Friday, 5 June 2026

 உலக சுற்றுச்சூழல் தினம்: மாணவர்கள் பங்கேற்புடன் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி





தேவகோட்டை, ஜூன் 5:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தேவகோட்டை நகராட்சி களப்பணி உதவியாளர் ரஞ்சித் குமார் மாணவர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டார்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், மரங்களின் பங்கு, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மற்றும் செடிகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மரங்கள் காற்றை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மழைப்பொழிவை அதிகரிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், உயிரினங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என எடுத்துரைக்கப்பட்டது.

“ஒரு மாணவர் – ஒரு மரம்” என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும் என்பதையும் மாணவர்கள் உறுதியேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment