திருக்குது. இந்த நோய் மரபணுச் சார்ந்த பிரச்னையால் வரக்கூடியது. இந்த நோய் வந்தவங்களுக்கு, ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாது. அதனால மாதத்திற்கு, ஒரு முறையோ அல்லது, இரண்டு முறையோ புது ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்கணும். சத்தான சாப்பாடு தரணும். கால், கை வீங்காம, காய்ச்சல், தலைவலி வராமல் பார்த்துக்கணும்' என்றனர்.மேலும், 'ஸ்டெம் செல் தானமா கிடைச்சா, இந்த நோயில் இருந்து குழந்தையை காப்பாற்றலாம். உலகில் ஏதோ ஒரு மூலையில், இவனது ரத்தத்தோடு, 'மேட்ச்' ஆகக் கூடிய குருத்தணுவை ஒருவர் சுமந்து இருப்பார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரது குருத்தணுவை தானமாக பெறும் வரை, பேரனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றும் கூறினர். இந்த இடத்தில், மருத்துவரும், மனிதநேயம் மிக்கவரும், தலசீமியா நோய் சிகிச்சையில் நிபுணருமான, டாக்டர் ரேவதி ராஜை பாராட்டியாக வேண்டும்.
பேரனுக்கு உதவி : இளவரசியின் ஏழ்மை நிலையை தெரிந்த அவர், எங்கெல்லாம் இலவசமாக ரத்தம், மருந்து, சிகிச்சையும் கிடைக்குமோ, அங்கெல்லாம் சிபாரிசு செய்து, சிறுவன் கோபிநாத்திற்கு உதவினார்.சிறுவன் கோபிநாத், சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள, குட்ஷெப்பர்டு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியின் முதல்வர் முதல், உடன் படிக்கும் பிள்ளைகள் வரை, அனைவருக்கும், கோபிநாத்தின் பிரச்னை தெரிந்து, புரிந்து, அவன் மீது அளவற்ற பற்றும், பாசமும் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆசிரியையும் கோபிநாத்திற்கு அம்மா தான். லேசாக சோர்ந்தால் கூட, உடனே பாட்டிக்கு போன் அடித்து விடுவர். எங்கு இருந்தாலும், இளவரசி ஓடி வந்து, பேரனை அள்ளி, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவம் பார்த்து, பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடுவார். இவ்வாறு, மாதத்திற்கு, இரு முறையாவது நடந்துவிடும்.இந்நிலையில், டாக்டர் ரேவதி ராஜின் தீவிர முயற்சி காரணமாக, ஏழு வருட தேடலுக்கு பின், ஜெர்மனியில் வசிக்கும் ஒரு கொடையாளரின், 'ஸ்டெம் செல்' கோபிநாத்திற்கு பொருந்தியது. அது, அதிர்ஷ்டம் என்றால், இந்த சிகிச்சைக்காகும் செலவு, துரதிருஷ்டமானது. குருத்தணு மாற்றுச் சிகிச்சை செய்ய, எப்படி பார்த்தாலும், 25 லட்ச ரூபாய் செலவாகும் என்ற நிலை.மொத்தமாக, 200 ரூபாய் கொடுத்து, இன்னும் நல்ல செருப்பு கூட வாங்கி அணிந்திராத இளவரசியம்மாவிற்கு, 25 லட்ச ரூபாய்க்கு, எத்தனை சைபர் வரும் என்று கூடத் தெரியாத நிலை. ஆனாலும், பேரனைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, தெருத் தெருவாக, வீடு வீடாக, பணம் கேட்டு, இரவு பகலாக அலைந்தார். கோபிநாத் உடன் படிக்கும், இரண்டாம் வகுப்பு சிறுவர்கள் தங்கள் தீபாவளி, பிறந்த நாள் கொண்டாட்ட உடை மற்றும் பட்டாசு செலவுகளை தியாகம் செய்து, அந்த பணத்தை கோபிநாத்தின் சிகிச்சை செலவிற்காக கொடுத்தனர்.
நன்கொடை பழக்கம் : கோபிநாத்தின் உடன் படிக்கும் சிறுவர்களிடம் ஆரம்பித்த இந்த நன்கொடை பழக்கம், அவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள் என பரவி, ஒரு கட்டத்தில், மருத்துவமனை நிர்வாகமே நம்ப முடியாத நிலையில், சிகிச்சைக்கு தேவையான பணம் சேர்ந்து விட்டது.ஒரு நல்ல நாளில், ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நான்கு மாதம், தீவிர கண்காணிப்பு காலம். முடிவில், கோபிநாத், தலசீமியா நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டு விட்டான். இம்மாதம், 2ம் தேதி மருத்துவச் சான்றிதழ் பெற்ற கையோடு, வீட்டிற்கு வந்து, நான்கு மாத ஓய்வில் இருக்கிறான்.மருந்தின் வீரியம் காரணமாக கோபிநாத்தின் தலைமுடி எல்லாம் கொட்டிப் போயிருந்தாலும், முகமெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி. அரை இட்லி சாப்பிடவே முடியாமல் இருந்தது போய், இப்போது நன்றாக சாப்பிடுகிறான். ஆயா...ஆயா... என, பாட்டியை சுற்றிச் சுற்றி வந்து, கட்டிக்கொண்டு, முத்த மழை பொழிகிறான். பக்கத்தில் இருக்கும், தாத்தா கண்ணையா, இதை, ஆனந்த கண்ணீரோடு கவனித்துக் கொண்டு இருக்கிறார்.
இளவரசியுடன் பேசுவதற்கான எண்: 99402 87312.


 நாளிதழின் வழியாக செய்தி படித்து முகம் தெரியாத ஒருவருக்கு தங்களின் வறுமையான நிலையிலும் சமுதாய சிந்தனையுடன் உதவிய இப்பள்ளி மாணவர்களின் உதவி பாராட்டத்தக்கது




No comments:

Post a Comment