மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம்
பெற்றோர்–ஆசிரியர் கலந்துரையாடலில் தலைமையாசிரியர் வலியுறுத்தல்
தேவகோட்டை, ஜூலை :
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்–ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டு, மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் முழுமையான வளர்ச்சி குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
கூட்டத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மாணவர்களுக்கு இளம் வயதிலிருந்தே நிதி மேலாண்மை மற்றும் நிதித் திட்டமிடலின் அவசியத்தை பெற்றோர் உணர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சேமிப்பு பழக்கம், செலவினங்களைத் திட்டமிடுதல், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல் போன்ற நல்ல நிதி ஒழுக்கங்களை சிறு வயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் எதிர்காலத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக முடியும் என்றார். மேலும், பெற்றோர்களும் குடும்ப நிதித் திட்டமிடலை முறையாக மேற்கொண்டு, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினராக தேவகோட்டை வட்டார வளமையத்தின் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர் பிரசாத் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகள், பேச்சுத் திறன், நடத்தை மற்றும் சமூக பழக்கவழக்கங்களை பெற்றோர் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றார். குறிப்பாக, ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையிலான வளர்ச்சிக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சி வயதுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், பேச்சுத் தாமதம், நடத்தை மாற்றம், பிறருடன் பழகுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மூலம் குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்றும், காலதாமதம் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய சூழலில் குழந்தைகளின் அதிகப்படியான மொபைல் போன் பயன்பாடு கவலைக்குரியதாக உள்ளது என்றார். நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் குழந்தைகள் பெற்றோரின் அறிவுரைகளைப் பின்பற்றுவதிலும், சமூக உறவுகளை வளர்த்துக்கொள்வதிலும் சிரமம் அடையக்கூடும் என்பதால், மொபைல் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து, விளையாட்டு, வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் பலரும் பள்ளியில் மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டிப் பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் நிவேதா ஆகியோர் செய்திருந்தனர்.
பட விளக்கம்:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்–ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை வட்டார வளமையத்தின் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர் பிரசாத் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார். இதில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=jOqaJSMYiHY
No comments:
Post a Comment