Saturday 30 September 2023

 பட்ஜெட் சுற்றுலா 

 மூன்று பீச், ஒரு துறைமுகம், நினைவுச்சின்னம்,  வரலாற்று சிறப்பு மிகுந்த மிகப் பெரிய கோவில் அனைத்தையும் ஒரே நாள் சுற்றுலாவில் காணலாம் 
























  காரைக்குடி - காரைக்குடியில் இருந்து காலை  9:10 மணிக்கு  வாடகை கார் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுலா கிளம்பினோம்.  

                               முதலில் காரைக்குடியில் இருந்து ஆவுடையார் கோவில் சென்றோம். ஆவுடையார் கோவிலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விதமான தகவல்களை கேட்டறிந்து ,கோவிலின் வரலாற்றை அறிந்து கோயிலில் தரிசனம் செய்தோம்.

                              ஆவுடையார் கோவில் நடுநிலைப்பள்ளியில்  பணியாற்றும் திசைகள் குழுவைச் சார்ந்த ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுரேஷ் அவர்கள்  பள்ளி விடுமுறை நாள் அன்றும் , பணியின் காரணமாக பள்ளிக்கு வந்ததாக தெரிவித்தார். 

                               திரு.சுரேஷ் அவர்கள்  எங்களுடன் கோவிலுக்கு வந்து தேனீர், பிரசாதங்கள் வாங்கி கொடுத்து, அவரது பள்ளிக்கும் எங்களை அழைத்துச் சென்றார். அவரது பணி பாராட்டத்தக்கது.

                                           அவரது பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் விடுமுறை நாளன்று வந்திருந்தது கூடுதல் சிறப்பு. ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் பள்ளியில் இருந்து விட்டு அங்கிருந்து பெருமருதூர் வழியாக மணல்மேல்குடி அடைந்தோம்.

                               மணல்மேல்குடியிலிருந்து சில கிலோமீட்டர்கள் இருக்கக்கூடிய கோடியக்கரை அடைந்தோம். கோடியக்கரைக்கு செல்லும் பாதை மிகவும் சுமாராக இருந்தது. இருந்தபோதிலும் அது வனப்பகுதி என்பதால் அவ்வாறு இருப்பதாக அறிந்து கொண்டோம்.

                             கோடியக்கரையில் நீத்தார் வழிபாடு கூடம்  என்று அமைந்துள்ளது. அங்கே பலரும் சென்று திதி கொடுப்பதாக  கூறினார்கள்.      

                                               அங்கு அடிக்கும் காற்றுக்கு அளவே இல்லை. மிகவும் அருமையாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதாவது கலங்கரைவிளக்கம் அமைந்துள்ள இடத்தில் அப்படி ஒரு காற்று அடித்து வருகின்றது.

                                         அதன் இடது பக்கத்தில் சிவ கோடி  விநாயகர் கோவில் உள்ளது. சிவ கோடி விநாயகர் கோவிலில் அருகே உள்ள கடற்கரைப்பகுதி காற்று இல்லாமல் அமைதியாக இருக்கின்றது.

                             அங்கே சில குழந்தைகள் குளித்து  விளையாண்டு கொண்டிருந்தார்கள். ஏராளமான படகுகளும்  நிற்கின்றன. அவை அனைத்தும் மீன்பிடி போடுகள்  என்று அறிந்து கொண்டோம்.

                          ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோடியக்கரையில் காற்று வாங்கி கொண்டு இருந்தோம். நாங்கள் சென்ற நேரம் மதியம் 12.45 மணி. அங்கே அதிகமாக யாருமே இல்லை.

                            நாங்கள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்துவிட்டு மீண்டும் கோடியக்கரையில்  இருந்து  கிளம்பி மணல்மேல்குடி சென்றோம். மணமேல்குடியில் திசைகள்  சூப்பர்வைசர் திருமதி. சிவயோகம் அவர்களை தொடர்பு கொண்டோம்.

                              திருமதி .சிவயோகம் அவ்ரகளுக்கு  உடல் நலம் சரியில்லாததால் அவர்களை சந்திக்க இயலவில்லை.அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் மணல்மேல்குடியிலிருந்து கட்டுமாவடி செல்லும் வழியில் அரசு ஆண்கள் பள்ளி முன்பாக ஆனந்தம் மெஸ்ஸில்  மதிய உணவு உண்டோம்.

                           மீன் சாப்பாடு மிகவும் நல்ல முறையில் இருந்தது. சாப்பாடும், ஒரு மீனும் வைத்தார்கள். ஒரு சாப்பாட்டின் விலை 110 ரூபாய் . திருப்தியான  முறையில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மனோரா நினைவு சின்னத்தை  அடைந்தோம்.

