Sunday 22 January 2017

 

 கல்விக்கு கை கொடுத்த உள்ளம் 

அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவியின் சாதனைகளை பத்திரிக்கையில் படித்து விட்டு மாணவியின் மேல் படிப்பு முழுவதையும் ஏற்று கொள்வதாக பத்திரிக்கையின்  வயதான பெண் வாசகி பள்ளிக்கே வந்து  மாணவியின் கல்விக்கு கை கொடுத்தல் 

 

ஆனந்த கண்ணீர் வடித்த மாணவி - அன்புடன் அரவணைத்த வாசகி 

 

  

 


 

 

வாசகியின் பாராட்டு கடிதம் 

               மதுரையை அடுத்துள்ள பரவை என்கிற ஊரிலிருந்து ஜானகி என்கிற பெயரில் பள்ளி தலைமை ஆசிரியர் முகவரியிட்டு கடிதம் வந்தது.அதனில்  நாளிதழில் மாணவி தனலெட்சுமியின் சாதனைகளை படித்ததாகவும் ,அந்த மாணவியின் பெற்றோர் கூலி வேலை பார்ப்பதால் அந்த மாணவியின் சாதனையினை பாராட்ட நேரில் பள்ளிக்கு வருகை தர அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருந்தார்.

                           

இதன் பிறகு நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுவதை பார்ப்போம் :  மாணவியின் சாதனைகளை  செய்தியாக  வெளியிட்ட  நாளிதழுக்கு நன்றி.மாணவியின் திறமையை பள்ளியின் சார்பாக பத்திரிக்கைக்கு தெரியப்படுத்தி அன்னாரது திறமையை  நாளிதழில் வெளிப்படுத்தி உள்ளோம்.கடந்த 3 வருடங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளுடன்  40க்கும் மேற்பட்ட சான்றித்தாள்களையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தாயார் வீட்டு வேலை செய்பவர்.தந்தை கூலி வேலை செய்பவர். தாய்,தந்தை பல ஊர்களுக்கு போட்டிகளுக்கு அழைத்து செல்ல இயலாத சூழ்நிலையில், தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதோலோடு, ஆசிரியர்களின் உதவியோடு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும்,சான்றிதல்களையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பள்ளிக்கே வருகை தந்த பத்திரிக்கை  வாசகி :

                இந்த தகவல்களை படித்து விட்டு மதுரை அருகே உள்ள பரவை என்கிற ஊரிலிருந்து திருமதி. ஜானகி என்பவர் எனக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.கடிதத்தில் மாணவியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.நானும் அந்த கடிதத்தில் இருந்த அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.திரு.கார்த்திகேயன் என்பவர் பேசினார்.தனது தயார்தான் கடிதம் எழுதினார்கள் என்றும்,வெகு விரைவில் பள்ளிக்கு வந்து மாணவியை சந்திப்பதாகவும் கூறி பாராட்டு தெரிவித்தார்.நானும் சரி என்று சொல்லி விட்டு என்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட்டேன்.

                                      இந்நிலையில் நேற்று திரு.கார்த்திகேயன் அவர்களிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.பள்ளிக்கு மதுரை அடுத்துள்ள பரவையில் இருந்து வருவதாகவும்,கார் மூலம் வருவதாகவும் தெரிவித்தார்.சுமார் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வரவேண்டும்.பள்ளியின் முகவரியை சரியாக சொல்லி விட்டு எனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.சொன்னது போலவே தனது தாயாரை அழைத்து கொண்டு திரு.கார்த்திகேயன்  சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்.வயதான அவரது தாயார் திருமதி .ஜானகி அம்மையாரும் உடன் வந்தார்கள் .

                     அவர்களை அன்புடன் வரவேற்று மாணவி தனலட்சுமியை அறிமுகம் செய்து வைத்தேன்.மாணவியும் தான் பெற்றுள்ள விருதுகள்,பரிசுகள்,சான்றிதழ்கள் உட்பட அனைத்து தகவல்களையும் அவர்களிடம் எடுத்து சொன்னார்.மேலும் பள்ளி நிகழ்வுகள் குறித்தும் விரிவாக மாணவி அவர்ளிடம் எடுத்து சொன்னார்.திரு .கார்த்திகேயன் அவர்கள் மாணவியிடம் அவரது குறிக்கோள் என்ன என்று கேட்டதற்கு , மாணவி தனது குறிக்கோள் IPS ஆவது என தெரிவித்தார்.உடனே திருமதி.ஜானகி அம்மையார் அவர்கள் மாணவியின் மேல் படிப்பு கல்வி  தொகை  முழுவதும் தாங்களே ஏற்று கொள்வதாக தெரிவித்தனர்.

