Monday, 15 June 2026

பல வண்ண புத்தகப் பைகள் வழங்கிய தமிழக அரசு – மாணவர்கள் உற்சாக வரவேற்பு




தேவகோட்டை, ஜூன் :

தமிழக அரசின் விலையில்லா கல்வி நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பல வண்ணங்களிலான புத்தகப் பைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களான சாந்தி, டெய்சி, கலைமணி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். மேலும், மாணவர்களிடம் திருக்குறள் எழுதச் செய்து, கல்வி மற்றும் ஒழுக்க நெறிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதிய வடிவமைப்பில் பல வண்ணங்களில் வழங்கப்பட்ட புத்தகப் பைகளை பெற்ற மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தமிழக அரசின் கல்வி நலத் திட்டங்கள் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிப்பதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

பட விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பல வண்ண புத்தகப் பைகளை, பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சாந்தி, டெய்சி, கலைமணி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய காட்சி.

No comments:

Post a Comment