                                  மனோரா என்பது சரபோஜிதார்  பட்டினம் என்ற ஊராகும். அங்கு ஆங்கிலேயர்களுக்கும், நெப்போலியனுக்கும்  கடலில் ஏற்பட்ட போரில் நெப்போலியனை வெற்றி  கொண்டதை பாராட்டி தஞ்சாவூர் சரபோஜி மன்னர் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

                               அது அறுகோண வடிவில் அமைந்துள்ளது. மொத்தமாக 8க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட அந்த நினைவுச் சின்னத்தில் 23 மீட்டர் உயரம் உள்ளது.

                                    நாங்கள் இரண்டு மாடிகள்  மட்டுமே ஏறுவதற்கு அனுமதித்து  இருந்தார்கள். அந்த நினைவுச் சின்னம் கோட்டையை சுற்றிலும் அகழி அமைக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

                           யாரும் அவ்வளவு எளிதாக அந்த கோட்டையின் உள்ளே செல்ல முடியாது. சிலர் அங்கே சுரங்கம் இருப்பதாக கூறினார்கள். ஆனால் அங்கு உள்ளவரை கேட்டால், நான் பல காலமாக இங்கே இருக்கின்றேன். சுரங்கம் எல்லாம் தெரியவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

                                           ஆயுதக் கிடங்காக பாதுகாப்பதற்காக அதனை பயன்படுத்தி உள்ள்ளார்கள் . அருகே நல்ல பார்க் ஒன்று அமைந்துள்ளது. பெரிய ஆலமரங்கள் அமைந்துள்ளன.

                           பார்க்கில் சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாடும் வகையில் அனைத்து விதமான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க கூடிய மிக அருமையான இடம்.

                                     நினைவுச்சின்னமாக உள்ள கோட்டையை சுற்றி வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். பிறகு அங்கிருந்து பார்க்கிற்கு சென்றால் அங்கே ஒரு ஒரு மணி நேரம் நீங்கள் செலவிடலாம். 

                                             பார்க்கின் அருகிலேயே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கலங்கரை விளக்கத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. வெளியிலிருந்து பார்த்துக்கொள்ளலாம்.

                                   கலங்கரை விளக்கத்திலிருந்து அருகாமையிலேயே போட்டிங்  செல்கின்றார்கள்.  மிகவும் அருமையான போட்டிங். என்று தான் சொல்ல வேண்டும். 

                       ஏனென்றால் கடல் காற்று மிக பயங்கரமாக வீசுகின்ற அந்த கடல் காற்றின் அருகே அதை எதிர்த்து அவர்கள் போட்டில் அழைத்துச் செல்வது மிகவும் வித்தியாசமான ஒரு பயணமாக எங்களுக்கு அமைந்திருந்தது. 

                            சுமார் 20 நிமிடம் போட்டில் அழைத்துச் செல்கின்றனர். அந்த மகிழ்ச்சியோடு நாங்கள் வெளியே வந்து மீண்டும் மல்லிப்பட்டினம் நோக்கி சென்றோம்.

                                   சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மல்லிப்பட்டினம். மல்லிப்பட்டினத்தில் ஐயங்கார் பேக்கரி டீ,  சாப்பிட்டுவிட்டு  மல்லிப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்று பார்வையிட்டோம்.

                                          துறைமுகத்தில் காற்று என்றால் மிக அருமையான காற்று. அங்கே ஒரு அரை மணி நேரம் செலவழித்து விட்டு மீண்டும் அங்கிருந்து புதுப்பட்டினம் நோக்கி சென்றோம்.

                                  நீங்கள் ECR  ரோட்டில்  பட்டுக்கோட்டை நோக்கி செல்லும்போது, மல்லிப்பட்டினத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இடது பக்கத்தில் அருவி ஹோட்டல் என்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

                        அருவி  ஹோட்டலுக்கு எதிர்த்தார் போல் ஒரு சின்ன ரோடு செல்கின்றது. அதில் பயணித்தால் ,  இரண்டு கிலோமீட்டர் தொலைவில் டெல்டா பீச்  வருகிறது. மிகவும் அருமையாக இருந்தது.

                                     எனக்கு தெரிந்து மெரினா பீச்சை போன்று மிகப் பெரிய பீசாக அமைந்துள்ளது. ஆழமும் அதிகமில்லை .கடலும் சுத்தமாக இருந்தது. தண்ணீரும் சுத்தமாக இருந்தது. அந்த இடத்தில் மிகப் பெரிய கூட்டம் குளித்துக் கொண்டிருந்தது.

                                     யாருக்கும் பயமில்லை. அனைவரும் தைரியமாக மகிழ்ச்சியாக அந்த இடத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கூட்டமும்  அதிகமாகவே இருந்தது.

                                கடைகளும் மிக அதிக அளவில் இருந்தது. குதிரைகளில் சவாரி செய்ய முடியும். மேலும் ட்ரெயின் தண்டவாளமும்  அமைத்து உள்ளனர். 

                             பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் அங்கே இருந்தது. ஒரு நாள் காலையில் சென்றோம் ஆனால் கோயிலை பார்த்துவிட்டு சாப்பாடு கட்டிக்கொண்டு அங்கே சென்று நாம் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வரலாம்.

