தேவகோட்டையில் பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழாவுடன் பிரியாவிடை நிகழ்வு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியாவிடை விழா, ஒளி ஏற்றுதல் நிகழ்வாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விழா தொடக்கத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வரிசையாக நின்றனர். அவர்களுக்கு முன்பாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாணவிகளின் திருக்குறள் நடனம் நடைபெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்றி விழாவை தொடங்கினார். பின்னர் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி ஒளி பரப்பினர்.
எட்டாம் வகுப்பு மாணவி அபர்ணா உறுதிமொழி வாசிக்க, அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு அந்த ஒளியை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி, அவர்கள் அதை பெற்றுக்கொண்டனர்.
ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவி நந்தனா ஏற்புரை வழங்கினார். விழாவின் இறுதியில் ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள் தாங்கள் முதல் வகுப்பு முதல் இப்பள்ளியில் கல்வி பயின்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்களின் பிரியாவிடை விழாவில், மாணவர்கள் ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் காட்சி. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=ppndn1m1V6I
No comments:
Post a Comment