இசை பயிற்சி முகாம்: "இசையைக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வளமாகும்" – இசை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தேவகோட்டை, ஆக. 3: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இசைப் பயிற்சி முகாம் உற்சாகமாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவி நந்தனா வரவேற்புரை வழங்கினார்.
இசை ஆசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் சாந்தி மாணவர்களிடம் இசையின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசுகையில், "இசையைக் கற்றுக்கொள்வது வாழ்க்கையை வளமாக்கும். இசை என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல; அறிவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் சிறந்த கலை. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு இசைக் கருவியையாவது முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றனர்.
மேலும், இசைப் பயிற்சி பெறுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதுடன், இடது மற்றும் வலது மூளைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மேம்படுகிறது. குறிப்பாக, பியானோ வாசிப்பது மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் இசைப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இசைத் துறையில் சிறந்த முன்னேற்றங்களை அடைய முடியும் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் மாணவி ரித்திகா நன்றியுரை வழங்கினார்.
படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இசைப் பயிற்சி முகாமில் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையேற்றார். இசை ஆசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் சாந்தி மாணவர்களுக்கு இசையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=X1QgBXBI3CQ
No comments:
Post a Comment