                              பின்பு மாணவர்களின் முன்பாக இவர்களை அறிமுகம் செய்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பேசியதாவது :மதுரை தாண்டி பரவை என்கிற ஊரிலிருந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து இப்பள்ளி மாணவியை பாராட்ட திருமதி . ஜானகி அம்மையாரும்,அவரது மகன் திரு.கார்த்திகேயனும் வந்துள்ளது பாராட்டுக்குரியது.தங்களுடைய நேரம்,பணம் என அனைத்தையும் செலவு செய்து எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இவ்வளவு தூரம் மாணவியை பாராட்ட அவர்கள் வந்துள்ளது பாராட்டுக்குரியது.வாழ்க்கையில் நீங்களும் உங்களுக்கு எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று இது போன்ற பாராட்டு தெரிவிக்க கற்று கொள்ளுங்கள் .வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.இவர்களின் வருகையை பாராட்டி உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா,ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர் பேசினார்கள்.பள்ளியின் சார்பாக இருவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

                        நிகழ்ச்சியில் பேசிய திருமதி .ஜானகி அம்மையார் , நான் பல ஆண்டுகளாக பத்திரிக்கைகளை  படித்து வருகின்றேன்.தனலெட்சுமியின் சாதனைகளை பத்திரிக்கையின்  வாயிலாக அறிந்து கொண்டு ,அவரை பாராட்டவே இப்பள்ளிக்கு வந்தேன்.மாணவியின் தாயார் கூலி வேலை செய்து இந்த மாணவியை படிக்க வைப்பது அறிந்து , இந்த மாணவியின் மேல் படிப்பு முழுவதையும் ஏற்று கொள்ள முடிவு செய்து உள்ளேன்.மாணவி IPS படிப்பது தனது லட்சியம் என்று சொன்னார்கள்.அவர் படிக்கும் அனைத்து படிப்புகளுக்கும் உதவ தயாராக உள்ளோம் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன்.இந்த பள்ளியிலும் எங்களை நன்றாக வரவேற்று,மதிப்பு கொடுத்து உபசரித்தார்கள்.அதற்காக பள்ளிக்கும்,இது போன்று அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியான இப்பள்ளி  மாணவர்களின் சாதனைகளை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்ட முயற்சிகள் எடுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்க்கும் , இதனை வெளி கொண்டு வந்துள்ள  நாளிதழுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.நிகழ்ச்சி குறித்து மாணவிகள் காயத்ரி,பரமேஸ்வரி,ஜெனிபர் ஆகியோர் தாங்களும் இது போன்று வரும் காலங்களில் அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதோடு,அதிகமான சாதனைகளை செய்வதற்கு முயற்சிகள் எடுப்பதாகவும்,மற்றவர்களுக்கும் உதவிகளையும் செய்வதாக தெரிவித்தனர்.மாணவி தனலெட்சுமி நாளிதழின் வாயிலாக தனக்கு கிடைத்துள்ள உதவிக்கு நன்றி தெரிவித்து ஆனந்த கண்ணீருடன் பேசினார்.இதனை கண்ட ஜானகி அம்மையாரும் மாணவியை அன்புடன் பக்கத்தில் அழைத்து ஆரத்தழுவிக்கொண்டார்.இந்த காட்சி அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது .மொத்தத்தில் பத்திரிக்கை  மூலமாக அங்கு ஒரு புதிய உறவு ஏற்பட்டது.பத்திரிக்கை மாணவியின் கல்விக்கும் கை கொடுத்ததுடன் ,இணைபிரியா உறவையும் ஏற்படுத்தியது.

                              எங்கோ பிறந்து,எங்கோ படித்து,எங்கோ வாழ்க்கை நடத்தினாலும் நாளிதழ்  வாயிலாக பள்ளியை தேடி கண்டுபிடித்து மாணவிக்கு உதவிய நாளிதழின் வாசகிக்கு அன்பை,நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும்.இவர்கள் அதிகமாக புத்தகங்களை,பத்திரிக்கைகளை மட்டுமே வாசித்து வருகின்றனர்.வாட்சப்,மெயில்,முகநூல் போன்றவை பார்ப்பது கிடையாதாம்.பத்திரிக்கை,புத்தகங்கள் மட்டுமே பெரும்பாலும் படித்து வருகின்றனர்.அந்த வடிவத்தில் நாளிதழ்  படித்து இவ்வளவு தூரம் வந்தது மிக பெரிய விஷயம்.இது போன்று நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

             இன்று உள்ள பர பரப்பான வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயத்தை பாராட்டி கடிதம் எழுதுவதே மிக பெரிய விஷயம்.அப்படியே எழுதினாலும் அதில் ஏதேனும் பிரதி பலன் உள்ளதா என்று பார்ப்பவர்களே அதிகமான சூழ்நிலையில்,எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சுமார் 120+120 ஆக மொத்தம் 240 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து பள்ளியில் அனுமதி பெற்று மாணவியை சந்தித்து பாராட்டியதுடன் , மேல் படிப்பிற்கான முழு கல்வி தொகையையும் ஏற்று கொண்டு செய்வதாக  கூறியுள்ளது உண்மையில் வரலாற்றில் பதிய கூடிய நிகழ்வாகும் . 

 

பட விளக்கம் : நாளிதழை படித்து விட்டு அதன் மூலமாக  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி கல்விக்கு கை கொடுத்த ஜானகி அம்மையார், அவரது மகன் கார்த்திகேயன்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்,

 

 

No comments:

Post a Comment