                               புதுப்பட்டினம் டெல்ட்டா பீச்சில் கடல் அலைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றது. சில மணி நேரங்கள் அங்கே செலவழித்து விட்டு அங்கிருந்து நாங்கள் மீண்டும் கட்டுமாவடி வழியாக அறந்தாங்கி அடைந்தோம்.

                     அறந்தாங்கியில் திசைகள் நண்பர் முபாரக் அவர்களை சந்தித்தோம்.கட்டுமாவடி  முக்கத்தில்  நந்தினி டீ ஸ்டாலில் நாங்கள் டீயும், சுடச்சுட வடையும்  சாப்பிட்டோம். 

                         அங்கிருந்து தங்கம் மிக்சர் கடை சென்றோம். தங்கம் மிக்ஸர் கடையில் கடலைப்பருப்பு , மிக்ஸர் அவர்களே தயாரிக்கும் சுவீட் போன்றவை மிகவும் நல்ல முறையில் இருந்தது.

                         அவற்றை வாங்கிக்கொண்டு திசைகள் பொருளாளர் முபாரக் அவர்களின் பர்வின் கடைக்கு  சென்றோம். கடையில் அவருடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நேராக வீட்டை அடைந்தோம்.

                                     திசைகள் பொருளாளர் திரு. முபாரக் அவர்கள் எங்களுக்கு ஸ்வீட்  பூரி கொடுத்தார். அதனை ஆளுக்கு ஒன்று இரவு வீட்டுக்கு வந்த உடன் சாப்பிட்டோம் . வயிறு நிறைந்து , அப்படியே உறங்கி விட்டோம்.முபாரக் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள் பல.

                            இரவு எட்டு மணிக்கெல்லாம்  காரைக்குடி அடைந்துவிட்டோம். பதினோரு மணி நேரம் எங்களது பயணம் இருந்தது.

                          பயணம் மிகவும் நல்ல முறையில் அமைவதற்கு திசைகள் அமைப்பை சார்ந்த ராவுத்தர் கனி அவர்களுக்கும், அண்ணாதுரை அவர்களுக்கும், சுரேஷ் சார் அவர்களுக்கும், சிவயோகம் அவர்களுக்கும், இன்னும்  நண்பர்கள் பலருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

                            காரைக்குடியை சேர்ந்த வாக்கர்ஸ் கிளப் நண்பர்கள் திரு.சர்புதீன் அவர்களுக்கும்,  திரு. சாதிக் அவர்களுக்கும் இது தொடர்பாக பல்வேறு ஆலோசனையை வழங்கியதற்கு அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

                               எங்களது கார் பயணம் இனிமையாக அமைய உதவியாக இருந்த  நாங்கள் சென்ற காரின் ஓட்டுநர் தங்கராஜ் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                    இனிமையான பயணம் மினி பட்ஜெட்டில் ஒரு நாள் சுற்றுலாவாக அருமையாக அமைந்தது. இந்த பயணத்தில் நாங்கள் மொத்தமாக பயணித்த தூரம் 201 கிலோ மீட்டர்.

                                எங்களுக்கான கார் கட்டணம் 2 ஆயிரத்து 780 ரூபாய். கோடியக்கரை பீச்சிற்கு  இதுதான் நேரம் என்றெல்லாம் இல்லை. காலை முதல் மாலை வரை நாம் சென்று வரலாம்.

                               மனோராவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டிங்  பயணிக்கலாம். பெரியவர்களுக்கு ரூபாய்  100. சிறியவர்ளுக்கு  ரூபாய் 50. 

                              காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை  நினைவுச் சின்னத்தையும் பார்க்கலாம்.. புதுப்பட்டினம் பீச்சில் எந்தவிதமான நேரமும் கிடையாது. 

                                      மல்லிபட்டினம் துறைமுகத்திற்கும் நேரம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயணித்து நாம் சென்று பார்த்து வரலாம். எனவே நீங்கள் மிக குறைந்த  செலவில்  ஒரு நாள் டூர் இருக்கு இந்த பகுதிகளை மிக அழகாக பார்த்து வரலாம். நன்றி நண்பர்களே.

                                கர்நாடக, கேரளாவில் பல இடங்களில் சுமாரான பீச்சுகளை கூட மிக அருமையாக அமைத்து நல்ல சுற்றுலா தலமாக மாற்றி உள்ளனர். தமிழக சுற்றுலா துறையும் இந்த இடங்களை சுற்றுலா தலமாக மாற்றி அமைத்தால் பெரும்பாலானோர் வருவார்கள்.அரசுக்கும், மக்களுக்கும் வருமானம் வரும். செய்வார்களா ?............

 தோழமையுடன்

ஜெயம்

காரைக்குடி.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=dpktNR5mEiE

https://www.youtube.com/watch?v=RhwBaJZz0_4

https://www.youtube.com/watch?v=n18EpoCN3hc

https://www.youtube.com/watch?v=YqiqJXNt7bU

https://www.youtube.com/watch?v=3QE--icqtDY







No comments:

Post a Comment