தேசிய வாக்காளர் தின விழா
அண்ணன் ,அக்காக்களை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
சப் கலெக்டர் பள்ளி மாணவர்களிடம் பேச்சு
வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு சப் கலெக்டர் பரிசு வழங்குதல்
மாணவிகளுடன் மாணவர்களும் வாக்காளர் விழிப்புணர்வு கோலம் போட்டு அசத்தல்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கோலப்போட்டி களுடன் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது .
இப்பள்ளியில் தொடர்ந்து பன்னிரெண்டாவது ஆண்டாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார் .தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவரும் உங்கள் அண்ணன் அக்காவிடம் கூறி வாக்களிக்க சொல்லுங்கள்.
17 வயது ஆகியிருந்தால் இப்பொழுதே புதிய வாக்காளராக விண்ணப்பம் அளிக்கலாம். முன்பு இருந்த நடைமுறை இல்லாமல் தற்பொழுது வருடம் முழுவதும் வாக்காளர் ஆவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நாளாக ஜனவரி 25ஆம் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நாளாக தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.
படித்தவர்கள் அனைவரும் வாக்களித்தால் நல்லவர்களை நாம் தேர்ந்தெடுக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். படித்தவர்கள் அனைவரும் கடமையை அவசியம் தவறாமல் செய்ய வேண்டும்.
எனவே ஐந்து வருடமா என்று யோசிக்காமல் உங்கள் பெற்றோரிடமும், உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடம் கூறி வாக்களிக்க சொல்லுங்கள்.
தேர்தல் நாள் அன்று உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்களிக்க சொல்லுங்கள்.
நீங்கள் பள்ளியில் வரைந்திருந்த கோலங்களும், ஓவியங்களும் மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். என்று கூறினார்.
முன்னதாக வாக்காளர் உறுதி மொழியை தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் உட்பட மாணவர்களும் ,ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வில் தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் பிரகாஷ், தாலுகா அலுவலக வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம உதவியாளர் அருணாச்சலம், தேவகோட்டை நகராட்சி வருவாய் உதவியாளர் ஸ்ரீதரன்,நகராட்சி சுகாதார பணிகள் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்றனர்.
வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கவிதை,பேச்சு போட்டியில் மாணவிகள் கனிஷ்கா, கவிஷா,தவதுர்கா ஆகியோரும்,ஓவிய போட்டியில் சுபிக்ஷன்,பிரஜித்,சாதனஸ்ரீ ஆகியோரும், கோலப்போட்டியில் முகல்யா , சாதனஸ்ரீ , ரித்திகா ஆகியோரும் பரிசு பெற்றனர்.
ரங்கோலி போட்டியில் மாணவிகளுடன் மாணவர்களும் கோலம் வரைந்து அசத்தினார்கள்.சுமார் 25-க்கும் மேற்பட்ட கோலங்கள் போடப்பட்டன. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழாவில் தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை தாங்கி ரங்கோலி,கவிதை,பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ஏராளமான மாணவர்களும்,மாணவிகளும் கோலப்போட்டியில் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=qPlAhZbMia4
No comments:
Post a Comment